Skip to main content

100 கோடி ரூபாய் எங்கே? - மனைவியின் தோழியுடன் ஊர் ஊராகச் சுற்றும் நகைக்கடை அதிபர்!

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
சபரி சங்கர்

 

சேலத்தில், நகை சீட்டு மற்றும் டெபாசிட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வலை விரித்து 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நகைக்கடை அதிபர் பற்றி மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

சேலம் அருகே உள்ள வலசையூரைச் சேர்ந்தவர் சபரி சங்கர் (40). இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அம்மாபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு எஸ்.வி.எஸ். ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக் கடையைத் தொடங்கினார். நகை சீட்டு திட்டம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் பழைய நகைகளுக்குப் புதிய நகைகள் வழங்குவது, டெபாசிட்டுக்கு 2.50 ரூபாய் வட்டி எனப் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் அபிமானத்தை இந்த நிறுவனம் பெற்றது. 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
எஸ்.வி.எஸ். ஜூவல்லர்ஸ்

 

இதன் தொடர்ச்சியாகச் சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் மட்டுமின்றி நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, தர்மபுரி, அரூர், கரூர், திருச்சி ஆகிய இடங்களிலும் இதன் கிளைகளைத் தொடங்கினார் சபரி சங்கர். டெபாசிட்தாரர்களுக்கும், நகை சீட்டுத் திட்டங்களில் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வட்டி, புதிய நகைகளைச் சரியாக பட்டுவாடா செய்து வந்த எஸ்.வி.எஸ். ஜுவல்லர்ஸ், கடந்த சில மாதங்களாக ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. 

 

தீபாவளி பண்டிகையைக் குறிவைத்து நகை சீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களும், பணத்தை நேரடியாக முதலீடு செய்தவர்களும் ஒரே நேரத்தில் கடைக்கு நெருக்கடி கொடுக்கவே, அவர்களுக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் ஊழியர்கள் தடுமாறி வந்துள்ளனர். இதன்பிறகே, சபரி சங்கர் கடந்த நவ. 10ம் தேதி அதிகாலை, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று தலைமறைவாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
ரஞ்சித்

 

நக்கீரன் நடத்திய கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. எஸ்.வி.எஸ். ஜுவல்லர்ஸ் நிறுவனம் தொடங்கியதில் இருந்து கடையில் பெரும்பாலும் சபரி சங்கர் இருப்பதில்லை. அவருடைய நெருங்கிய நண்பர்களான முரளி, முருகன், ரஞ்சித், உமாசங்கர், அப்புராஜ் ஆகியோரை நம்பியே கடையின் மொத்த ஆபரேஷன்களையும் விட்டுச் சென்றுள்ளார். 

 

ஒரே சமூகத்தைச் சேர்ந்த சபரி சங்கரின் நெருங்கிய உறவினர்தான் ரஞ்சித். மற்றொரு முக்கிய நிர்வாகியான அப்புராஜ் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சபரி சங்கரின் முதல் மனைவி ஆராதனாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தங்கையை காதலித்து மணந்த வகையில் அவருக்கு சகலை உறவுமுறை ஆகிறது. இவர்களில் உமாசங்கர்தான், கடையின் உரிமையாளருக்கு வலதுகரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவர்தான் 11 இடங்களில் உள்ள கடைகளின் மொத்த செயல்பாடுகளையும் கண்காணிக்கக் கூடியவர். நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனைகள், நகைகள் செய்து கொடுக்கும் டீலர்களுடனான பிஸினஸ் டீல் ஆகியவற்றை கவனித்து வந்துள்ளார். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
அப்புராஜ்

 

மற்றொரு முதன்மைச் செயல் அதிகாரியான முருகன், இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 119 வாடிக்கையாளர் சேவை மைய செயல்பாடுகளையும், மற்ற இரு சி.இ.ஓ.,க்களான முரளி, ரஞ்சித் ஆகியோர் கடையின் கணக்கு வழக்குகளையும் கவனித்து வந்துள்ளனர். 

 

ஆரம்பக் காலகட்டத்தில் அப்புராஜ், சபரி சங்கருடன் நெருக்கமாக இருந்து வந்தாலும், அவர் மனைவியின் தோழியுடன் நெருக்கமாக பழகியதைப் பிடிக்காமல் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, 16.8.2021ம் தேதியே கடையில் இருந்து வெளியேறி விட்டார் அப்புராஜ். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
உமா சங்கர்

 

இந்நிலையில், மீண்டும் அவரை சமாதானப்படுத்தி கடைக்கு அழைத்துள்ளார் சபரி சங்கர். இதை அடுத்தே, கடந்த இரு மாதங்களாக மீண்டும் அப்புராஜ் எஸ்.வி.எஸ். நகைக் கடையில் பணியாற்றி வருகிறார். சபரி சங்கருக்கு இவர் சகலை உறவுமுறை என்பதால் அவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் எனப் பாதிக்கப்பட்டோர் கருதுகின்றனர். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
முருகன்

 

ஆக, முதன்மைச் செயல் அதிகாரிகளான முருகன், உமாசங்கர், ரஞ்சித், முரளி, அப்புராஜ் ஆகியோர்தான் கடையின் மொத்த நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளனர். இவர்களும், சபரி சங்கரும் ஆரம்பத்தில் சேலத்தில் உள்ள பிரபல கார்ப்பரேட் நகைக் கடையில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட நெருக்கமான நட்பும், அங்கு கிடைத்த அனுபவத்தையும் கொண்டே இவர்கள் புதிதாக நகைக் கடையைத் திறந்துள்ளனர். 

 

முதன்மைச் செயல் அதிகாரிகள் நிலையில் உள்ள 10 ஊழியர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம், ஒவ்வொருக்கும் ஓட்டுநருடன் கூடிய தனி கார் ஆகிய வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அடிப்படையில் சபரி சங்கர், ஒரு ஜாலி பேர்வழி என்கிறார்கள். மது மற்றும் பல விஷயங்களில் கில்லாடி என்கிறார்கள். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
சபரி சங்கர்

 

இவருடைய மனைவி ஆராதனா, சாரதா கல்லூரி சாலையில் பொம்மைகள் விற்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர், சபரி சங்கர் வேலை செய்து வந்த நகைக் கடையில் சீட்டுப் போட்டுள்ளார். அந்தக் கடைக்கு சென்று வந்ததில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரு தரப்பு பெற்றோரும் காதலுக்கு சிவப்புக்கொடி காட்டிய நிலையில், பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

 

இந்நிலையில், ஆராதனாவின் தோழியான நித்யஸ்ரீ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் சென்று வந்தார். இதில், சபரி சங்கருக்கும் நித்யஸ்ரீக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஆராதனா, இதுகுறித்து கணவரிடம் கேட்கப்போக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. விவாகரத்து பெற்றுவிட்டதாக ஒரு சாராரும், வழக்கு முடிவுக்கு வரவில்லை என்று சிலரும் சொல்கின்றனர்.

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!

 

ஆனாலும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத சபரி சங்கர், நித்யஸ்ரீயை சொகுசு காரில் அழைத்துக் கொண்டு கோவா, பெங்களூர், டெல்லி, கேரளா என மாதக்கணக்கில் உல்லாசமாகச் சுற்றி வந்துள்ளார். நித்யஸ்ரீயை அழைத்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டால், மூன்று மாதங்கள் கழித்துதான் சபரி சங்கர் நகைக்கடைப் பக்கமே தலைகாட்டுவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவரை அழைத்துச் செல்வதற்காகவே ஜாக்குவார், பி.எம்.டபுள்யூ, ஆடி ஆகிய சொகுசு கார்களை வாங்கியுள்ளார் சபரி சங்கர்.

 

இது ஒருபுறம் இருக்க, நித்யஸ்ரீக்கு சொந்தமாக சபரி சங்கர் ஒரு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாகவும், அவருடைய தந்தைக்கு குமாரசாமிப்பட்டி பகுதியில் சிறிய அளவில் நகைக்கடை வைத்துக் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சபரி சங்கர், சொந்த ஊரில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமின்றி, முதன்மைச் செயல் அதிகாரிகளாக பணியாற்றி வரும் முருகன், ரஞ்சித், முரளி ஆகியோரும் சொந்த வீடு கட்டி செட்டில் ஆகிவிட்டனர். வலது கரமாக கருதப்படும் உமா சங்கர் மட்டும் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோயில் அருகே வாடகை வீட்டில் வசிப்பதாகக் கூறுகின்றனர். இந்த மோசடி விவகாரத்தில் சபரி சங்கருக்கு மட்டுமின்றி முதன்மைச் செயல் அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களும் தலைமறைவாகி விட்டதோடு, செல்போன் எண்களையும் அணைத்து வைத்துள்ளனர். 

 

இந்நிலையில் முதன்மைச் செயல் அதிகாரி முருகன் என்பவர் எடப்பாடியைச் சேர்ந்த சவுந்திரவள்ளி என்பவரிடம் நவ. 15ம் தேதி இரவு செல்போனில் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். இதுபற்றி சவுந்திரவள்ளி கூறுகையில், “எஸ்.வி.எஸ். நகைக்கடையில் பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ் என்னுடையது மற்றும் என் தாயார், தங்கை ஆகியோரிடம் இருந்து பெற்ற 4.75 பவுன் தாலிக்கொடி, குண்டு உள்ளிட்ட நகைகளை கொடுத்திருந்தேன். திடீரென்று கடையை மூடிவிட்டு கடை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். நான் என் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது? 

 

இதுபற்றி முருகனிடம் கேட்டபோது, நானும் இந்தக் கடையில் நகை கொடுத்து ஏமாந்துவிட்டேன் என்றும், இதுகுறித்து சபரி சங்கர் மீது காவல்துறையில் புகார் அளிக்கும்படியும் கூறினார். அவருடைய பேச்சின் மீதும் சந்தேகம் உள்ளது. “சபரி சங்கர், முருகன் உள்ளிட்ட மோசடி ஆசாமிகள் மட்டும் கையில் சிக்கினால் வெளுத்துவிட்டுடுவேன்” என ஆவேசமாக கூறினார். 

 

நகைக்கடையை தொடங்குவதற்கு முன்பு சபரி சங்கர், ஆத்தூர், தாரமங்கலம், அரூர், பேளூர் ஆகிய இடங்களில் குபேரன் அடகு கடை என்ற பெயரில் நகை அடகு கடைகளை தொடங்கினார். இதனால் அவருக்கு வங்கிகளுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சபரி சங்கர், ஏலத்துக்கு வரும் அடமான நகைகளை கிலோ கணக்கில் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதன் பிறகுதான் அவர் நகைக் கடைகளைத் தொடங்கினார் என்கிறார்கள். 

 

சபரி சங்கர் காவல்துறையில் பிடிபட்டால் மட்டுமே மோசடி தொகையின் உண்மை மதிப்பும், இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரங்களும் தெரியவரும். அவரை காவல்துறை தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.