Skip to main content

நபர் ஒன்று தான் ஆனால் பட்டியல்படி 11 ஓட்டு போடலாம்... இது தான் தேர்தல் கமிஷன் லட்சணம் என பொதுமக்கள் விமர்சனம்

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 100 சதவீதம் நடுநிலையாக, நேர்மையாக நடந்து கொள்கிறது என்று அதன் ஆணையாளர் பழனிச்சாமி பத்திரிகை பேட்டியெல்லாம் கொடுக்கிறார். ஆனால் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் இனி நடக்கப் போகிற நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரை எல்லாம் குளறுபடிகள் தான். 

 

Voter list



பல வருடங்களாக ஒரே முகவரியில் வசிப்பவர்களில் பல பேருக்கு இப்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ஆனால் கின்னஸ் சாதனையாக ஒரே நபருக்கு வாக்காளர் பட்டியலில் 11 ஒட்டு போட இடம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த பெருங் கூத்து ஈரோட்டில் நடந்துள்ளது.
 

ஈரோடு மாவட்டத்தில் சென்ற டிசம்பர் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 24 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 64 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும், 79 மாற்று பாலினத்தவரும் என ஆக மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியல் வெளியிட்டது மாவட்ட நிர்வாகம். அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். 


 

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு, மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 912 மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகளில் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவம், பெயர், போட்டோ திருத்தம் செய்தல் போன்ற பல பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல முறை சிறப்பு முகாம் நடந்து வந்ததால், ஒரு சில வார்டுகளில் திருத்தப்படாமல் இருப்பது தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வருகிறது. 


 

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் பாகம் 109 ல், முனியப்பன் கோவில் வீதி, நேதாஜி நகர், விஎன்எம் சின்ன கவுண்டர் நகர் பகுதிக்கான வாக்காளர் பட்டியலில், வரிசை எண் 42 ல் இருந்து 52 வரையில், வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டும் மாறியுள்ளது, ஆனால் பெயர்: ரகுபதி, தந்தை பெயர் வெங்கடாங்லம், அவரது வீட்டு எண் மற்றும் வயது 56 என ஒரே படம் மற்றும் முகவரி 11 இடத்தில் இடம்பெற்றுள்ளது.
 

இது குறித்து  18வது வார்டு அரசியல் கட்சியினர் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி பாகம் 109 ல் வாக்காளர் பட்டியில் ஒரே படம், முகவரிகொண்டை 11 இடத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். பட்டியல்படி அவர் 11 ஓட்டு போடலாம். இந்த தவறை சரி செய்யாமல் வாக்காளர் பட்டியலில் அப்படியே உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இது தான் தேர்தல் கமிஷன் லட்சணம்" என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.