Skip to main content

பாலாறு ஏற்படுத்திய துயரம்; 200 பொதுமக்கள் ஒருநள்ளிரவில் பலி! வருடாவருடம் நடைபெறும் நினைவஞ்சலி! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

The tragedy caused by Palaru; 200 civilians passes away in one night! Annual Memorial!
                                                    கோப்புப் படம்  

 

வடஇந்திய மன்னர்கள் தமிழ்நாடு மீது படையெடுத்து தமிழகத்துக்குள் நுழைய முடியாமல் நீண்ட காலம் தடுத்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது பாலாறு என்கிறது சோழர்கள் ஆட்சிக் குறித்த கல்வெட்டு. பாலாற்றை கடந்து எப்படி தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என விவரிக்கிறது விஜயநகர பேரரசு வரலாறு. பாலாற்றின் அகலம் 500 மீட்டர்க்கும் அதிகம். அதாவது சென்னை அண்ணா சாலையின் அகலத்தை விட 10 மடங்கு அதிகம். இது தமிழ்நாட்டுக்கு இயற்கை அரணாக இருந்தது.

 

கர்நாடாகா மாநிலம், கோலார் நந்திமலையில் உற்பத்தியாகி கர்நாடகா மாநிலத்தில் 93 கி.மீ தூரமும், ஆந்திரா மாநிலத்தில் 33 கி.மீ தூரமும், தமிழ்நாட்டுக்குள் 222 கி.மீ தூரமும் பயணமாகி சென்னைக்கு அருகில் வயலூரில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது பாலாறு.

 

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை கரை புரண்டு ஓடும் அளவுக்கு தண்ணீர் வந்துக்கொண்டிருந்த வற்றாத ஜீவநதி பாலாறு. இன்றைய பாலாறு என்பது மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் கருமை நிறத்தில் ஓடும். பாலாற்றின் அகலம் சுருங்கி வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, விஷாரம், இராணிப்பேட்டை பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரும், வேலூர் மாநகரம் உட்பட பல நகரங்கள், பேருாட்சிகளின் கழிவுநீர் ஓடும் ஆறாக பாலாறு மாறியுள்ளது. அப்படிப்பட்ட பாலாற்றில் தற்போது சென்னை மாநகரை மிதக்கவிட்டுள்ள மழைப்போன்று சரியாக ஓரு நூற்றாக்கு முன்னர் பெய்த மழையால் பாலாற்றில் திரண்டுவந்த நீரில் 200க்கும் அதிகமான பொதுமக்கள் இறந்தார்கள் என்றால் இன்றைய சமுதாயம் ஆச்சிரியத்துடனும், பெரும் கேள்விக்குறியுடனும் அணுகும். ஆனால், அது நடந்தது உண்மை. 

 

1903ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியிலும் நவம்பர் மாதம் தொடக்கத்திலும் அன்றைய மைசூர் மாகாணத்தின் பல பகுதிகளில் பெரும் மழை பெய்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் கோலார்ஜில்லா பகுதிகளில் பதினைந்து நாட்களாக தொடர்மழை பெய்துள்ளது. அந்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி கரைகள் உடைந்துள்ளன. குறிப்பாக கோலார் ஏரி, ஹொலையல் ஏரி, பேத்தமங்கலம் ஏரி, புக்க சமுத்திரம், பங்காநத்தம் ஏரி, பங்காருப்பேட்டை ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகள் உடைந்து பெருவெள்ளம் பாலாற்றில் வந்தது.

 

பாலாறு, தமிழ்நாட்டுக்குள் வாணியம்பாடி அடுத்த கனகசமுத்திரம் கிராமத்தில் நுழைகிறது. அதன்வழியாக பாலாற்று நீர் வாணியம்பாடி நகரத்துக்குள் நுழைந்து அன்றைய வாணியம்பாடி நகரை மூன்றாக பிரித்து பாதி நகரை முற்றிலுமாக மூழ்கடித்து விட்டது. இந்த பெருவெள்ளத்தில் மூழ்கி 200 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் காணாமல் போயின. சின்ன பாலாற்றில் இருந்த பெரிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வாணியம்பாடி நகரின் உள்ளூர் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. உடைமைகளை இழந்த மக்கள், பெருந் துன்பத்திற்கு ஆளாயினர்.

 

இந்தத் துயர சம்பவத்தை அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன், தந்தி மூலமாக இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவுக்கு தெரிவித்துள்ளார். அந்த தந்தியில் 1903 நவம்பர் 12 ஆம் தேதி பாலாற்றில் பெருவெள்ளம் வந்ததால் சேலம் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதி நகரம் முற்றிலும் மூழ்கிவிட்டது. பெரு வெள்ளத்தில் மூழ்கி இருநூறு மக்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த துயரசம்பவத்தை பம்பாய், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வெளிவரும் தி கால் என்ற ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பெருவெள்ள நிகழ்வை நினைவுக் கூறும் வகையில் வாணியம்பாடி நகரின் பிரதான சாலையான கச்சேரி சாலையில் சின்ன பாலாறு சந்தைமேம்பாலம் அருகில் நகராட்சி சார்பில் ஒருமுப்பட்டக வடிவிலான கல்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கல் தூணின் ஒரு பக்கத்தில் PALAR என்றும் ஒரு பக்கத்தில் MFL என்று பதிவு செய்து அளவு கோடுகளாக வெட்டப்பட்டுள்ளது. அந்த சாலையில் ஐந்தரை அடி உயரத்திற்கு வெள்ளம் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல் தூணின் தலைப்பகுதியில் VMC என்றும் அதனடியில் 12.11.1903 என்றும் செதுக்கப்பட்டுள்ளது.

 

The tragedy caused by Palaru; 200 civilians passes away in one night! Annual Memorial!

 

இந்த நினைவுத்தூணை இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடித்து அதன் வரலாற்று பிண்ணனிகளையும் கண்டெடுத்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நவம்பர் 12ஆம் தேதி  பாலாறு பெருவெள்ளத்தில் இன்னுயிரை இழந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நவம்பர் 12 ஆம் தேதி நினைவாஞ்சலி செலுத்துவர். அதன்படி இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பாழடைந்த பாலாற்றை காக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம், போராடுவோம் என்றனர்.

 

 

Next Story

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்: தமிழக உரிமையை அரசு தாரை வார்த்ததா? - ராமதாஸ்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ramadoss said TN government should stop the construction of a new barrage in Palar River

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டபடுகிறது; அப்படியென்றால் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இராமச்சந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் இரு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். பாலாற்றின் குறுக்கே கடந்த காலங்களில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு கிடக்கும் நிலையில், பாலாற்றில் புதிய அணை கட்டுவதென்பது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திரம் கட்ட முயல்வது தொடர்பான சர்ச்சை 18 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். குப்பம் பகுதியில் கணேசபுரம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகளில் குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் இருந்த சந்திரபாபு நாயுடு 2006 இல் முயன்ற போது, அதைக் கண்டித்து முதல் குரலை எழுப்பியதும், போராட்டங்களை நடத்தியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அப்போதைய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆந்திர எல்லைக்கே சென்று தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை சென்று பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு  பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய  தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக் கூடாது.

பாலாற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்ட ஆந்திர அரசு, அம்மாநிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் 22 தடுப்பணைகளில் பெரும்பாலானவற்றின் உயரங்களை அதிகரித்து விட்டது. அதனால், ஆந்திரத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் தவிர தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. அதனால், ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.

பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

துர்நாற்றம் வீசும் பாலாறு; பொதுமக்கள் வேதனை 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

foul odor of tannery effluent mixed with the river
 கோப்புப்படம் 

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியிலுள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாலாறு அருகாமையில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் ஆற்று நீர் முழுவதும் நுழைந்து ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

 

இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டு இருக்கக் கூடிய செயல் பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீபாவளி மாமுல் கலெக்ஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.