
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுலோச்சனா நகரை சேர்ந்தவர் கேசவன் என்பவருடைய மகன் மணி( 20). இவருடைய நண்பர் கீரப்பாளையம் மேலத்தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அஜித்குமார்(24) ஆகியோர் கடந்த 21-ந்தேதி சிதம்பரத்தில் இருந்து கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று திரும்பியுள்ளனர். வாகனத்தை மணி ஓட்டியுள்ளார். இவர்கள் சிதம்பரம் அருகே உள்ள அம்மா பேட்டை கான்சாகிப் வாய்க்கால் பாலத்தில் உள்ள, வளைவு பகுதியில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் வாய்க்காலின் உள்ளே விழுந்தனர். இதில் அஜித்குமாருக்கு நீந்தி கரைக்கு திரும்பினார்.
ஆனால் வண்டியை ஓட்டி வந்த மணியை காணவில்லை. இதுபற்றி உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அண்ணாமலைநகர் ஆய்வாளர் வீரமணி தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரசோழன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வாய்க்காலுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தேடியும் மணியை கண்டு பிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் 23-ந்தேதி காலை சிதம்பரம் அருகே உள்ள சாரதராம் நகர் அருகே உள்ள கான்சாகிப்வாய்காலில் அவரது உடல் ஒதுங்கியது. இதனை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த உறவினர்களுடன் ஒப்படைத்தனர்.
இது குறித்து காவல்துறை சார்பில் வாகனம் ஓட்டும் போது மதுஅருந்தி விட்டும் தொலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று காவல்துறை மற்றும் பள்ளிமாணவர்கள் கொண்டு எவ்வளவோ விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேனர் வைத்தாலும் சிலர் கண்டுகொள்ளாமல் செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. இவர்களும் தலைகவசம் அணியாமல் மதுபோதையில் வண்டியில் வந்துள்ளனர். அதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது வாகனம் ஓட்டும் போது மது அருந்தி யாரும் வண்டி ஓட்டக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.