Skip to main content

ஆச்சர்யப்படுத்தும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை தகவல்கள்!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

ADICHANALLUR

 

'ஆதிச்சநல்லூர்' - வரலாற்று அறிஞர்களுக்கு மட்டுமல்ல, வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புவர்களுக்கும் பிடித்த இடம். கீழடி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததென்றால், அதற்கு முந்தைய - சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானது என சில ஆய்வாளர்களால் கருதப்படுகிற ஆதிச்சநல்லூர், எந்த அளவிற்கு உண்மைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும்?. அந்த உண்மைகள் வரலாற்றை மாற்றலாம், புதிய கோணத்தை தரலாம். எனவேதான் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

 

ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்டது. அந்த அகழாய்வு பணிகள் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிய பின்னரும், அதன் ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமென வரலாற்று ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தனர். 

 

இந்தநிலையில் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விட பகுதிகள் இல்லை என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக இக்கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளன.

 

ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளவை: ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் இரும்பு காலத்திலேயே அரிசி மற்றும் தினை வகைகளை விளைவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களைப் புதைக்கும்போது தாழியில் அரிசி மற்றும் பச்சை பயிர் உள்ளிட்டவற்றை வைத்து புதைக்கும் சடங்கை மேற்கொண்டிருக்கின்றனர். அந்த அரிசியை ரேடியோ கார்பன் டேட்டிங் செய்தபோது அது கிமு. 850 காலத்தைச் சேர்ந்ததாக இருந்துள்ளது. (கிட்டத்தட்ட 2800 ஆண்டுகளுக்கு முந்தையது). ஆதிச்சநல்லூர் மக்கள் சக்கர தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். அங்கு அடுக்குகள் கொண்ட பானை சூளைகள், மணி தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது அங்கு வாழ்ந்த மக்கள் நிலையான வாழ்வை மேற்கொண்டிருந்ததை தெரிவிக்கிறது. அப்பகுதி மக்கள் முத்துகுளித்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆதிச்சநல்லூரில் கருப்பு, சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கிண்ணங்கள், குவளைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தின் டி.கல்லப்பட்டியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைப் புள்ளிகள் கொண்ட ஓவியங்களைப் போலவே, ஆதிச்சநல்லூரிலும் வெள்ளைப்புள்ளி ஓவியங்கள் கொண்ட கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடப் பகுதிகளுக்கும், இடுகாட்டுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்யமுடியவில்லை. கலைப்பொருட்களைக் கவனமாக சேகரித்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்தால் அதன் காலம் கிமு 1500 (3000 ஆண்டுகளுக்கு பின்னால்) வரை செல்லும்.

 

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள், விரைவில் வெளியிடப்பட வேண்டுமென்பதும், அங்கு தொடர்ந்து அகழ்வாய்வு நடைபெற வேண்டும் என்பதே தமிழக வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஞானவாபி மசூதி ஆய்வுப் பணி விவகாரம்; உச்சநீதிமன்றம் அதிரடி

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Interim ban on survey work at Gnanawabi Masjid

 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்துமதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது.  மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு ஜூலை 26ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதார்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 

 

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மூக்குத்தி, தோடு

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

தமிழக அரசு தொல்லியல்துறை பொற்பனைக்கோட்டையில் தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு (LIDAR) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்ததைக் கண்டறிந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழாய்வு பணியினை மே மாதம் 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.

 

பொற்பனைக்கோட்டை அகழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை திடல் வாழ்விட பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரராஜன் என்பவர் நிலத்தில்  4 குழிகளும் மாரிமுத்து, கருப்பையா, பழனியப்பன், ரங்கசாமி ஆகியோரின் நிலத்தில் தலா 1 குழிகளும் தோண்டப்பட்டு வருகிறது. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோருடன் அகழாய்வு பணிகளானது நடைபெற்று வருகிறது அகழாய்வு பணிக்கு 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே A1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.  இதுவரை வட்டச்சில்லுகள் (Hopscotch)-  49, கென்டி மூக்குகள்(Spout)- 2, கண்ணாடி வளையல்கள்(Glass Bangle)- 4, கண்ணாடி மணிகள் (Beads)- 95, சுடுமண் விளக்கு (TC Lamp)- 1, தக்களிகள்  (spindle whorl)- 2, காசு (Coin)- 1, சூதுபவளமணி (carnelian Bead)- 1 மெருகேற்றும் கற்கள் (rubbing Stone)- 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு (Graffiti )2ம்  கிடைத்துள்ளது.

 

மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள் (Glazed Ware), கருப்பு நிற பானை ஓடுகள் (Black Ware ), கருப்பு- சிவப்பு நிற பானை ஓடுகள் (Black and Red Ware), மேற்கூரை ஓடுகள் (roof tile), துளையிடப்பட்ட பானை ஓடுகள் (perforated Ware)-2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளது.அதை தொடர்ந்து பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் இன்று பொற்பனைக்கோட்டை அகழாய்வில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

H2 எனும் குழியில் 133.cm ஆழத்தில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி / தோடு Nose Stud / ear studs ஒன்றும், B1 எனும் குழியில் 140.cm முதல் 145.cm ஆழத்தில் எலும்பு முனை கருவி (Bone point) மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய  150.cm முதல்160.cm ஆழத்தில் கார்னீலியன் (carnelian bead)  பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது. 

 

எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்ககூடியவை. தற்போது இங்கு கிடைத்துள்ள வட்ட வடிவிலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் சூதுபவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆறு இதழ் கொண்ட 0.26 கிராம் எடையுடைய தண்டு உடைந்த தங்க மூக்குத்தி / தோடு கிடைத்திருப்பது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

 

மேலும் அகழாய்வுக் குழிகள் ஆழப்படுத்தும் போது ஏராளமான தொல் பொருட்கள் கிடைப்பதுடன் பண்டை தமிழர்களின் நாகரீகம் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.