Skip to main content

மத்திய அரசின் நிதியுதவி தகுதியுடையவர்களில் பாதி பேருக்குக் கூட வழங்கவில்லை: ராமதாஸ்

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மானியம் வழங்கும் திட்டத்தின்படி, மூன்றாவது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மூன்றாவது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை நியாயமற்றதாகும்.

 

Ramadoss


 

உழவர்களின் முடிவில்லாத துயரங்களுக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அதையேற்று நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு  தலா ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 2 தவணை நிதியுதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்திற்கான நிதியுதவி இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பருவத்தில் முதல் இரு மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், தகுதியுடையவர்களில் 10%&க்கும் குறைவானவர்களுக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது.
 

2018-19 ஆம் ஆண்டின் கடைசி பருவமான 2018 திசம்பர் - 2019 மார்ச் காலத்தில் தான் இத்திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தேசிய அளவில் 6.71 கோடி விவசாயிகளுக்கும், தமிழக அளவில் 30.93 லட்சம் உழவர்களுக்கும் வழங்கப்பட்டது. அடுத்த பருவத்தில், அதாவது கடந்த ஏப்ரல் - ஜூலை மாதங்களில் நிதியுதவி வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 4.97 கோடி, 24.58 லட்சமாக குறைந்து விட்டது. நடப்புப் பருவத்தில் அது மேலும் குறைந்து முறையே 1.73 கோடியாகவும், 2.53 லட்சமாகவும் உள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் காட்டப்படும் கெடுபிடிகளே காரணம் எனத் தெரிகிறது.


 

விவசாயிகளின் விண்ணப்பத்திலுள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது தான் நிதியுதவி மறுக்கப்படுவதற்கான முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவில்  ஆதார் அட்டைகள் எந்த லட்சனத்தில் வழங்கப்படுகின்றன; அவற்றில் எவ்வளவு பிழைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே, அதைக் காரணம் காட்டி நிதியுதவியை மறுப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி, விவசாயிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணையை மட்டும் மறுப்பது அறமாகாது.
 

ஒருவேளை, விவசாயிகள் தாக்கல் செய்த விண்ணப்பங்களில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் கூட, அதை ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் சரி செய்யும்படி அறிவுரை வழங்கி விட்டு, தொடர்ந்து நிதியுதவி வழங்க வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி நிதியுதவியை நிறுத்தி வைத்திருக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை திருத்துவதற்கான இணையதளத்தில்  பல தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதால் குறைகளை சரி செய்ய விவசாயிகளால் முடியவில்லை. இவ்வாறாக தாங்கள் செய்யாத தவறுகளுக்காக நிதியுதவியை இழக்கும் தண்டனையை அனுபவிக்கும்  நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உழவர்களை இப்படி இரு நிலைக்கு அரசு ஆளாக்கக்கூடாது.
 

உண்மையில் மத்திய அரசின் நிதியுதவி தகுதியுடைய உழவர்களில் பாதி பேருக்குக் கூட வழங்கப் படவில்லை. தமிழகத்தில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 68 லட்சம் ஆகும். ஆனால், அவர்களில் 32.43 லட்சம் விவசாயிகள் மட்டும் தான் நிதியுதவி கோரி  விண்ணப்பித்தனர். மீதமுள்ள 36 லட்சம் விவசாயிகள் விண்ணப்பிக்காததற்கு காரணமே, அதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற முடியாதது தான். அவர்களுக்கும் நிதியுதவியை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, ஏற்கனவே உதவி பெறும் உழவர்களின் எண்ணிக்கையை ஆவணங்களின் பிழையை காரணம் காட்டி குறைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


 

உழவர்களுக்கு முதல் தவணை நிதியுதவி வழங்க மத்திய அரசு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்தது. அதைக் கொண்டு 10 கோடி பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6.71 கோடி பேருக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு 12.50 கோடி பேருக்கு நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கூட இன்னும் உதவி வழங்கப்படவில்லை. நடப்பாண்டின் முதல் இரு பருவங்களில் ரூ.50,000 கோடி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ.13,400  கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.    
 

எனவே, இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து உழவருக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின்படி மானியம் பெற தகுதியுடைய, ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத உழவர்களும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, நிதியுதவி பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்