Skip to main content

சில்லரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 18/10/2019 | Edited on 19/10/2019

நாங்குநேரி தொகுதிக்குள் வரும் பெரிய ஊர் களக்காடு. இந்த ஊரில் இருக்கும் பெட்டிக் கடை ஒன்றில், காலை பேப்பர்களை வாங்க வந்தார் ஒரு இளைஞர். வெறும் 18 ரூபாய்க்கு பேப்பர்களை வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். "சில்லைரை இல்லயேப்பா''. "பரவால்ல அப்புறம் வாங்கிக்கிடுதேன், இல்லேன்னா பார்த்துக்கலாம்'' என அசால்டாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மதியம் 12 மணி டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது. குடி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தெரிந்த முகங்கள் என்பதால், வழக்கம்போல் 105 ரூபாய் சரக்கை நீட்டுகிறார் டாஸ்மாக் ஊழியர். "ஏலே கோட்டிக்காரா இந்த சரக்கை அடிச்சா உடம்பு என்னத்துக்காறது, 180 சரக்கு எடுலே''’என சர்வ சாதாரணமாக கேட்டு வாங்கிப் போகிறார்கள்.

 

admk



அந்தளவுக்கு தொகுதியில் பணப்புழக்கம் பெருத்தோடுகிறது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நட ராஜன் என தொகுதியை முற்றுகையிட்டிருந்தாலும் தொகுதிக்கு தலைமைப் பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணிதான். அனைத்து வகையான கவனிப்புகளையும் இவர்தான் கவனித்துக்கொள்கிறார். மாவட்டத்தின் பிரபலங்களான மனோஜ்பாண்டியனும் புறநகர் மா.செ.வான பிரபகாரனும் டம்மியாக்கப்பட்டதால், அவர்களின் ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் காண முடியவில்லை.

என்னதான் கையில் கரன்சிக் கட்டுக்களை வைத்துக்கொண்டு சுற்றினாலும் பல கிராமங்களில் மக்களைச் சமாளிப்பதே அமைச்சர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. மூலக்கரைப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அருகில் உள்ள தேவேந்திரகுல மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்றார். அப்போது கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் படங்களைப் போட்ட பிட் நோட்டீசை வினியோகம் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதைப் பார்த்து டென்ஷனான அம்மக்கள், "எங்க தலைவருங்கதான் உங்களுக்கு ஆதரவில்லைன்னு சொல்லிட்டாங்கள்ல, அப்புறம் எதுக்கு அவுக படத்தைப் போட்டீங்க'' என உஷ்ணமானதைப் பார்த்து பாதி வழியிலேயே திரும்பிவிட்டார் வெல்லமண்டி. அதேபோல் பட்டர்புரம் கிராமத்திற்கு அமைச்சர் காமராஜ் சென்ற சமயத்தில் ஒரு பஸ் வந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் காமராஜை சூழ்ந்து கொண்ட மக்கள், "இதுவரைக்கும் இந்த ஊருக்கு வராத பஸ், நீங்க வந்தன்னைக்கு மட்டும் வந்திருக்கு. அதே மாதிரி இங்க இருக்கும் ரேஷன் கடையால எங்களுக்கு எந்த பிரயஜோனமுமில்லை''’என ஆவேசமாகியிருக்கிறார்கள். அருகில் நின்றுகொண்டிருந்த மாஜி எம்.எல்.ஏ. மாணிக்க ராஜாவை கடுகடு முகத்துடன் காமராஜ் பார்க்க, திருதிருவென முழித்திருக்கிறார் மாணிக்கராஜா. இனிமேலும் இங்க இருந்தா சரிப்பட்டு வராது என நினைத்த காமராஜ், விருட்டென வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டார்.

கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் இலைக்கு ஆதரவில்லை என ஓப்பனாகவே சொல்லிவிட்டதால், 30,770 வாக்குகளைக் கொண்டிருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களின் பருத்திக் கோட்டை நாட்டார்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சிதம்பரம், பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் இலைத் தரப்பை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களை வழிமறித்து, கருப்புக் கொடி காட்டியதற்காக மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க. ந.செ.அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர்., உன்னங்குளம் கிராமத்தினர் சிலர் மீது நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர். போட்டு, கொதிநிலையை மேலும் கூட்டியுள்ளது ஆளும்கட்சி.


ஆனால் எல்லா பிரச்சினைகளையும் பணத்தால் சரிபண்ணிவிடும் முடிவுடன் அமைச்சர் தங்கமணி அள்ளி வீசிவருகிறார். பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்ட் கரன்சி சப்ளையாகியுள்ள நிலையில் ஓட்டுக்கு 2 ஆயிரம், அட்வான்ஸ் ஆயிரம் என மக்களைக் குஷிப்படுத்தும் வேலைகள் கன ஜோராக நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஈடாக இல்லையென்றாலும் ஓட்டுக்கு ஆயிரம், என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கிறார் காங்கிரசின் ரூபி மனோகரன். சில கிராமங்களுக்கு எம்.பி.வசந்தகுமாருடன் போனபோது, மக்களிடமிருந்து முணுமுணுப்பு கிளம்பியதால், ரூபி மனோகரனுடன் செல்வதை வசந்தகுமாரே தவிர்த்துவிடுகிறார். வி.சி.க.வின் 17,949 வாக்குகளையும் காங்கிரசுக்கு திருப்பிவிடும் முனைப்பில் தொகுதியை வலம்வருகிறார் வி.சி.க. தலைவர் திருமா.


ஐ.பெரியசாமி தலைமையிலான தி.மு.க. தேர்தல் படையின் சுறுசுறுப்புதான் காங்கிரஸ் ரூபி மனோகரனுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா மொத்தத்தையும் தி.மு.க.வினரிடம் ரூபி மனோகரன் ஒப்படைத்துவிட்டதால் லோக்கல் காங்கிரஸ் புள்ளிகள் அப்செட்டில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஐ.பெரியசாமி, அந்தப் புள்ளிகளை அழைத்து, அவர்கள் மூலமும் பட்டுவாடா செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார். இன்னும் இரு நாட்களில் இரண்டு தரப்பும் கரன்சி சப்ளையில் இறங்கும் என்பதால், தீபாவளி கோலாகலமாக இருக்கும் என்கிறார்கள் நாங்குநேரி தொகுதிவாசிகள்.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.