Skip to main content

அமைச்சர் சக்கரபாணியை தூக்கிக்கொண்டாடும் ஆட்டோ ஓட்டுநர்கள்! 

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Auto drivers lifting Minister Chakrabany

 

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் வென்று தொடர்ந்து ஆறாவது முறையாக தி.மு.க. கோட்டையாக சக்கரபாணி அத்தொகுதியை தக்கவைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவியை பெற்றார் சக்கரபாணி. அதோடு மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

 

இவர், தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ஒரு வருடத்திற்குள்ளேயே நூறு கோடி ரூபாய்க்கு மேல் திட்டப் பணிகளையும், தொகுதியில் கொண்டு வந்ததுடன் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறார். 

 

இந்த நிலையில் அந்தத் தொகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களை வாழ வைக்கவும் வழிவகுத்து கொடுத்து இருக்கிறார். கடந்த 16ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் உள்ள கலைஞர் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் தொகுதியில் உள்ள நகரம், ஒன்றிய பகுதிகளில் இருக்கக்கூடிய நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர் 160 பேருக்கு புதிய ஆட்டோக்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். அதோடு ஆட்டோவையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதுமட்டுமின்றி தானும் ஆட்டோவை ஓட்டினார். அதுபோல் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக விழாவில் கலந்து கொண்டு புதிய ஆட்டோ சாவியை அமைச்சர் சக்கரபாணியிடம் வாங்கிச் சென்றதின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பங்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

 

Auto drivers lifting Minister Chakrabany

 

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “முதல்கட்டமாக இந்த புதிய ஆட்டோக்களை உங்களுக்கு வழங்கி இருக்கிறேன். அதை நல்லபடியாக பயன்படுத்தி உங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். பொதுமக்களின் நாடிதுடிப்பை அறிந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். நானும் ஆட்டோவில் பலமுறை போயிருக்கும்போது, அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை கேட்டிருக்கிறேன். தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அதுபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் இதன்மூலம் உங்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும். பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

 

இதுசம்மந்தாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள ‘நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்’ சங்கத் தலைவர் செந்தில்குமார் உள்பட ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘பத்து வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள சத்யா நகருக்கு ஆட்டோவில் அண்ணன் சக்கரபாணி செல்லும்போது எங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டார். அதை மனதில் வைத்து தான் எங்களுடைய கனவை அமைச்சர் நினைவாக்கி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நகரில் உள்ள 12 ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், ஒன்றியத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் இருக்கக் கூடிய ஓட்டுநர்கள் யார்? யாருக்கு புது ஆட்டோ வேண்டுமோ அவர்களை மனு கொடுக்க சொல்லுங்க என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலும் குறைந்த பட்சம் பத்து பேர் வீதம் மனு கொடுத்ததின் மூலம் நகரம், ஒன்றியம் என 160 ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க மனு கொடுத்தனர். 

 

Auto drivers lifting Minister Chakrabany

 

அவர்கள் எல்லோருக்குமே புதிய ஆட்டோக்களை அமைச்சர் வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த நன்றியை எங்கள் குடும்பங்கள் உயிருள்ள வரை மறக்க மாட்டோம். அந்த அளவுக்கு எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்து ஒரு ஆட்டோவிற்கு ஓனராகவும் ஆக்கி இருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகை ஆட்டோவை ஓட்டுவதின் மூலம் எல்லா செலவும் போக வீட்டிற்கு ரூ.200 கொண்டு போவதே அரிதாக இருந்தது. அதன்மூலம் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தான் சாப்பிட்டு வந்தோம். ஆனால் இப்ப சொந்தமாக புது ஆட்டோ ஓட்டுவதின் மூலம் பெட்ரோல், கேஸ் செலவு போக தினசரி 500 வரை வீட்டிற்கு கொண்டு போய் வருவதின் மூலம் மூன்று நேரமும் சாப்பிட்டு குடும்ப செலவும் பார்க்கும் அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்களின் வீடுகளுக்கே அமைச்சர் விளக்கேற்றி கொடுத்திருக்கிறார். அதை காலத்திற்கும் மறக்காமல் நன்றியோடு இருப்போம். அதோடு மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தேவைப்பட்டால் புது ஆட்டோ வாங்கித் தரவும் அமைச்சர் தயாராக இருக்கிறார்” என்றும் கூறினார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.