
'தமிழக காவல் நிலையங்களில் கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் உள்ளதா?' என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குற்ற வழக்கு ஒன்றில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேனின் தந்தை இப்ராஹீம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'என்னுடைய மகன் ஜாகிர் உசேன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பொழுது இடது காலிலும், வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை புழல் சிறை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'கைது செய்யப்பட்டவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'ஜாகீர் உசேன் கழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே மேல் சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது குறிப்பிட்ட நீதிபதிகள், 'தமிழக காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழிக்கு விழும் வகையில் கழிவறைகள் உள்ளதா? ஏன் குற்றவாளிகள் மட்டும் காயமடைகின்றனர். அந்த நிலையில்தான் கழிவறைகள் உள்ளதா?' எனக் கேள்வி எழுப்பினர். காவல் நிலைய கழிவறைகளை காவல் ஆய்வாளர்களும் பயன்படுத்துகிறார்கள் என்றால் ஏன் அவர்கள் மட்டும் வழுக்கி விழ வில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
'சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட மனுதாரரின் மகன் ஜாகிர் உசேனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்' என புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.