Skip to main content

கல்வி, வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர் கவனத்திற்கு!

Published on 14/12/2023 | Edited on 15/12/2023
Attention those who go abroad for education and employment

வெளிநாடுகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் தமிழர்கள் நலன் கருதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களில் முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையம் அமைத்துத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “வணிகம், வியாபாரம், கல்வி போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் தொன்றுதொட்டு வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு சூழ்நிலைகளால் சில நேரங்களில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் தமிழர்களுக்கு உறுதியளித்தபடி வேலை, வேலை நேரம், ஊதியம், உணவு, உறைவிடம், போன்ற பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொள்கின்றனர்.

அவ்வாறு அயலகத் தமிழர்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் உதவியுடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இதுபோன்ற குறைகளைச் சரிசெய்யக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, அவர்கள் செல்லும் நாட்டின் சட்ட திட்டங்கள், கலாச்சாரம், மொழி மற்றும் வேலை தொடர்பான குறைந்தபட்ச முன் தயாரிப்புடன் செல்ல ஏதுவாக ஏற்கனவே சென்னையில் முன் பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகத் தமிழ் நாட்டிலிருந்து செல்லும் இளைஞர்கள் இது குறித்து போதிய முன் அனுபவமோ போதிய தகவல்களோ இல்லாமல் செல்லும் நிலையே உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு பெறத் தேவையான முன்பயண புத்தாக்க பயிற்சி பெற நீண்ட தூரம் பயணித்தும், கூடுதல் செலவு செய்தும் சென்னைக்கு வர வேண்டிய நிலையே உள்ளது. அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் அவரவர் வசிக்கும் பகுதியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். இந்த அடிப்படையில் 'முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையம்' சென்னை மட்டுமின்றி வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்பவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வகையில் ரூ.54 லட்சத்து 75 ஆயிரம் செலவில் முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள் அமைத்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன் பயண புத்தாக்கப் பயிற்சி மையத்தில், வேலைத்தேடி வெளிநாட்டிற்குச் செல்லும் அனைவருக்குமான முன் பயண புத்தாக்க பயிற்சி, கட்டடத் தொழிலாளர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் வீட்டு வேலை போன்ற பணிகளுக்காகச் செல்பவர்களுக்கு இப்பணிகளுக்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தெளிவுகள் ஏற்படுத்துதல். ஆங்கிலம் மற்றும் அரபு மொழி தொடர்பான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகளுடன் தேவைக்கேற்ப வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்களைக் கையாளுதல் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.