Skip to main content

நகை கொள்ளையனைப் பற்றி அறியாத பல அதிர்ச்சி தகவல்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவிகளைச் செய்துள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டான். ஒரு திருட்டுக்கு வந்த கூட்டாளிகளை அடுத்த திருட்டுக்கு வைத்துக்கொள்ள மாட்டான். இவை எல்லாம் க்ளூ கண்டு பிடிப்பதில் போலீசுக்கு சவாலாக உள்ளது. 

 

trichy incident



முருகன் குறித்து நன்கு தெரிந்த சிமெண்ட் கலவை தொழிலாளி ஒருவரை திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் சந்தித்து விசாரித்தோம். "முருகனுக்கு சொந்த ஊர் திருவாரூர் கிடையாது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமம். பிழைப்புக்காக திருவாரூர் வந்து, நான்கு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் கொளுத்தும் வெயிலில், காலில் செருப்புக்கூட இல்லாமல் சாலை போடும் வேலைகளை செய்தாங்க. திருவாரூர் சீராத்தோப்புலதான் முருகனின் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே இருக்கு. அக்கா கனகவள்ளிதான் குடும்பத்தைக் காப்பாற்றினார். சாலைப் பணியில் பொழுதுக்கும் வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் கொடுக்கும் போது குறைத்தும், இழிவாகப் பேசுவதையும், தனது சமூகத்துப் பெண்களை தவறாகப் பேசுவதையும் தினசரி கண்டு கோபப்பட்ட முருகன், அந்த வேலையை வெறுத்துவிட்டு, பெங்களூர் சென்று விட்டான். அங்கு டிரைவர் வேலையில் திருநெல்வேலியை சேர்ந்த தினகரன் என்பவனோடு முதல் நட்பு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்கத் துவங்கியவன், பிறகு வங்கிகள், நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்தான். அங்கேயே மஞ்சுளா என்கிற பெண்ணுடன் வாழ்க்கையை ஆரம்பித்தான். இரண்டு குழந்தைகளோடு எலக்ட்ரானிக் சிட்டியில் வீடு வாங்கிக் கொண்டு அங்கிருந்தபடியே கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் கொள்ளையைத் தொடர்ந்தான்.

 

trichy incident



அந்தப் பணத்தில், சாலை போடும் வேலையில் அல்லல்படும் தனது சமூகத்து மக்களுக்கு உதவிகளை செய்யத் தொடங்கினான். காலில் அணியும் செருப்பில் தொடங்கிய உதவி, ஜே.சி.பி. ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் எனத் தொடர்ந்தது. அவர்கள் குடும்பத்து திருமணங்களில் மெயின் செலவும் முருகனுடையதுதான். எங்க ஊருக்கு அவன் காட்பாதர். எங்களை எல்லாரையும் பிடித்தாலும் அடித்தாலும் அவன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது. அப்படியே தெரிய வந்தாலும் சொல்லமாட்டோம்''’என்றார்.

 

trichy incident



ஒரு வழக்கு விஷயமாக முருகனுக்கு உதவிய வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்தோம். "நான்கு மாநிலங்களில் முருகன் மீது வழக்கு இருந்தாலும், அவனது குடும்பம் எங்கு இருக்கிறது என்கிற தகவல்கூட காவல்துறையிடம் இல்லை. திருவாரூர் ஏரியாவுக்குள் அவன் கைவரிசை காட்டாததால், அந்த மாவட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை. கொள்ளையடித்த பணத்தில் ஹைதராபாத்தில் வீடு, பாண்டிச்சேரியில் வீடு, பெங்களூரில் வீடுன்னு எல்லா மாநிலத்திலும் அவனுக்கு வீடு இருக்கு. அங்கங்கே பெண் துணையும் இருக்கு. ஆந்திராவில் இருக்கும்போது சினிமாவில் ஆசைப்பட்டு, படமும் எடுத்தான். அதில் அவனது அக்கா மகனையும் நடிக்கவைத்தான். அப்போது நிறைய துணை நடிகைகளோடு தொடர்பில் இருந்தபோது, அவனுக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது, எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதித்த முருகனை பெங்களூர் போலீஸார் தேடத் துவங்கினர்.


அப்போது மஞ்சுளாவுடன் வந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்தான். இதை ஸ்மெல் செய்த பெங்களூரு காக்கிகள் திருவாரூர் வந்துவிட்டனர். அதன் பிறகு வழக்கறிஞர்கள் சிலரோ மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு கொடுத்துவிட்டு கொள்ளையடித்த நகைகளை, அந்தக் காவலர்களிடமே ஒப்படைக்க வைத்தோம். அவன் பிழைக்கமாட்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். ஆனா இந்தப் போடு போட்டிருக்கான். சமீபகாலமாக முருகனின் அக்கா மகன் சுரேஷ், முருகனின் அண்ணன் மகன்கள், நண்பர்களோடு முருகனைப் போலவே கொள்ளையடிப்பதாக தகவல் கிடைத்தது. அவன் பெரும்பகுதி பாண்டிச்சேரியிலும், பெங்களூரிலுமே அதிகமாக இருப்பான். ஒரு வேலைக்கு ஒருவனை ஒருமுறைதான் பயன்படுத்துவான், வழக்கறிஞரையும் கூட அப்படித்தான். அவனைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவனுக்கு நான்கு மாநில காவல்துறையிலும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. ஆறு மாதங்களுக்கு முன்புகூட ஒரு காவல் துறை அதிகாரி ஒருவருக்கு சைலோ கார் வாங்கிக் கொடுத்துள்ளான்''’என்கிறார் விவரமாக.

முருகனைத் தேடும் தனிப்படையில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். திருவாரூரில் பிடிபட்ட மணிகண்டனையும் முருகனின் அக்கா கனகவள்ளி, அண்ணன் மகன் முரளி, நண்பர்கள் குணா உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரித்தோம், சமீப காலமாக துணை நடிகை ஒருவரோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்துவிடுவோம். மணிகண்டன், சுரேஷின் நண்பன். மடப்புரத்தைச் சேர்ந்த 17 வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவர் இளங்கோவனின் மகன். அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் கட்சிக்கும் அணிக்கும், பிறகு திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்திலும் இணைந்து நகர பொருளாளராகவும் இருக்கிறான். நாகையில் உள்ள தாஸ் என்கிற பத்தரின் (நகை ஆசாரி) உதவியோடு கொள்ளையடித்த தங்கத்தை காயினாக மாற்றி விற்றுள்ளனர். தங்களைத் தேடும் போலீஸ் மீது உள்ள கோபத்தை விநாயகர் ஊர்வலத்தில் வைத்து வஞ்சம் தீர்த்தனர். 

முருகன் செய்துள்ள உதவிகளுக்கான நன்றியும், அவனைப் பற்றிச் சொன்னால் தீர்த்துடுவாங்கிற அச்சமும் அவங்ககிட்ட இருக்கு''’என்கிறார். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, திருவாரூரைச் சேர்ந்த திருமாறனும், பிரதீப்பும் கைது செய்யப் பட்டு விசாரணையை எதிர்கொண்டனர். புதிய கைதுகள் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "தி.மு.க.வின் முன்னாள் நகரச் செயலாளர் இரா.சங்கரின் அண்ணன் திருமாறன் என்கிற மாறன் அ.தி.மு.க.வில் முக்கியமானவர். ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பெயரில் மன்றம் ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஏற்கனவே இவர் மீது ஆக்கிரமிப்பு, பஞ்சாயத்து, புலிகளுக்கு டீசல் சப்ளை என வழக்குகள் போடப்பட்டாலும் அவற்றிலிருந்து சட்டப்படி விடுதலையானவர். தனது தனிப்பட்ட செல்வாக்கால் பலரிடமும் தொடர்பில் உள்ள திருமாறன், முருகன் தரப்புக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம் எந்த ஒன்றையும் அலட்சியப்படுத்துவதில்லை''’என்றார்.

இதற்கிடையில்தான் கடந்த இதழில் காக்கி ஒருவருக்கு முருகனுடன் நெருக்கம் இருக்கிறது என்று கூறியிருந்தோம். அந்த காக்கியை ஸ்மெல் செய்த விசாரணை உயர் அதிகாரி ஒருவர் சில தகவல்களைக் கறந்துள்ளார். அதன்படியே பாண்டிச்சேரிக்கு ஒரு டீம் சென்றுள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.