Skip to main content

"இதெல்லாம் தெரியாமலா கலைஞர் ராஜ ராஜ சோழனுக்கு விழா எடுத்தார்?" - ரஞ்சித் விவகாரத்தில் ராஜ்மோகன்   

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

தஞ்சை மாமன்னர் ராஜ ராஜ சோழன் குறித்தும் அவரது ஆட்சிக்காலம் குறித்தும் ஒரு கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துப் பேசியது புயலை கிளப்பியுள்ளது. ராஜ ராஜ சோழன் ஒடுக்கப்பட்டவர்களின் நிலத்தைப் பிடுங்கி அந்தணர்களுக்குக் கொடுத்ததாகவும் அவரது ஆட்சி இருண்ட ஆட்சி எனவும் இன்னும் சில கருத்துகளையும் ரஞ்சித் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள் பலர் ரஞ்சித்தின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகளும் பல்வேறு சங்க, அமைப்பு பிரதிநிதிகளும் ரஞ்சித்தின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யூட்யூபில் பிரபலமான 'புட்சட்னீ' ராஜ்மோகன் ரஞ்சித்தின் பேச்சிற்கு மறுப்பையும எதிர்ப்பையும் தெரிவித்து விரிவான விளக்கத்தைக் கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்...

 

raj mohan



ராஜராஜ சோழன் பற்றி ரஞ்சித் தெரிவித்த கருத்துக்கு எதிரா நீங்க ஒரு வீடியோ போட்டிருந்தீங்க, அதற்கு எதிரான விமர்சனங்களும் உங்களுக்கு வந்திருந்தது, அதை எப்படி பாக்குறீங்க?

நல்லதுதாங்க... விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்பேன். நம்மள விமர்சனம் பன்னி இப்ப ஒன்னும் புதுசாக வரல. எப்போதுமே விமர்சனம் பண்ணுவாங்க. இது ஒரு நல்ல ரீச். 90 சதவீத பேர் அதை பாராட்டினாலும், 10 சதவீத பேர் அதை விமர்சனம் பண்றாங்க. அதில் இருந்து என்னை எப்படி வளப்படுத்திக்கலாம்னுதான் நான் பார்ப்பேன்.என்னையும் சரி, ராஜராஜனையும் சரி, ரஞ்சித்தையும் சரி கொச்சை வார்த்தை போட்டு திட்றவங்களை புறக்கணிச்சிட்டு போயிடுவேன். அந்த மாதிரி விஷயங்களை நான் பார்க்கிறது இல்லை.


ராஜராஜ சோழன் காலம் பொற்காலம்னு புனிதப்படுத்துவது சரியா? அந்த காலகட்டத்தில் எந்த பிரச்சனைகளுமே இல்லையா?

பிரச்சனை இருந்தது உண்மைதான். புனிதப்படுத்துவது மிகச் சரினு சொல்றதை காட்டிலும் சிறுமைப்படுத்துவது கூடாது என்பதுதான் நம்ம வாதம். ராஜராஜனை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனா விமர்சனம் செய்வதற்கு ஒரு அடிப்படை ஆதாரம் வேணும் இல்லையா? அதோடு விமர்சனம் செய்யவேண்டும். ஆனா, வெறும் உணர்வுப்பூர்வமாக விமர்சனம் செய்தால், நம்ம சமூகத்துல ஆளுமையே இல்லாம போயிடும். இந்த மாதிரி நேரத்துல நமக்கு நம்பிக்கையை கொடுப்பவர்கள் இந்த மாதிரி ஆளுமைகள்தான். அவர்கள் குறித்து தவறான தகவல்கள்  தெரிவிக்கப்படும் நிலையில்தான் அதற்கான விளக்கம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

 

 

pa.ranjith



நீங்களே இரண்டாவதா போட்ட வீடியோவில் சொல்றீங்க, பிராமணர்களுக்கு ராஜராஜ சோழன் நிலம் வழங்கியதற்கான குறிப்பு இருக்குன்னு. அப்ப அவர் யாருடைய நிலங்களை வழங்கிறார்?

யாருடைய நிலங்கள் அது... நிலம் உங்களுக்கு சொந்தம், எனக்கு சொந்தம். அனைவருக்கும் பொதுவானது. இன்னும் சொல்லப்போனால் நிலம் யாருக்கும் சொந்தமில்லாத காலகட்டமும் இருந்தது. அதன்பிறகு வரி வசூல் செய்வதற்காக இந்த மன்னர்களால் பிரித்தாளப்பட்டது. அந்தணர்களுக்கு எல்லா நிலங்களையும் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ராஜராஜன் கைகட்டி நின்றார், டயரை கும்பிட்டார் என்ற மாதிரி சொல்வது தவறான ஒன்று. அந்த காலத்துல ராஜராஜ சோழன் தவறு செய்த அந்தணர்களை சிறைபடுத்தியிருக்கார், நாடுகடத்தியிருக்கார். அந்தணர்களுக்கு ராஜராஜன் நிலம் கொடுத்து உண்மை. அதற்காக யாருடைய நிலத்தையும் அபகரித்துக் கொடுக்கவில்லை.


அப்போ நிலங்களை கொடுத்திருக்கார் இல்லையா?

ஆமாங்க, கொடுத்ததுக்கான ஆதாரம் இருக்கு, பறித்ததற்கான ஆதாரம் இல்லை. அவரு எங்கேயும் பறிக்கவில்லை. இப்பவும் நீங்க நம்பாம பேசினீங்கனா அது விதண்டாவாதம்.

விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை. தஞ்சாவூர் கோவிலாகட்டும் எகிப்து பிரமிடாகட்டும், சீன பெருஞ்சுவராகட்டும் அவற்றின் கலை வடிவத்தை போற்றலாம், ஆனால் அந்தகால மன்னர்களை போற்றுவது சரியா?

அயோக்கியத்தனம் என்பதை நாம தவறுன்னு சொல்றோம். முதல் கேள்வியில் இருந்து நான் அதைதான் சொல்றேன். அந்த காலகட்டமே தவறுன்னு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. இன்னும் சொல்லப்போனால் விஜய நகர பேரரசுக்கு பின்னர்தான் ஜாதி பிரிவினையே வந்தது. ராஜராஜன் காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருந்தார்கள். இதை எந்த வராலாற்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதை எல்லாம் தெரியாமலா முன்னாள் முதல்வர் கலைஞர் ராஜராஜனுக்கு விழா எடுத்திருப்பார்.

அதில் கூட சர்ச்சை இருக்கே?

நீங்க இதுதொடர்பாக பொதுவான எந்த தலைவர்களிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அதில் உள்ள உண்மையை அறிந்துகொள்ள இயலும். கம்யூனிஸ்ட் தலைவர் பேராசிரியர் அருணனிடம் கூட கேளுங்கள். அவர்கள் காலத்தில் ஜாதியே இல்லை என்று கூறுகிறார். அவரை ஜாதி அடையாளத்தில் அடைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அடுத்த பகுதி:

"ரஞ்சித், தமிழ் தேசியவாதிகளை, திமுக - அதிமுகவை விமர்சனம் செய்யட்டும். ஆனால்..." - ராஜ்மோகன்  

 

 

 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.