Skip to main content

கரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்... தயார் நிலையில் ரயில்வே துறை...!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

கொலைகார கரோனாவின் சங்கிலித் தொடரை துண்டிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவதை போல், சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகள் நோய் பாதித்தோர் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன.

 

 Railways set to become Corona treatment wards ...


இந்த நிமிடம் கூட இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையும் ஏறுமுகத்தில் தான் இருக்கின்றன. இந்த நிலை நீடித்தால், அடுத்த 10 நாளில் இந்தியாவில் அனைத்து மருத்துவ மனைகளும் கரோனா நோயாளிகளால் நிரம்பிவிடும் என்ற எச்சரிக்கைகள் பகீரூட்டுகின்றன. இதை உண்மை என்றும் ஒத்துக்கொள்ளும் வகையில், ரயில் பெட்டிகளை எல்லாம் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றி வருகிறது ரயில்வே துறை. நோயாளிகள் வார்டு, மருத்துவர்கள் வார்டு, கழிவறை என 3 பிரிவுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

நோயாளிகள் பிரிவில் மத்தியில் இருக்கும் படுக்கையும், எதிரே இருக்கும் 3 படுக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல், மேல் படுக்கைக்கு ஏறிச் செல்லும் ஏணிகளும் அப்புறப் படுத்தபட்டுள்ளன. அந்த பிரிவில் 230 வோல்ட் மின்சார வசதி கொண்ட பிளக் பாய்ன்ட் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு எடுக்கும் பிரிவில், மத்தியில் இருக்கும் படுக்கைகள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது பாதுகாப்பு உடைகளை தொங்க விடுவதற்கு கொக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. பொருட்கள், மருந்துகள் வைப்பதற்காக அலமாரி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மடக்கும் வகையிலான டேபிள் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

நோயாளிகள் பிரிவையும், மருத்துவர்கள் பிரிவையும் பிரிக்கும் வகையில், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி பிளாஸ்டிக் திரைச்சீலைகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. கழிவறையில் வாஸ்பேசின் வசதியோடு, தண்ணீர் பைப்பின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்கு வசதியாக கைப்பிடியுடன் கூடிய ஷவர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.