Skip to main content

திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த காங். முன்னாள் முதல்வர்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

tmc

 

மேற்குவங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அறுதி பெரும்பான்மையோடு வென்ற மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் விதமாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

 

அதுமட்டுமின்றி திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளையைப் பரப்ப முயற்சித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு திரிபுரா அரசியல் தலைவர்களை தன் பக்கம் இழுத்த திரிணாமூல் காங்கிரஸ், கோவாவிலும் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. கோவாவின் முன்னாள் முதல்வரான லூய்சின்ஹோ ஃபலேரோவை திரிணாமூல் காங்கிரஸ் தன்பக்கம் இழுத்துள்ளது. தற்போது லூய்சின்ஹோ ஃபலேரோ காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் அவர் தனது சட்டமன்ற கட்சி உறுப்பினர் பதவியையையயும் ராஜினாமா செய்துள்ளார்.

 

லூய்சின்ஹோ ஃபலேரோ, வடகிழக்கு மாநிலங்களுக்கான அகில இந்தியக் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர். மேலும் அண்மையில் அவர், கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தன்னுடைய சில ஆதரவாளர்களோடு திரிணாமூலில் இணைந்த லூய்சின்ஹோ ஃபலேரோ பேசுகையில், இந்தியா கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது; பாஜகவையும் அதன் பிளவுபடுத்தும் கொள்கைகளையும், அதன் வெறுப்பு மற்றும் பழிவாங்கும் கலாச்சாரத்தையும் வீழ்த்தவே நான் திரிணாமூல் காங்கிரஸில் இணைவதற்கான முக்கிய நோக்கம்  எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்