Skip to main content

“முதல்வர் ரங்கசாமியை பாஜக சிறைபடுத்தி வைத்திருக்கிறார்கள்” - தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Puducherry AIADMK candidate Tamilvendan accuses BJP

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ் வேந்தனை நக்கீரன் சார்பில் சந்தித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் புதுச்சேரி அரசியல் நிலை குறித்தும், தங்களது கட்சி குறித்தும் நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டதை இங்குக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளோம்...

புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறதாகக் கூறப்படுகிறது, இதற்கெல்லாம் என்ன தீர்வு இருக்கிறது? இது தொடர்பான வாக்குறுதி உங்களிடம் இருக்கிறதா?

வாக்குறுதியே கிடையாது.. நிறைவேற்றிக் காட்டுவோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை நிறைய இருக்கிறது. காவல்துறையின் கை கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி ரவுடிகளின் கோட்டையாக உள்ளது. யார் உயிருக்கும் பாதுகாப்பில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிறுமி படுகொலை செய்யப்பட்டார். மனதை உருக்கிய சம்பவம் அது. ஒரு சிறுமியை 54 வயது பெரியவர் ஒருவரும் 19 இளைஞர் ஒருவரும் சேர்ந்து வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் தன்னிலை மறந்து கஞ்சாவிற்கு அடிமையானதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்துதான் புதுச்சேரிக்குள் கஞ்சா வருகிறது. தமிழகத்தில் 10 வருடம் அதிமுக ஆட்சி இருந்தத போது இது போன்று ஏதாவது சம்பவம் நடந்ததா? வடமாநிலத்திலிருந்து தமிழநாட்டிற்கு கஞ்சா வருகிறது; அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது. அதனைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும்; தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தடுக்க தவறிவிட்டார்கள். கட்டப்பட்டுள்ள காவல்துறையின் கையை அவிழ்த்துவிட்டால்தான் தடுக்கமுடியும். இதைப்பற்றியெல்லாம் பாஜகவிற்கு எந்தக் கவலையும் இல்லை. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு வரவில்லை. அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் வரவில்லை? முதல்வர் ரங்கசாமி  வரவில்லை. நிவாரணம் கொடுத்தால் போதுமா? இன்றைக்கு அந்தச் சிறுமி உயிரோடு இருந்திருந்தால் வருங்காலத்தில் ஒரு முதல்வராகவோ, ஆட்சியராகவோ ஆகியிருப்பார்.  

எல்லாம் செய்துவிட்டு நிவாரணம் கொடுத்துட்டா முடிஞ்சுடுமா? யாருக்குச் சார் உங்க பணம் வேணும். ஏழைகளுக்குச் சம்பாரிக்கும் திறமை இருக்கிறது. நீங்க என்ன எங்களுக்குப் பணம் தருவது. உங்கள் பணம் எங்களுக்கு வேண்டாம். எங்களைப் படிக்க விடுங்க. ஒருகாலத்தில் கல்வியில் பாண்டிச்சேரி எங்கையோ இருந்தது; ஆனால் இன்று இந்தியாவிலேயே பின் தங்கியுள்ளது. இவர்கள் கல்விக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை.

ஒருபக்கம் முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி, மறுபக்கம் வைத்தியலிங்கம் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி இப்படி இருவரும் பலமான கூட்டணி அமைத்ததால் அதிமுக தனித்து விடப்பட்டுள்ளதா?

ரங்கசாமி - பாஜக ஒரு பலமான கூட்டணி என்று கூறுவது தவறு. ரங்கசாமியை பாஜக சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  எங்கள் முதல்வர் ஒரு கூண்டு கிளிபோன்று உள்ளார். அவரை டார்ச்சர் பண்றாங்க பாஜக. கொரோனா சிகிச்சையின் போது முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்தபோது, பாஜக மூன்று எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்துவிட்டது. ரங்கசாமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அவரது கட்சி தொண்டர்களே அதிருப்தில் இருக்காங்க. புதுச்சேரியே ஒரே ஆர்.எஸ்.எஸ் மயமா மாறிவிட்டது. அதை மாற்றவேண்டும். இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து அதனை மாற்றிக்கொண்டிருக்கிறோம். 

வைத்திலிஙகம் இந்தியா கூட்டணி பலமான கூட்டணி கிடையாது. கடந்த தேர்தலில் வைத்திலிங்கம், ஜான்குமார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இருந்தார்கள். அன்றைக்குக் காங்கிரஸ் பேரியக்கம் ஒன்றாக இருந்தது. அதிலிருந்து பிரிந்துவந்தவர்கள்தான் தறபோது பாஜகவில் இருக்கின்றனர். அப்படியிருக்கும் போது இந்தக் கூட்டணி எப்படி பலமான கூட்டணி என்று சொல்ல முடியும். இவர்கள்தான் பிரிந்துவந்துட்டார்களே என்று பார்த்தால் அதனால் பாஜகவிற்கு பலம் கிடையாது. 

மக்கள் மாறி மாறி கட்சி தாவுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமச்சிவாயத்திற்கு 54 வயது இருக்கும்.அதற்குள் 7 கட்சி மாறிவிட்டார். எனக்கு 34 வயதாகிறது. நான் ஒரு கட்சி அதிமுகவில்தான் இருக்கிறேன். 

நமச்சிவாயம் ரங்கசாமியின் நாற்காலிக்கு ஆசைப்பட்டார் என்று கூறப்பட்டது, இதனால் இருவருக்கும் உள்ளே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது ரங்கசாமி நமச்சிவாயத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் முதலே கூறியதுபோல் எங்க முதல்வர் ரங்கசாமியைக் கூண்டுக் கிளியாக மாற்றிவிட்டனர். நமச்சிவாயம் நடுவில் நிற்கிறார். முதல்வர் ரங்கசாமி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார்.  பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் எங்களுடன் கூட்டணியிலிருந்த வரைக்கும் நல்ல கட்சி. அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி என்றாலே மக்களுக்குப் பிடிக்கும். இருகட்சிகளும் கூட்டணி என்று அறிவித்துவிட்டாலே அவர்கள்தான் ஆளும் கட்சியாக மாற்றிவிடுவார்கள். ஆனால் பாஜக உள்ளே வந்த பிறகு முதல்வர் ரங்கசாமிக்கு அதிகமான இழி பெயர்கள் வந்துள்ளது. அவரால் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யமுடியவில்லை, அப்படி இருக்கும் போது கூட்டணியில் இன்று தொடர்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உதாரணமாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளது. இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை எதிர்த்து அதிமுக மட்டுமே குரல்கொடுத்துள்ளது. மற்ற யாரும் கண்டுகொள்வதில்லை, கமிஷனுக்கு ஆசைப்படுகிறார்கள்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.