
கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 'இரட்டை இலை'யில் நிற்கச் சொன்னதற்காக, அதிமுக கூட்டணியை விட்டு விலகி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தவர் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் 06 இடங்களில் நிற்பதற்குச் சம்மதம் தெரிவித்த வாசன், இரட்டை இல்லை சின்னத்தில் நிற்பதற்கும் 'ஒகே' சொன்னார். இதனால், கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் எழுந்தது. கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை வாசனின் தீவிர ஆதரவாளரான கோவை தங்கத்துக்காக கேட்கப்பட்ட 'வால்பாறை' (கோவை மாவட்டம்) தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. வால்பாறை தொகுதி நமக்கு ஒதுக்கப்படாததற்கு அமைச்சர் வேலுமணிதான் காரணம், ஆகையால் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள் என வலியுறுத்தியுள்ளனர் தங்கத்தின் ஆதரவாளர்கள்.
இந்நிலையில், இன்று (17.03.2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், கோவை தங்கம், வால்பாறையில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
இன்று (17.03.2021) வெளியான 'நக்கீரன்' இதழில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனின் தீவிர விசுவாசியான கோவை தங்கத்தை அவரின் ஆதரவாளர்கள், வால்பாறை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட வலியுறுத்துவதாக செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.