Skip to main content

“நிர்வாகிகளின் அரிய தொண்டுள்ளத்துக்கு நான் தலைவணங்குகிறேன்” -மு.க.ஸ்டாலின் அறிக்கை! 

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
mk stalin



இது சாதாரணமான நேரம் அல்ல; கரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தி.மு.க. நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிகாட்சி வழியாக 16.05.2020 சனிக்கிழமை நடந்தது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

கரோனா மாதிரியான கொடிய நோய்த் தொற்றை இதுவரைக்கும் நாம் பார்த்தது இல்லை. அதனால் இதுவரை நடத்தப்படாத வகையில் இன்றைய (நேற்று) தினம் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். கரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது என்று சொல்லி, வீட்டுக்குள் முடங்கி இருக்கவில்லை தி.மு.க.; முன்களத்தில் நின்று முயன்று அயராது பணியாற்றினார்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
 

ஊரடங்கை அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, வாழ்வாதாரத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை. உழலும் தமிழ் மக்களைப் பற்றி உளப்பூர்வமாகக் கவலைப்பட்ட ஒரே இயக்கம் தி.மு.க.தான். முக கவசங்கள், கிருமிநாசினி திரவம், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள், பல்வேறு இடங்களில் நிதி உதவிகள் என மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வழங்கியதாக மாவட்டச் செயலாளர்கள், ஊர் வாரியாக, நகர் வாரியாக புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.
 

அவர்களுடைய இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கவே, “ஒன்றிணைவோம் வா” என்ற செயல்திட்டத்தை அறிவித்திருந்தோம். எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டுமே செய்ய முடிந்தவை. அரசாங்கம் செய்ய வேண்டிய காரியங்களை மொத்தமாகத் தொகுத்து, சென்னையில் தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம்.
 

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளார்கள். இந்தக் கோரிக்கைகளை படிப்படியாக அரசு நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
 

மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? முதல்-அமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? அமைச்சர்கள் செயல்படுகிறார்களா? என்ற ஐயப்பாடே எழுகிறது. அந்தளவுக்கு மக்கள் எல்லா வகையிலும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், 3 மாத காலத்திற்குப் பிறகு, தமிழக அரசு இன்னமும் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் செயல்படுவதை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆதங்கத்துடன் சுட்டிக் காட்டினார்கள்.
 

இயன்றதைச் செய்தோம் இல்லாதவர்க்கு. அரசாங்கம் செய்ய வேண்டியதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்த மகத்தான பணி, இனிவரும் நாட்களிலும் தொய்வின்றித் தொடரும். இப்பணியைக் களத்தில் நின்று செவ்வனே ஆற்றிய மாவட்ட செயலாளர்களுக்கும், அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து துணை நின்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.
 

இது சாதாரணமான நேரம் அல்ல; கரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தி.மு.க. நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். பேராபத்துக் காலத்தில் தி.மு.க. எப்படிச் செயல்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறோம். தி.மு.க. நிர்வாகிகள் எத்தகைய தொண்டுள்ளத்துடன் செயல்படும் வீரர்கள் என்பதைத் தலைமைக்கும் காட்டி இருக்கிறார்கள்.
 

இன்னும் நம் முன் ஏராளமான பணிகள் எதிர்பார்த்து அணிவகுத்து நிற்கின்றன. அப்பணிகள் குறித்த திட்டமிடுதல்களுடன் இன்றைய மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம். முன்னெப்போதும் போலவே, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போற்றி, கரோனா காலக் களப்பணிகளும் தொய்வின்றித் தொடரும். இவ்வாறு கூறியுள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.