Skip to main content

சமஸ்கிருதத்திற்கு அக்கறை! மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

simbu

 

 

கடந்த 2014ஆம் ஆண்டில் எப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றாரோ, அப்போதிலிருந்து இந்தியாவில் மொழி திணிப்பு என்கிற தலைப்பு தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. பிரசார்பாரதி நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கோப்பு எண் 8/38/2020 பி1 என்ற எண் கொண்ட 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில்,  

 

“1) டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும்.

 

2) சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும்” என்று ஆணையிடப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே சமஸ்கிருதத்தில் ஒளிபரப்பப்படும் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இல்லை என்று பலர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இந்த நேரத்தில் மற்ற மாநில மொழியில் ஒளிபரப்பப்படும் துர்தர்ஷன் சேனல்களிலும், சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது என்ன மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களான ஸ்டாலின், ராமதாஸ், சு.வெங்கடேசன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த சுற்றறிகைக்கு உடனடியாக தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

 

கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து சமஸ்கிருதத்திற்கான புரோமோஷன் என்பது பலமடங்காக உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முன்னதாக 1996ல் வாஜ்பாய் பிரதமரானபோது சமஸ்கிருதம் அதிகப்படியாக பரப்பப்பட்டது. பாஜக ஆட்சியமைக்கும்போது இரு மொழிகள் மிக தீவிரமாக பரப்பப்படுகிறது. ஒன்று இந்தி மற்றொன்று சமஸ்கிருதம். வலதுசாரி கொள்கையை கொண்டு செயல்படும் பாஜகவின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருப்பது ‘ஒரே நாடு ஒரே மொழி’. இது ஒன்றுதான் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று பல வருடங்களாக கூக்குரலிட்டு வருகிறது. எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை திணித்தும் வருகிறது.

 

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை 14,000 பேர்தான். குடும்பமாக சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை மிக, மிக சொற்பமாக இருக்கிறது. காரணம், சமஸ்கிருத மொழி தேவ பாஷை என்று முதலில் நம்பப்பட்டு, மக்களின் மத்தியில் புழக்கமில்லாமல், ஒருசிலர் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தனர். இதனால் அது லத்தீன் மொழி போல தற்போது அழிவை நோக்கிய பாதையில் இருக்கிறது.

 

இந்நேரத்தில்தான் பாஜக அதை மீட்டெடுக்க, பல நூறு கோடிகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவு செய்கிறது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 643.84 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு செய்யப்பட்ட மொத்த செலவு ரூ. 29 கோடி மட்டுமே. மற்ற மொழிகளைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு செலவு செய்திருப்பது 22 மடங்கு அதிகம். 

 

இதுமட்டுமல்லாமல், பாஜகவை சேர்ந்த சில முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் சமஸ்கிருதம் குறித்து பல ஜோடிக்கப்பட்ட கருத்துகளை பேசுகின்றனர். இந்தியாவின் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த், 2018ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கணினி மென்பொருள் மொழி மற்றும் அல்காரிதம்ஸ் போன்றவை சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியிருக்கிறது என்றார். இதுபோல பல அறிவியல் பூர்வமான விஷயங்களில் நாசாவை சம்மந்தப்படுத்தி இறுதியில் சமஸ்கிருதத்தில் முடித்து வருகின்றனர். “சமஸ்கிருதத்தில் பேசுவதனால் சர்க்கரை அளவு மற்றும் இரத்தக் கொதிப்பு சீரான அளவில் இருக்கும்” என்று பாஜக எம்.பி. ஒருவர் பேசியிருக்கிறார். 

 

இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் சென்னை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. பின் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிட செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மணி நேர இந்தி நிகழ்ச்சி திணிக்கப்பட்டது. தற்போது பொதிகை உள்ளிட்ட மற்ற மாநில தூர்தர்ஷன் சேனல்களில் 15 நிமிட சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.

 

திருக்குறள், பாரம்பரிய உடை என வெளிப்புறத்தில் பன்முகத்தவராக வெளிப்படும் பிரதமர் மோடியும், அரசும் நிறைவேற்றும் திட்டங்களில் மட்டும் ஒருதலைபட்சம் இருப்பது ஏன்? சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் இந்த அக்கறை? இந்தி, சமஸ்கிருதம் அல்லாத மற்ற இந்திய மொழிகளுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.