Skip to main content

"அரசியல் செய்வேன் என்றால் ஆளுநர் பதவியைத் தூக்கியெறியுங்கள்; பன்னீர் செல்வத்தால் திமுகவுக்கு என்ன லாபம்..." -நாஞ்சில் சம்பத் பேச்சு

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

 

பக

 

தெலுங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதுகுறித்த சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஊடகங்களில் பணியாற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நிறைவுரையாற்றிய தமிழிசை, தமிழக அரசியல் தொடர்பாகவும் தான் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் பேசினார். 

 

இந்தப் பேச்சின் உச்சமாக அவர் தமிழகத்தில் நான் கால் வைத்து அரசியல் செய்வதாகக் கூறுகிறார்கள். நான் அவர்களுக்குக் கூறுகிறேன், தமிழக அரசியலில் நான் காலையும் வைப்பேன், கையையும் வைப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்ற கோணத்தில் பேசினார். இது ஒருபுறம் இருக்க  " தீய சக்தி கருணாநிதி என்று பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கூறினால் அவர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டாம்" என்று உதயகுமார் கூறியது எனத் தமிழக அரசியல் களம் சூடாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

"அவரால் தெலுங்கானாவிலேயே காலை நுழைக்க முடியவில்லை. இங்கே வந்து நுழைக்கப் போகிறார்களா? கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டத்தைப் பிடிக்கப் போகிறார்களா என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இவர்கள் சொல்லுவது அதைப்போலத்தான் இருக்கிறது. தெலுங்கானாவில் இவர்களால்  எதுவும் செய்ய முடியாமல்தான் மாநிலம் மாநிலமாக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தில் கால் நுழைப்பார்களாம். இங்கே வாலை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

 

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. அவர் எதற்காக அரசியல் பேச வேண்டும். பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக அவர் அரசியல் பேசட்டும், அரசியல் செய்யட்டும். நாங்கள் ஏன் அரசியல் பேசுகிறீர்கள் என்று கேட்கமாட்டோம். ஆனால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதைத் தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். உங்களுக்குத் தமிழக அரசியலை விட மனசில்லை என்றால் வாருங்கள், போட்டியிடுங்கள் ஒரு கை பார்த்துவிடுவோம். அதை விட்டுவிட்டு வீண் வாய் சவடால் விடாதீர்கள். 

 

தீய சக்தி கருணாநிதி என்று சட்டப்பேரவையில் பன்னீர்செல்வம் கூறினால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டுத் தருவதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளாரே? 

 

இந்த வார்த்தையைக் கூற உதயகுமாருக்கு முதலில் தகுதி இருக்கா? காலம் சென்ற தலைவர்களை அவதூறு பேசித்தான் கட்சி வளர்ப்பீர்களா? எதிர்க்கட்சி தலைவர் வேலை என்பது தீய சக்தி கருணாநிதி என்று கூறுவதுதானா? திமுகவோடு பன்னீர்செல்வம் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று இந்த பகல் பைத்தியங்கள் கூறுகிறார்களே, திமுகவுக்கு அதற்கான தேவை ஏதாவது வந்திருக்கின்றதா? பன்னீர்செல்வத்தின் ஆதரவை நம்பித்தான் ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறாரா?  ஏன் இப்படி உளறுகிறீர்கள். அருணா ஜெகதீசன் அறிக்கை அவரை குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அதைப்பற்றி இதுவரை அவர் வாய் திறந்து பேசியிருப்பாரா? இதைப் பற்றி உதயகுமார் பேசினாரா, இதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயத்தைப் பேசி மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் அதிமுக அடிமைகள். 

 

 

Next Story

"ஆறு மாத சஸ்பெண்ட் தப்புக்கு தண்டனையா...? கே.டி. ராகவனை அண்ணாமலை எப்போது சேர்த்துக்கொள்ளப் போகிறார்..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

ரகத

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக  அறிக்கை வெளியிட்டு இருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எப்போதும் பெண்களை மதிக்கும் கட்சி என்றும், அவர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.

 

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, " இவர் என்ன குரல் கொடுக்கப் போகிறார். தப்பு செஞ்சவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வேறு சொல்கிறீர்கள், யார் எதற்காகப் பாராட்டுகிறார்கள்.

 

சரியான முடிவை அண்ணாமலை என்ன எடுத்துவிட்டார், கே.டி.ராகவனை நாளைக்குக் கட்சியில் சேர்த்துப்பாரா அண்ணாமலை? அவருக்கும் இன்னும் ஆறு மாசம் முடியவில்லையா? அண்ணாமலைக்கு தன்பயம் அதிகம் வந்துவிட்டது. தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் இயங்குவதைக் கூட அவர் விரும்பவில்லை.  பாஜகவில் வேறு யாரும் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அவரை வாட்டி வதைக்கின்றது. காயத்ரி, சூர்யா ஆகிய இருவரும் முருகனுடைய ஆதரவாளர். முருகனுக்கு பாஜக அலுவலகத்தில் தனி அறை போட்டாச்சு. அண்ணாமலைக்கு எப்போது ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.

 

இந்தப் பேட்டியை எடுத்துக்கொண்டு நீங்கள் வீடு போய்ச் சேருவதற்குள் அண்ணாமலையில் பதவியைப் பறித்தால் கூட ஆச்சரியமில்லை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற தகவல் பாஜகவில் இருந்தே கசிந்துகொண்டு இருக்கிறது. அண்ணாமலை குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராகச் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள், அப்படி என்றால் அவர் மோகன் பகவத்துக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும், கேள்வி கேட்க வேண்டும். அதை எல்லாம் அவர் ஒரு போதும் செய்யமாட்டார். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

 

அதன் தொடர்ச்சியாக அவருக்கு வேண்டாத நபர்களுக்கு எதிராக சில வாய்ப்புக்கள் அமையும் போது அவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளில் இது ஒன்றும் புதிதல்ல. பல மாநில தலைவர்களைத் தேசிய கட்சிகள் பார்த்துள்ளது. எனவே இந்தப் பதவி என்பது அவருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனவே அதை வைத்து சில அரசியல் ஆட்டங்களை ஆடலாம் என்று கூட அவர் முயற்சி எடுக்கலாம். ஆனால் அவருக்கே எதிராகக் கள சூழ்நிலை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே அவரின் அரசியல் விளையாட்டுக்கள் நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. விரைவில் அவர் பதவிப் பறிக்கப்படக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அவரின் இந்தப் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்றார்.

 

 

Next Story

"ஆபாசமா பேசிட்டு அக்கா தம்பியா...? இதுக்கு ஆறு மாசம் சஸ்பெண்ட் ஒருகேடு; இப்படி ஒரு கட்சி இந்தியாவிலேயே இல்லை..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

sdf

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

பாஜகவில் கடந்த சில நாட்களாக ஆடியோ சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிலரை கட்சியின் தலைமை நீக்கியுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

நான் தவறான பலான படங்களையோ அல்லது அதுதொடர்பான ஆடியோவையோ எப்போதும் கேட்பதில்லை. இதில் என்ன பெரிய நடவடிக்கை எடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. கட்சியில் தவறு செய்தால் அதிகபட்சம் கட்சியை விட்டு நீக்குவார்கள். அதுதொடர்பாக விசாரிக்க சில சமயம் குழு கூட அமைப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஆறு மாதம் நீக்குவது, மூன்று மாசம் நீக்குவது என்பதை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. ஆறு மாசத்துக்கு அப்புறம் கட்சியில் சேர்த்துக்கொள்வார்களா?  இது எல்லாம் ஒரு தண்டனையா என்று எனக்குத் தெரியவில்லை. 

 

இப்போ அக்கா தம்பி ஆகிட்டாங்கன்னு நீங்கள் சொல்றீங்க, இதில் நான் என்ன சொல்ல இருக்கிறது. பாஜகவோட தரம் என்ன என்று தற்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கும். இந்த மாதிரி ஒரு கேவலமான கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் கூட கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்யவா அவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்த மாதரி ஆட்களை எல்லாம் கட்சியில் இணைத்தால் அவர்கள் என்ன திருக்குறளும், திருவாசகமுமா பேசுவார்கள். 

 

இந்த மாதிரிதான் அநாகரிகமாகப் பேசுவார்கள், அடுத்தவர்களைச் சீண்டுவார்கள்,பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள். ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் கட்சியில் சேர்த்துவிட்டுத் தவறு செய்தவுடன் நாங்கள் நீக்கிவிட்டோம் என்பதெல்லாம் யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. இது ரொம்ப நாளைக்கு நடக்காது. மக்கள் முன் எளிதில் அம்பலப்பட்டுப் போவார்கள். பாஜகவின் கொள்கை கோட்பாடு பிடித்திருக்கிறது என்று கூறி இதுவரை யாராவது கட்சியில் சேர்ந்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கோட்பாடு கொள்கை என்று அக்கட்சிக்கு இதுவரை எதாவது இருக்கிறதா, ஏதோ கட்சி நடத்துகிறார்கள், அடாவடி செய்யும் நான்கு பேர் கட்சியில் இணைவார்கள். அவர்கள் கையும் களவுமாக அகப்படும்போது அங்கிருந்து வேறு இடத்திற்கு மாறுவார்கள். 


தற்போது எதற்காக பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். கு.க. செல்வம் எதற்காக அங்கிருந்து வெளியேறினார். மதுரை சரவணன் எதற்காகக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சியிலிருந்து அனைவரும் வெளியேறுவார்கள் என்பது மட்டும் நிஜம். பிரச்சாரத்தின் போது வெறும் நாற்காலிகளைப் பார்த்து எப்படி பரப்புரை செய்வார்களோ அதைப்போல வெறும் கட்சி பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்திக்கும் காலம் மிக விரைவில் வரும். வட நாட்டு மக்களை ஏமாற்றுவதைப் போல் தமிழக மக்களை இவர்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அதில் நிச்சயம் இவர்களுக்குத் தோல்விதான் கிடைக்கும்.