Skip to main content

டி.ஆர். பாலு எழுதிய கடிதம்! அ.தி.மு.க.வை கழட்டி விடும் மோடி! தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிப் பாலம்?

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

eps-trbaalu-modi

 

ராமர் பாலத்தைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் கடிதம் எழுதியிருக்கிறார் தி.மு.க. எம்.பி. டி.ஆர் பாலு. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிரதமர் மோடி பிடிக்க வேண்டும் என்கிற டி.ஆர். பாலுவின் இந்தக் கடிதவரிகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பதற்றமடைந்த முதல்வர் எடப்பாடி தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகிறதா என டெல்லி லாபி மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் விசாரிக்கத் துவங்கியிருக் கிறார். அ.தி.மு.க சீனியர்களும் பரபரப்படைந்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்றத்திற்குள் குறைந்தபட்சம் 15 எம்.எல்.ஏ.க்களுடன் நுழைந்து விட வேண்டுமென்பது பா.ஜ.க. தலைமையின் திட்டம். அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க. தனித்துப் போட்டியிட்டாலே 174 இடங்களைக் கைப்பற்றும்; அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 3 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை (இந்த சர்வே குறித்து முழு விபரங்களைக் கடந்த மாதம் எழுதியிருக்கிறோம்) எனச் சொல்லியுள்ளன. இதனை பிரதமர் மோடியுடன் இரண்டு முறை விவாதித்திருக்கிறார் அமித்ஷா.

 

இதுகுறித்து பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் நாம் விசாரித்த போது, "ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது தமிழகத்தின் நிர்வாக அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. இருக்க வேண்டும் என 3 அஜெண்டாக்களை வைத்துள்ளது பா.ஜ.க.!

 

அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத்தொடர விரும்பாத பா.ஜ.க., அரசியலுக்கு ரஜினி வராமல் போகும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் வலிமையாக உள்ள தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. தி.மு.க. சீனியர்கள் மூலம் இதற்காக ரகசிய மூவ்களும் நடந்தன. பாசிட்டிவ்வான பதில்கள் வராத நிலையில்தான், தி.மு.க.வின் நிதி கட்டமைப்பு மீது கை வைக்க முடிவு செய்தது.

 

அதாவது, சோனியா-ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அறக்கட்டளைகளின் சட்ட விரோத பணபரிவர்த்தனைகளை மத்திய நிதியமைச்சகமும், அமலாக்கத்துறையும் விசாரித்து வருவதுபோல, தி.மு.க. அறக்கட்டளை விவகாரத்தையும் கையிலெடுத்துள்ளது. இது குறித்த பல விவகா ரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார் அமித்ஷா. அதேசமயம், தி.மு.க.வுக்கு நிதி ஆதாரமான பலரையும் அமலாக்கத்துறை குறி வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், சேதுசமுத்திர திட்டத்தை முன்னிறுத்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் டி.ஆர். பாலு. அதில் சொல்லப்பட்டுள்ள பல வரிகள், பா.ஜ.க.வை குளிர வைப்பதாக இருக்கிறது. இதெல்லாமே டெல்லி திட்டமிடலின் ஒரு பகுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

இதுபற்றி தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, "முடக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை தமிழகத்தின் நலன்களுக்காக துவக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துவது தேவையானதுதான். அதில் தப்பில்லை. ஆனால், ’இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை மோடி பிடிக்க வேண்டும் எனச் சொல்வதில் பா.ஜ.க.வை தி.மு.க. நெருங்கிறதோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. தமிழக மக்களின் மனதில் மோடி இடம்பிடிக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் வேலை இல்லையே! இப்படிப் பல வரிகள் மறைந்திருக்கின்றன. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு ஒரு நேர்க் கோட்டில் வரும்'' என்கிறார் அந்த சீனியர்.

 

இவரைப் போலவே பாலுவின் கடிதத்தை தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் அலசி வருவதுடன் சித்தரஞ்சன்சாலையில் என்ன நடக் கிறது எனத் துப்பறிந்தும் வருகின்றனர். தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரமிடப்படுகிறதா என தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்ட போது, "சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக சுப்பிரமணியசாமி மூலம் வழக்குப் போட்டு முடக்கியவர்கள் பா.ஜ.க.வினர்தான். இந்தத் திட்டத்திற்கு விரோதமானவர்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் இந்தத் திட்டத்தைத் துவக்குவார்களா என எனக்குத் தெரியவில்லை. அரசியல் கொள்கைகளிலும் சமுக கொள்கைகளிலும் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. தி.மு.க.வின் கொள்கை விரோதி பா.ஜ.க. அதனால், கூட்டணிக்கு வாய்ப்பில்லை'' என்கிறார்.

 

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனிடம் பேசியபோது, "தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைத்து கவர்னர் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைத்தான் எங்கள் தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். தவிர, கழகங்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் பா.ஜ.க.வின் இலக்கு. அதற்காகத்தான் தமிழகத்திற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடி செய்து வருகிறார். இறைநம்பிக்கை இல்லாத தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை பா.ஜ.க.வினர் ஏற்கமாட்டார்கள். இருப்பினும், கூட்டணியைத் தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும்'' என்கிறார் அழுத்தமாக.

 

http://onelink.to/nknapp

 

இதற்கிடையே டி.ஆர்.பாலுவின் கடிதவரிகள் எடப்பாடிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதால், முன்னாள் கவர்னர் சதாசிவம் மூலம் அவர் விசாரித்ததில், 'அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது’ என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் எடப்பாடி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

 

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.