Skip to main content

கள்ளக்குறிச்சியில் கோட்டை விட்டது ஏன்? - அதிமுக முன்னாள் அமைச்சர்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
AIADMK struggle against DMK government on illicit liquor issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 59க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விஷச்சாராய உயிர்பலிக்கு தார்மிகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும், இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ் நாட்டில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். 

அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில்  திங்கள்கிழமை(24.6.2024) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத்  தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

இதில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் எந்த அதிகார சக்தியும் காவல்துறை மீது பாயமுடியாது. அவரின் பொறுப்பில் இருந்தது காவல்துறை. சிபிசிஐடி வசம் கள்ளக்குறிச்சி வழக்கு இருந்தால் மீண்டும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். எனவே சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். பட்டியலினமக்கள் அதிக அளவில் உயிரிழந்தும் திருமாவளவன் வாய் திறக்கவில்லை. முத்தரசன், பாலகிருஷ்ணன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன் என எவரும் வாய் திறக்கவில்லை. மரக்காணத்தில் விஷ சாராய உயிழப்பு ஏற்பட்ட போது இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என்ற முதல்வர், மீண்டும் கள்ளக்குறிச்சியில் கோட்டை விட்டது ஏன்?” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்