Skip to main content

வலியார்முன் தன்னை நினைக்க... காவல்துறைக்கு ஒரு கேள்வி

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

police brutal attack

 

 

பிப்ரவரி 1ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிற்காமல் சென்றதால் காவலர் துரத்தி சென்று லத்தியால் தாக்கினார். அதில் அவர் வண்டியோடு கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  சோதனைக்கு ஒத்துழைக்காமல் செல்பவரை தாக்கியாவது நிறுத்த வேண்டும் என்பதன் நிர்பந்தம் என்ன ?  விபத்துக்களை தடுப்பதற்காக சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பவரை தாக்கினால் விபத்து ஏற்படும் என்பதை  உணர்ந்திருக்கவில்லையா ? அல்லது ஒரு சாமானியன் தன்னை மதிக்காது செல்கிறான் என்ற அதிகாரம் கொண்டவருக்கான கோவமா ?

 

சில நாட்களுக்கு முன்பு, பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக பணிபுரியும் ராஜேஷ் தனது மரணத்துக்கு முன் அவர் எடுத்த வீடியோ வெளியானது அதில் சொல்லப்பட்டிருக்கும் அவரின் ஆதங்கம் பார்ப்போர் அனைவருக்குள்ளும் இருப்பதை உணர முடிகிறது.  பாடியிலிருந்து பெண் ஊழியரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகரில் அடுத்த ஊழியருக்காக சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி காத்திருந்த ராஜேஷை அங்கு வந்த போலீசார் அது நோ பார்க்கிங் என்றுக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். வண்டியில் பெண் ஊழியர் இருக்கிறார் நாகரீகமா பேசுங்கள் என்று கூறியும் அதை பொருட்படுத்தாத போலீசார் அவரது வீட்டில் இருக்கும் பெண்களை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதற்கு முன் திருவொற்றியூரில் சர்விஸ் ரோடு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு உறங்கிய ராஜேஷின் காரை போலீசார் லாக் செய்துவிட்டு 500 ரூபாய் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுமாதிரி சம்பவங்களால் மிகவும் மனம் உடைந்த ராஜேஷ் போலீசார் ஏற்படுத்திய அவமானத்தால் தற்கொலை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளார். தான் மட்டும் அல்லாது தன்னை போன்ற எளிய வாகன ஓட்டிகள் போலீசாரின் அதிகாரத்தால் பலியாவதையும் தனது சாவுக்கு முழு காரணம் சென்னை காவல்துறைதான் எனவும் ஒரு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.  காக்கி சட்டை போட்டிருப்பதால்தான் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போலீசுக்கு மரியாதை கொடுக்கிறோம், அது இல்லாமல் இப்படியெல்லாம் பேசியிருந்தால் நாங்கள் யார் என காட்டியிருப்போம். என் சாவுக்கு பிறகாவது இதுபோல் நடக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டிவிட்டு மறைமலைநகர் அருகில் இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து உயிரைவிட்டிருக்கிறார்.  காவல்துறையின் அத்துமீறலுக்கு அடுத்த பலியாக ராஜேஷ் மரணம் கருதப்படுகிறது.

 

தமிழகத்தில் இது புதிதல்ல. குற்றவாளிகள் முன்பு,ம் சமூக விரோதிகள் முன்பும் மட்டுமே ஓங்கப்பட வேண்டிய காவல்துறை லத்திகள் சாமானிய மக்கள் மீதும் சமூகநல போராளிகள் மீதும் ஓங்கி அடிக்கும் என்பது காவல்துறையின் இயல்பான அடையாளமாய் உள்ளது.  பெரும்பாலான காவல்துறையினர் காக்கிச்சட்டை அணியும்போதே மனிதம் என்ற உணர்வை உரித்து பத்திரமாக வீட்டில் வைத்துவிடுகின்றனர் போலும்.  2017 ஆம் ஆண்டு திருப்பூர் அருகே சாமளாபுரத்தில்  இயங்கிவந்த மதுக்கடையை மூடக்கூறி பெண்கள் நடத்திய போராட்டதை களைப்பதற்காக போலீசார் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கணவனின், மகனின், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனை தாங்காமல் தெருவில் இறங்கி போராடிய அப்பாவி பெண்கள் தலை உடைந்து, கை முறிந்து ஜனநாயகம் செத்துவிட்டது என குமுறினர். சமூகம் சார்ந்த போராட்டங்களின் மீது காவல்துறையின் தடியடிகளும், துப்பாக்கிச்சூடும் ஒருபுறம் இருக்க  தன் அன்றாட வாழ்க்கையில் பிழைப்புக்காக போராடும் சாமானிய மக்கள் போலீசின் மனிதநேயமற்ற செயல்களுக்கு பலியாவதும் நடக்கிறது.

 

police brutal attack

 

நீதிமன்றங்கள் மக்கள் நலனுக்காக விதிக்கும் சட்டங்கள் காவல்துறைக்கு லஞ்சம் வாங்கும் வாய்ப்பாக மாறிப்போகிறது. சட்டங்கள் என்னவாக இருந்தாலும் போலீசுக்கு தேவையெல்லாம் ஸ்பாட் ஃபைன்  100, 500தான்.  திருச்சியில் கடந்த ஆண்டு உஷாவின் உயிருக்கு காவல்துறை விதித்திருந்த விலை இதுதான் போலும். பாவம் ராஜாவுக்கு இது புரியாமல் காவல்துறையின் அதிகாரத்திற்கு தன் மனைவி உஷாவையும், அவர் வயிற்றில் இருந்த குழந்தையையும் பறிகொடுத்துவிட்டார். தஞ்சாவூரை சேர்ந்த ராஜா, கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் நண்பரின் திருமண நிச்சய விழாவிற்காக சென்றுவரும்போது திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போகும் வழியில் துவாக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் காமராஜ்  ராஜாவின் வாகனத்தை நிறுத்தி பணம் வாங்க முயற்சித்துள்ளார்.  அதை புரிந்து கொள்ளாத ராஜா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய போது  ஆய்வாளர் காமராஜ் வேறொரு வாகனத்தில் துரத்திவந்து கோவமாக உதைத்துள்ளார். இதனால் நிலைதடுமாறி விழுந்ததில் உஷா பலத்தகாயமடைந்தார். சிறிது நேரத்துலயே அவரும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.  மாற்றுத்திறனாளி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய உஷாவை மிகுந்த கனவுகளுடன் திருமணம் செய்த ராஜா அவரின் வாழ்க்கையையே காவல்துறையினால் அழித்துவிட்டது என கதறிய கதறல் கல் இதயம் கொண்டவரையும் கண் கலங்க செய்தது. இதற்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை பணியிடை நீக்கம் மட்டுமே.

 

காவல்துறைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமும், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களும் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும் மட்டுமே. அனால் தற்போது காவல்துறையினர் சட்டங்களை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.  பணம் படைத்தவர்கள் குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களுக்கு விதிவிலக்களிப்பதும், சாதாரண மக்கள் குற்றமற்றவராய் இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் இன்னலுக்கு ஆளாவதும் வாடிக்கையே.  போக்குவரத்துக்  காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்குவது போன்றும் நிற்காதவர்களை துரத்தி அடிப்பது போன்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திகின்றன. தன்  சொந்த செலவில் தலைக்கவசம் வாங்கி இலவசமாக தருகிற மிக நேர்மையான காவல் அதிகாரிகள் இருக்கிற போதும், பெருவாரியான அதிகாரிகளின் சுயநல போக்கினால் ஏற்படும் விளைவுகள் ராஜேஷின் மரணம் போன்று  ஈடுசெய்யமுடியாதவை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டபோதும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் நேர்மையான அதிகாரிகள் இருந்தும் பயனில்லை என்பது கசக்கும் உண்மை!!!

 

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து

 

இது வள்ளுவரின் வார்த்தைகள். காவல்துறையினர் வலியவர்களுக்கு தாங்கள் எப்படி அனுகூலம் செய்கிறோம் என்பதை, மெலியவர்களின் முன் அராஜகம் செய்யும்போது நினைக்க வேண்டும்.

 

 

 

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.