
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா(98) இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார்கள். மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட,செல்லையா தாத்தா மட்டும் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்தார்.

தன்னுடைய பிழைப்பிற்காக 98 வயதிலும் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி இறக்கி வியாபாரம் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தார். நுங்கு இல்லாத காலங்களில் வெளியில் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்தால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் தன் வாழ்க்கையை கழித்தார்.

இந்த செய்தியைக் கடந்த 2020 ஏப்ரல் 23 ந் தேதி நக்கீரன் இணைய தளத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தோம். மேலும் அவருக்கு உதவித் தொகை கிடைக்கவும் கோரிக்கை வைத்திருந்தோம். இதைப்பார்த்த அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, செல்லையா பற்றிய தகவல்களை வருவாய்த்துறையினரை நேரில் ஆய்வு செய்து அறிக்கை பெற்ற முதியவருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அடுத்த சில நாட்களில் தள்ளாத வயதிலும் உழைப்பை நம்பி வாழும் முதியவருக்கு முதியோர் உதவித் தொகை கிடைப்பதற்கான ஆணையை ஆணை வழங்கினார்.

அதன் பிறகு இந்த ஆண்டு வரை பனை மரம் ஏறுவதை நிறுத்தாத பனை ஏறி செல்லையா தாத்தா கடந்த மாதத்தில் ஏணி உதவியுடன் சில பனை மரங்கள் ஏறி நுங்கு பிஞ்சாக உள்ளது சில வாரங்களில் இறக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். யார் தயவும் இல்லாமல் கடைசிவரை தனியாகவே வாழ்ந்த பனையேறி செல்லையா தாத்தா உயிரிழந்த நிலையில் அவரது மகன் வீட்டில் அஞ்சலிக்காக உடலை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கொத்தமங்கலம் கிராம மக்கள் கூறும்போது, “பல வருடங்களாக தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்து வாழ்ந்து வந்த முதியவருக்கு நக்கீரன் இணைய செய்தி மூலம் முதியோர் உதவித்தொகை கிடைத்தது. இந்த வருடம் வரை பனை மரம் ஏறினார் என்பது சிறப்பு. இப்ப அவர் உயிரிழந்தது மிகுந்த சோகமாக உள்ளது” என்கின்றனர்.