21 வயது பெண்ணை, உறவினர் ஒருவர் தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், பவானா கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனார். இது குறித்து போலீஸுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுடைய சகோதரியின் கணவர் ஆதிஷ் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சகோதரியின் கணவர் ஆதிஷ், இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டில் இருந்து வெளியேறச் செய்து, ஆதிஷ் தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பின்னர், அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதிஷை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் இருவரையும் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.