Skip to main content

செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 12 வரையிலான ஆளுநரின் பணிகள் ஒரு பார்வை!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

செப்டம்பர் 8 ஆம் தேதியிட்ட நக்கீரன் இதழில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரை ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் நக்கீரன் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 
ஆளுநரின் எந்தப் பணியை செய்யவிடாமல் நக்கீரன் தடுத்தது என்பதை குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், ஆளுநர் பன்வாரிலால், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை மேற்கொண்ட முக்கியமான பணிகளைப் பற்றி ஒரு பார்வை பார்த்துவிடலாம்…

 
செப்டம்பர் 7 ஆம் தேதி ஆளுநர் தனது செயலாளர் ராஜகோபாலுடன் கரூர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
 

sep8


செப்டம்பர் 8 ஆம் தேதி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதே நாளில் கல்வி நிறுவனங்களில் ராக்கிங் ஒழிப்பு தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

 
செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

 
செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள மாமர சுயம்பு சித்தி வினாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார்.
 

sep.,

 
செப்டம்பர் 14 ஆம் தேதி தமிழகம் வந்த ஆந்திரா ஆளுநர் நரசிம்மனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அதேதினம் பார்வையிழந்தோர் தினத்தில் பார்வையிழந்தோர் சங்கத்தினரை சந்தித்து நிதி வழங்கினார்.

 
செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் தூய்மைப் பணியை தொடங்கிவைத்தார். அதேநாளில் அதே மாவட்டத்தில் நடைபெற்ற ரத்ததானம் நிகழ்ச்சியையும், இ-சேவை மையத்தையும், நியாயவிலைக் கடையையும் பார்வையிட்டார்.

 
செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பாபநாசம் சிவனின் 128 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பிரகாஷ் மேனன் எழுதிய புத்த வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
 

sep27


செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறப்பு விருதுகளை வழங்குகிறார்.

 
செப்டம்பர் 29 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லா மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற சென்னை தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் பேசினார்.
 

oct 1


அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற முதியோர் தங்குமிடத்தை தொடங்கிவைத்தார்.


அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிலும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவிலும் பங்கேற்றார்.

 
அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் 8 ஆவது இந்திய ஐஸ்கிரீம் காங்கிரஸ் கண்காட்சியைத் தொடங்கிவைத்து ஸ்டால்களை பார்வையிட்டார்.

 
அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பாரிதிய வித்யாபவனில் நடைபெற்ற தேசிய அஞ்சலக வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

 
அதேநாளில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை விழாவிலும், சென்னை வந்த குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் விமானநிலையத்தில் வரவேற்றார்.
 

oct 11


அக்டோபர் 11 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற தாமிரபரணி ஆற்று விழாவில் பாபநாசத்தில் ஆளுநர் பன்வாரிலால் நீராடினார்.

 
இவைதான் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், அக்டோபர் 11 ஆம் தேதிவரை ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சிகள் எதிலும் யாரும் அவருடைய பணியை குறுக்கிட்டு தடுத்ததாகவோ, தாக்கியதாகவோ செய்தியே இல்லை. ஆளுநர் மாளிகையும் பொத்தாம் பொதுவாகத்தான் ஆளுநரின் பணியைத் தடுத்ததாக கூறியிருக்கிறது. அதனால்தான் நீதிமன்றமே 124 ஆவது பிரிவின்கீழ் நக்கீரன் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்திருக்கிறது.