Skip to main content

'மாஸ்’ ஹீரோவாக முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி!!!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
ddd

 

 

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி இரண்டாவது நாளான இன்று நீட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுக. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றதும் திமுகதான். 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த பிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது என்று பேசினார்.

 

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு பிரச்சனைக்கு திமுகவே காரணம். காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு யாரால் கொண்டு வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வால் 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என ஆவேசமாக கூறினார். 

 

சட்டப்பேரவையில் ஆவேசமாகவும் கோபமாகவும் எடப்பாடி பழனிசாமி பேசியதால், அதுவரை ஜனவரி மாதம் விடுதலையாவார் சசிகலா. சசிகலா வந்தால் அதிமுக உடையுமா, இப்போதுள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் யார் சசிகலாவை சந்திப்பார்கள்? என்ற பரபரபப்பான செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டது.  

 

தமிழ் மக்கள் சினிமா நாயகர்களை முதல்வராக்கி ரசித்தவர்கள். எப்போதும் ஒரு நாயக பிம்பத்தை, தன்மையை எதிர்பார்ப்பவர்கள். பல முதல்வர்களின் பலமாக இருந்தது பேச்சுதான். கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமை, பேச்சு, வீச்சு ஆகியவற்றை ரசித்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, 'அது ஒரு விபத்து', 'ஒரு வாரம் தாங்காது, ஒரு மாதம் தாங்காது' என்றே அனைவரும் நினைத்தனர். விவாதித்தனர்.

 

ஆனால் ஆண்டுகளை கடந்ததோடு தன் ஆட்சியையும் செலுத்த ஆரம்பித்த எடப்பாடி, சமீபமாக தன் இமேஜை இன்னும் உயர்த்த ஜெயலலிதாவின் பாணியை பல விசயங்களில் பின்பற்றுகிறார். செல்லும் இடங்களிலெல்லாம் பேனர்கள், பிரம்மாண்ட வரவேற்பு, போலீஸ் பந்தபஸ்துகள், அமர்க்களம், விவசாயி அவதாரம் என தனக்கென ஒரு இமேஜை உருவாக்க தன் ஆதரவு கட்சிக்காரர்கள் மூலம் பல வேலைகளை செய்து வருகிறார்.

 

அதன் லேட்டஸ்ட் விஷயமாக ஆவேசமாக பேசுவதை கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே கரோனா குறித்து சட்டமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் ‘இதெல்லாம் ரொம்ப தப்புங்க’ என்று அவர் பேசியது வைரலானது. இன்று நீட் தேர்வு குறித்து, கூடுதல் ஆவேசத்தோடு, ஜெ. பாணியில் பேசி மாஸ் ஹீரோவாகும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

 

நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் பேசினால் இப்படி பேசுங்கள் என்று அதிமுகவின் எஸ்.எம்.எஸ். டீம்தான் ஐடியா கொடுத்ததாம். அதனால் தான் பேசுவது சரியா, தவறா என்பதைவிட ஆவேசமாக பேசினால் விவாதமாகும் என்றே எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுகிறார் என்கின்றனர் அக்கட்சியினர். 

 

 

சார்ந்த செய்திகள்