Skip to main content

உண்மையான வெற்றி என்பது எது? திறமையா? அங்கீகாரமா?

Published on 30/09/2019 | Edited on 30/09/2019


பலவீனங்களை தனக்குள் உணர்ந்து, பலத்தை வெளியுலகுக்கு காட்டும் ஆற்றல் பெற்றவர்களையே சாதனையாளர்கள் என்கிறது உலகம். வாழ்க்கையில் திறமைக்கும் வெற்றிக்கும் ஓர் இடைவெளி உண்டு. அந்த இடைவெளியைக் குறைக்கிறதுதான் நீங்க கற்றுக்கொள்கிற கல்வி. இங்கே காலேஜில் படித்து சர்டிபிகேட் வாங்கினால்தான் மரியாதை-கௌரவம்-அங்கீகாரம் எல்லாம் கிடைக்கும். அந்த சர்டிபிகேட் இல்லையென்றால் அதிகாரப்பூர்வமாக வேலை செய்ய முடியாது என்பதுதான் இன்றுள்ள நிலை. பி.இ.  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து சர்டிபிகேட் வாங்கிய பல இளைஞர்களுக்கு ஒரு சைக்கிள் செயின் கழன்றுபோனால்கூட சரியாக மாட்டத் தெரியாமல் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் ஒரு கார் மெக்கானிக், புது ஆடி காரை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அசெம்பிள் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அதேபோலத்தான் சிவில் இன்ஜினியரிங் முடித்தவருக்கு ஒரு சின்ன ப்ளாட்பார்ம் கூட கட்டத் தெரியாது. ஆனால், நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே கோடு போட்ட டவுசர் போட்டுக்கொண்டு வேலை செய்யும் ஒரு கொத்தனாரிடம் ப்ளானைக் கொடுத்து இதுபோல கட்டிக் கொடுங்கள் என்று சொன்னால், அப்படியே கட்டிவிடுவார்.

 

gj



இது இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டூடன்ட்ஸூக்கு மட்டும் உள்ள பிரச்சினையில்லை. எல்லா ஸ்டூடன்ட்ன்ஸூக்கும் இதே பிராப்ளம்தான். ஆனாலும், படித்தவர்களுக்குத்தான் இங்கே மரியாதை. அப்படி என்றால் உண்மையான வெற்றி என்பது எது? திறமையா? உரிய அங்கீகாரமா? இந்த இடத்தில்தான் நீங்கள் கேட்க வேண்டும். அறிவை கல்லூரியில், இன்டர்நெட்டில் என்று எங்கு வேண்டுமானாலும் தேடிப் பெறலாம். அப்படி பெற்ற அறிவை பிராக்டிக்கலாக எந்த அளவுக்கு செயல்படுத்துகிறோம் என்பதுதான் திறமை. படித்த படிப்பை நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாத அளவில் பலர் இருக்கிறார்கள். படிப்பும் திறமையும் இன்றைக்கு எத்தனை பேரிடம் சரியான அளவில் இருக்கிறது என்பதுதான் நாம் பதில் பெற வேண்டிய கேள்வி.

சான்றிதழ் மூலமாகக் கிடைக்கும், அங்கீகரிக்கப்பட்ட அறிவு. அதை நடைமுறைகேற்றபடி மேற்கொள்ளும் பயிற்சியால், வளரும் திறமை. இந்த இரண்டையும்விட மிக முக்கியமானது வெற்றி பெறுவோம் என்கிற உறுதியான மனநிலை. எனவே, வெற்றி என்பது நம் மனநிலையைச் சார்ந்ததாக இருக்கிறது. உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும். இன்றைய உலகில் மிகப் பெரும் சாதனையாளர்களாகப் பார்க்கப்படுபவர்களில் சிலர், முறைப்படி படித்து வந்தவர்கள் இல்லை. நாம் சொல்கிற கல்வி முறையில் அவர்கள் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை இன்றைக்குத் தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. அதன் தலைவர் யார் என்று கேட்டு முடிப்பதற்குள்ளேயே, பில்கேட்ஸ் என்று பதில் வரும். அதுபோல, ஆப்பிள் கம்ப்யூட்டர் என்று சொன்னதுமே ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற பதில் வரும். இவர்களைப் போல கம்ப்யூட்டர் ஃபீல்டில் கலக்கியவர்கள் யாரும் கிடையாது. ஆனால், இந்த இரண்டு பேருமே முறைப்படியான கல்வியில் பெரிதாக சாதிக்கவில்லை. பள்ளிக்கூட அளவில்தான் படித்திருக்கிறார்கள். பெரிய பெரிய கல்லூரிகளுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ போகவில்லை. ஆனால், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் படித்தவர்களைவிட பல மடங்கு அதிகமாக இவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள். இப்படிச் சொல்வதால், கல்லூரியில் ஒழுங்காகப் படிக்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், எது எளிதானதாகத் தோன்றுகிறதோ அதை நம் மனது சட்டெனக் கவ்விப் பிடித்துக் கொள்ளும். அது இயல்பானது என்றாலும், சரியானது அல்ல. எது எளிதானது என்பதைவிட எது சரியானது, உண்மையானது என்பதையே நம் மனது தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

 

fg



பில்கேட்சும், ஸ்டீவ் ஜாப்சும் அப்படித்தான். படிப்பு, திறமை இதைவிட வெற்றிக்கான மனநிலைதான் அவர்களிடம் அதிகமாக இருந்தது. இப்படிப் பலரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஆனால், இதை அப்படியே திருப்பிப் போட்டுப் பாருங்கள். வெற்றிக்கான மனநிலை இல்லாமல் படிப்பையும் திறமையையும் மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிபெற்றவர்கள் என்று யாரையாவது அடையாளம் காட்ட முடியுமா? ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து யோசித்தாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள். ட்ரிபிள் இ இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஒரு ஃப்யூஸ் போடத் தெரியவில்லை என்றால், வாங்கிய பட்டத்தினால் என்ன பலன்? எந்த காலேஜில் நீங்கள் படிப்பவராக இருந்தாலும், டிகிரி முடித்தால் உங்களுக்குப் பட்டம்  கிடைக்கும். பி.பி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் இப்படிப் பல பட்டங்கள். அந்தப் பட்டத்தை நீங்கள் விசிட்டிங் கார்டில் போட்டுக் கொள்ளலாம். கல்யாணப் பத்திரிகையில் போட்டுக்கொள்ளலாம். லெட்டர் பேடு- நேம் போர்டு என்று போட்டுக் கொள்ளலாம். ஆனாலும், கல்வித் தகுதியுடன் திறமை என்பது மிக முக்கியம். கல்வி என்பது நாம் நிறைய சம்பாதிப்பதற்கானது என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. அது நம் வாழ்க்கையை வெற்றி-தோல்வி இரண்டிலும் தாக்குப்பிடிக்கக்கூடியதாக மாற்றும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். ஒரு சின்ன சம்பவம் சொல்றேன்.

ஆஃப்கானிஸ்தான் பாலைவனத்தில் ஒரு அமெரிக்கக்காரர் ஜீப்பில் போறாரு. ரொம்ப ஸ்பீடா போய்க்கிட்டிருக்கிறப்ப, ஜீப் திடீர்னு நின்று போயிடுது. அவருக்கு ரிப்பேர் பண்ணத் தெரியலை. வெயிலோ கொளுத்தது. நம்ம ஊருல சொல்ற மாதிரி சொல்லணும்னா, உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது. இரண்டு மணிநேரமா அந்த வெயிலிலேயே நிக்கிறாரு அந்த அமெரிக்கக்காரரு. அப்ப ஒருத்தரு தாடி வச்சிக்கிட்டு அந்தப் பக்கம் வர்றாரு. அவர் ஆஃப்கானிஸ்தான் நாட்டுக்காரருதான். அந்த நாட்டுக்காரங்களைப் பார்த்தா அமெரிக்காக்காரங்களுக்கு ஒரு இளக்காரம், திமிரு இதெல்லாம் இருக்கும். ஜீப் நின்று போனதால் தவிச்சிக்கிட்டிருந்த அந்த அமெரிக்கக்காரருக்கும் அந்த திமிர் குறையலை. தாடி வச்சிருந்தவரைப் பார்த்து அமெரிக்கக்காரரு கேட்கிறாரு…"இந்த ஜீப்பை உனக்கு ரிப்பேர் பண்ணத் தெரியுமா? இல்லேன்னா, யாராவது மெக்கானிக்கைக் கூப்பிட்டுக்கிட்டு வர்றியா? நான் உனக்கு பணம் தர்றேன்'னு. அதிலேயே ஒரு தெனாவெட்டு தோரணை. தாடி வச்சிருந்த ஆஃப்கானிஸ்தான்காரர் அந்தக் கொளுத்துற வெயிலிலும் ரொம்ப கூலா, "நானே ரிப்பேர் பண்றேன்'னு சொல்லிக்கிட்டே பேனட்டை திறந்தாரு. அமெரிக்கக்காரரைப் பார்த்து, ஸ்பேனர் இருக்கான்னு கேட்டாரு.

அமெரிக்கக்காரர் அந்த ஜீப்பிலிருந்து ஸ்பேனரை எடுத்துக் கொடுத்தாரு. அதை வாங்கி, ஜீப்பிலே ஒரு தட்டு தட்டுனாரு அந்த ஆஃப்கானிஸ்தான் தாடிக்காரரு. ஜீப் உடனே ஸ்டார்ட் ஆயிடிச்சி. அமெரிக்கக்காரருக்கு ஒரே ஆச்சரியம். என்னய்யா நாம இரண்டு மணிநேரமா வெயிலிலே நிற்கிறோம். இந்த ஆளு வந்து, ஒரு தட்டு தட்டுனான். வண்டி ஸ்டார்ட் ஆயிடிச்சே அப்படிங்கிறதால ஆச்சரியம். "ரொம்ப தேங்க்ஸ்.. ஜீப்பை ரிப்பேர் செஞ்சதற்கு எவ்வளவு காசு வேணும்'னு மறுபடியும் அதே தெனாவெட்டு தோரணையோடு அமெரிக்கக்காரரு கேட்டாரு. அவரை அந்தத் தாடிக்கார ஆஃப்கானிஸ்தர் மேலும் கீழும் பார்த்துவிட்டு "500 யு.எஸ். டாலர்'னு சொன்னாரு. அமெரிக்கக்காரருக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்னப்பா.. இரண்டு நிமிஷ வேலைதானே.. வந்ததும் தட்டுனே.. வண்டி ஸ்டார்ட் ஆயிடிச்சி. இதுக்கு 500 யு.எஸ். டாலரா'ன்னு கேட்டாரு. நம்ம இந்திய ரூபாய் மதிப்பில் 26 ஆயிரம் ரூபாய். அதனாலதான் அமெரிக்கக்காரருக்கு அதிர்ச்சி.
"எதுக்கு 500 டாலர்? என்னென்ன ரிப்பேர் பார்த்தே? எனக்கு பிரேக்-அப் வேணும். சொல்லு'ன்னு அமெரிக்கக்காரர் கேட்டாரு. அப்பவும் அந்த ஆஃப்கானிஸ்தான்காரர் ரொம்ப கூலா, "தட்டுனதுக்கு 5 டாலர். எந்த இடத்தில் பிராப்ளம்னு பார்த்து தட்டுனேன்ல அதுக்கு 495 டாலர்'னு சொன்னாரு. அமெரிக்கக்காரரால ஒண்ணும் பேச முடியலை. கேட்ட பணத்தைக் கொடுத்துட்டு ஜீப்பை எடுத்துட்டு கிளம்பிட்டாரு. திறமையை எப்படி அறிவாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அந்த அறிவுடன் திறமை சேராவிட்டால் எந்தப் பயனும் இல்லை.

எனக்குத் தெரிந்த ஒருவர், மெட்ராஸ் ஐ.ஐ.டியில் படித்தவர். இப்போது ஒரு இன்ஜினியரிங் காலேஜ் நடத்துகிறார். அவர் செகன்ட் இயருக்கு கணக்குப்பாடம் எடுக்கப்போகிறார். அங்கே இருந்த மாணவர்களுக்கு ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் என்பது எப்படி வந்தது என்பது சொல்லத் தெரியவில்லை. இது நாம் ஏழாம் கிளாஸில் கற்றுக்கொண்ட பாடம். அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அந்த மாணவர்களுக்கு ஒரு ஸ்கூல் டீச்சரை வைத்து, டியூஷன் எடுக்கப்படுகிறது. அதாவது,  மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வி என்று நாம் நினைத்துவிடுவதால், இன்ஜினியரிங் போன்ற உயர் படிப்புகளுக்கு வரும்போதுகூட அடிப்படையான விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது. அதற்கு டியூஷன் படிக்க வேண்டியிருக்கிறது. ஸ்கூலில் செய்ய வேண்டியதை காலேஜில் செய்யவேண்டிய நிலைமை.
 

h



நீங்கள் சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். சின்ன வயதில் நீச்சலடிக்கக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இப்போது டூ-வீலர், பஸ், கார் என்று பயணம் செய்துகொண்டிருக்கலாம். சைக்கிள் ஓட்டி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். ஆனாலும், ஒரு  சைக்கிளை உங்களிடம் கொடுத்து இப்போது ஓட்டச் சொன்னாலும் நீங்கள் ஓட்டிவிடுவீர்கள். அதுபோல ஒரு நீச்சல் குளத்திலோ ஆற்றிலோ இப்போது நீச்சல் அடிக்கச் சொன்னாலும் அடித்துவிடுவீர்கள். எப்போதோ பழகிய சைக்கிளும் நீச்சலும் எத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னாலும் இப்போதும் மறக்காமல் இருக்கிறது. ஆனால், கடந்த செமஸ்டரில் படித்த பாடம் இந்த செமஸ்டருக்கு ஏன் மறந்துபோய்விடுகிறது?

ஏன் என்றால், செமஸ்டருக்குப் படிக்கிறோம். சைக்கிளையும் நீச்சலையும் கற்றுக்கொள்கிறோம். படிப்பதற்கும், கற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், கல்வியின் மூலமாகப் பெறும் அறிவை நாம் திறமையாக மாற்றிக் கொள்ள முடியும். அப்படி மாற்றுவதற்கு மனநிலை   மிக மிக அவசியம். சரி ஆட்டிடியூட் என்கிற மனநிலையை நாம் எந்தக் கல்லூரியில் படிக்க முடியும்? வீட்டிலாவது அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா? வேறு எங்கேயாவது படிக்க முடியுமா? யாராவது சொல்லித்தர இருக்கிறார்களா? இந்தக் கேள்விகள்தான் உங்களுக்குத் தோன்றும். பதில்கள் நிறையவே இருக்கின்றன. சொல்லித்தர நான் ரெடி.. கேட்பதற்கு நீங்களும் ரெடிதானே...
 

Next Story

கம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம்! - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்! 

Published on 28/10/2020 | Edited on 31/10/2020
kadalaimittai

 

 

தனது சொந்த ஊரை பிரிந்து இன்னொரு நகரத்திலோ, நாட்டிலோ பணி நிமித்தமாக வாழ்பவர்கள் ஒவ்வொருவருமே தனது ஊரை மிஸ் பண்ணுவார்கள். அப்படி மிஸ் பண்றதுக்கான காரணங்கள் என்னென்ன? ஊர்... ஊரிலிருக்கும் உறவுகள்... அடுத்ததா, ஊருக்கே உரிய உணவுகள். உண்மைதான், இப்போதும் ஊருக்கு சென்று வரும் ஒருவர் தன் ஊரின் ஸ்பெஷல் உணவு/இனிப்பை அலுவலக நண்பர்களுக்கு வாங்கி வர வேண்டுமென்பது எல்லா அலுவலகங்களிலும் எழுதப்படாத விதி. உணவு சம்மந்தமாக இன்னும் நூறு யூ-ட்யூப் சேனல்கள் தொடங்கப்பட்டாலும் மில்லியன் வ்யூஸ் கொடுக்க ரெடியாக இருப்பவர்கள் நம்மவர்கள். இப்படி, உணவோடு உணர்வுபூர்வமான உறவு கொண்ட பெருமைமிகு 'ஃபுட்டி'க்கள் (foodies) நம் மக்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, வரப்பிரசாதமாக ஒரு வெப்சைட் இருக்கிறது. 'நேட்டிவ் ஸ்பெஷல்' (www.nativespecial.com) தான் அது. உள்ளே சென்று பார்த்தால், சுரக்கும் எச்சிலில் லேப்-டாப்/மொபைல் ஃபோன் நனைந்துவிடும், உருவாகும் கூஸ்பம்ப்ஸில் உடம்பு சிலிர்க்கும். திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கருப்பட்டி மைசூர்பாக், கரூர் தேங்காய் மிட்டாய்... என நீண்டுகொண்டே போகிறது ஸ்வீட் லிஸ்ட். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஊர் பண்டத்தை அதே ருசியோடு, அதே தயாரிப்பாளர்களிடம் வாங்கி அனுப்புகிறார்கள். எவ்வளவு பெரிய சேவை இது? எங்கு தொடங்கியது இது? தொடங்கியவர்களை தேடிப்பிடித்துப் பேசினோம்.

 

நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஊர் பண்டத்தை அதே ருசியோடு, அதே பாரம்பரிய மணத்துடன் ஐந்தே நாட்களில் உங்கள் வசிப்பிடத்தில் ஹோம் டெலிவரி செய்கிறார்கள். எவ்வளவு பெரிய அசாத்தியச்  சேவை சங்கிலி இது? எப்படி சாத்தியமாயிற்று? எங்கு தொடங்கியது இது? தொடங்கியவர்களை தேடிப்பிடித்துப் பேசினோம்.


"என்ஜினியர் டிகிரி,  சாஃப்ட்வேர் வேலை, அமெரிக்க பயணம்  என்ற ரெகுலர் நடுத்தர குடும்ப இளைஞர்களின் போக்கில் பயணித்த இளைஞர்கள் என்றாலும் நம் மொழி மற்றும் மண் சார்ந்த சிந்தனையில்  இயல்பாகவே அதிக நாட்டம்  கொண்டிருந்தோம். தூர தேச வாழ்வியல் நமது ஊரின் சிறப்புகளை நிறைய உணர்த்தியிருந்த காலகட்டம். அங்கு அலுவலகத்தில் அனைத்து நாட்டுக்காரர்களும் அவரவர் ஊர் சென்று திரும்பும் பொழுது அவர்களுது ஊரின் உணவுப் பண்டங்களைக் கொணர்ந்து தருவது வழக்கம். அது போல் ஒரு நாள் இத்தாலியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.  சரி நாமும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ருசித்துப் பார்த்தால் அது நம்ம ஊர் தேங்கா மிட்டாய்தான்.  அந்த குறிப்பிட்ட தருணத்தில் சிறு புள்ளியாக துவங்கிய சிந்தனைதான் பிறகு இந்தியா திரும்பியதும் நேட்டிவ் ஸ்பெஷல் என முழுமைப் படுத்தப்பட்டு நண்பர்களுடன் சேர்ந்து செயல்படத் துவங்கியது.

வணிக ரீதியான தொழில் சார்ந்த சிந்தனை அடிப்படை இல்லாமல் நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களுக்கு ஒரு பொருளாதார அடிப்படையினை உருவாக்க வேண்டும் அதனைச் சார்ந்து இருக்கும் நம்ம ஊர் கிராமத்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அது அமைய வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படத் துவங்கியதால் லாபத்தினை பெரியதாகக் கொள்ளாமல் வருமானம் இல்லாத போதிலும் தொடர்ந்து இதில் செயல்படத் துவங்கினோம்.  வேலை செய்து கொண்டே இதனைச் செய்ததால் வார இறுதி நாட்களில் தமிழகம் முழுக்க பயணிப்பது,  மாலை நேரங்களில் வரும் ஆர்டர்களை அனுப்புவது என மூன்று ஆண்டுகள் எந்த ஒரு பொழுது போக்கும் இன்றி இதற்காகவே இயங்கினோம்.  வருமானம் இல்லை என்றாலும் இப்படி ஒரு பிளாட்பார்மினை நிறுவுவது நம்ம ஊர் பாரம்பரிய உற்பத்தியாளர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கும் என்ற சிந்தனை ஒன்று மட்டுமே எம்மை உந்தித் தள்ளியது" என தங்களது அனுபவத்தினை சிரித்த முகத்துடன் பகிர்ந்தனர் அதன் இயக்குனர்கள்.

 

 

murukku

 

 

பிறர் எண்ணத் துணியாததையும், எண்ண மட்டுமே துணிவதையும் செய்பவர்கள்தானே சாதிக்கிறார்கள்?  2015 வரை இப்படித்தான் அவர்களின் தொழில்முயற்சி தொடர்ந்தது. ஏற்கனவே  வாங்கிய வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆடர் செய்தது, இவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது.

 

இன்னும் இதனை வீரியமாக முன்னெடுக்க 'இதை முழு நேரத் தொழிலாக செய்தால் என்ன?' என்ற கேள்வி எழும்ப அதற்கான முயற்சிகளைத் துவங்கினர். "மெல்ல குடும்பத்தாருடன் இதனைப் பகிரத் துவங்கினோம் இப்பொருளினை ஆன்லைனில் விற்க முடியும்  என்பதை  யாரும்  நம்பவில்லை. அவர்களுக்கு அது புதிதாக இருந்தது. ஆனாலும் நாங்கள் ஏற்கனவே பார்ட்-டைமாக இதை செய்யும்போது ஒரு சின்ன நம்பிக்கையை உருவாக்கியிருந்ததால் யாரும் தடுக்கவோ எதிர்க்கவோயில்லை."

 

மெல்ல 'நேட்டிவ் ஸ்பெஷல்'லில் விற்கப்படும் பண்டங்களின் எண்ணிக்கை வகைகளை அதிகரித்தனர். ஒவ்வொரு பண்டத்தையும் சேர்க்கும் முன் அவர்கள் செய்யும் களப்பணி ஆச்சரியப்பட வைக்கிறது. "மணப்பாறை முறுக்கு வாங்க மணப்பாறை போய் இறங்கினோம். முறுக்கு செய்றவங்க 200 பேருக்கு மேல இருந்தாங்க. அதுல நாம எதிர்பாக்குற தரத்தை யார் தருவாங்கன்னு தேர்ந்தெடுக்குறதுதான் நம்ம பிஸினஸோட முக்கிய பகுதி. ஒவ்வொரு ஐட்டம் புதுசா சேக்குறதுக்கு முன்னாடி நிறைய வேலை பாக்குறோம்.  அதனால் குவாலிட்டியில் எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க முடியுது" என்று ஊர் ஊராக சுற்றி உணவு வகைகளை சுவைத்த கதை சொல்கிறார்கள்.
 

 

srivilliputhoor palkova

 

"நிறைய டிராவல் பண்ணோம். எல்லா ஊரும் சுத்தினோம்... ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சுவை... கிடைச்ச பொருளை, இவ்வளவு தூரம் கொண்டு சேர்க்கணும்னா, அதை அவர்களது வழக்கத்தை விட அதிகமான தரத்தில் செய்யணும். அதுக்கு நிறைய பேர் ஒத்துக்க மாட்டாங்க. 'இவ்வளவு மெனக்கிட்டு தயார் செய்வது கஷ்டமாச்சே?'னு சிலர் தயங்குவாங்க. சிலர் ரொம்ப ஆர்வமாகி அவுங்களே ஆராய்ச்சி பண்ணி பல வகைகள் அனுப்புவாங்க. நாங்க எதிர்பார்க்குற உயர்ந்த தரத்துக்கு ஒத்துக்கொள்பவர்களைத்தான் செலக்ட் பண்ணுறோம். கன்னியாகுமரில சுட்ட முந்திரின்னு ஒரு ஐட்டம் இருக்கு, வெள்ளியணைல அதிரசம். மணல்மேடு முறுக்குன்னு ஒரு ஐட்டம். ஒரு காலத்துல கிராமம் முழுக்க அதுதான் தொழில். ஆனா, நாங்க போனப்போ ஒரே ஒருத்தர்தான் அதை செஞ்சார். அவர்கிட்ட வயசான நாலுபேர்தான் வந்து செஞ்சு கொடுத்தாங்க. முதலில் பயந்தார். நாங்க நம்பிக்கை கொடுத்து செய்யச் சொன்னோம். இப்போ இன்னும் கொஞ்ச பேர் வந்து செய்றாங்க. அழிவின் விளிம்பில் இருந்த, தன்னை அடுத்த காலத்துக்கு நகர்த்திக்கொள்ள முடியாத பல உணவுப்பொருட்கள் போயிருச்சு. அதுல சில விஷயங்களை நாங்க மீட்டோம் என்பது பெரிய திருப்தி" என்று அவர்கள் சொல்லும்போது நாம் அறியாத இந்தத் தொழிலின் பரிமாணம் விரிந்தது.

 

வெளிநாடு வரை சுவையைக் கொண்டு சேர்ப்பது சரி... தரத்தையும் சிந்தாமல் சிதறாமல் சென்றடைவதையும் எப்படி உறுதி செய்கிறார்கள்?

"பேக்கிங்ல அமெரிக்காவின் ஸ்டாண்டர்டில் அதிக பட்ச தரத்தை கடைபிடிக்குறோம், அதே தரத்தில்தான் இந்தியாவுக்கும் பண்றோம். ஆரம்பத்தில் முறுக்கு உடைந்து தூள் தூளாகப் போய் சேர்ந்திருக்கு. பஞ்சாமிர்தம் கீழே ஊத்தியிருக்கு... இப்படி சில தவறுகள். ஒரு முறை மும்பைல இருந்து ஒரு ஆடர். தனது கணவரின் பிறந்தநாளுக்காக விருந்தினர்களுக்குப் பஞ்சாமிர்தம் கொடுக்கவேண்டுமென்று ஆசை ஆசையாக ஆடர் பண்ணாங்க ஒரு அம்மா. ஆனா, எதிர்பாராவிதமா பஞ்சாமிர்தம் பேக்கிங் உடைஞ்சு ஊத்திருச்சு. முதலில் மனைவி கூப்பிட்டு புகார் செஞ்சாங்க, ரொம்ப கோபமாகப் பேசுனாங்க. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. ஆனா பின்னாடியே கணவர் கால் பண்ணி, 'இது இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம். நீங்க ஆரம்ப கட்டத்தில் இருக்கீங்கன்னு தெரியும். அதுனால, என் மனைவி சொன்னதை வச்சு எதுவும் முடிவுக்கு வந்துறாதீங்க. இன்னும் நல்லா பண்ணுங்க..." என்று கூறி ஊக்கப்படுத்தினார். எங்களுக்கே அது புதுசா இருந்தது. அதன் பிறகு பேக்கிங்கில் சின்ன தவறு கூட நடக்கக்கூடாது என்பதில் மிக கவனமா இருக்கோம்.

 

ஒவ்வொரு முறையும் கஸ்டமர்கள் தந்த ஃபீட்பேக்தான் எங்களை நகர்த்தியது. UKயில் இருந்து ஒரு பெண்மணி பேசுனாங்க. 'இரவு 12 மணி, லேட் ஆய்டுச்சுன்னு தெரியும், இருந்தாலும் நாளைக்கு தள்ளிப்போட வேண்டாமென்று கூப்பிட்டேன். 30 வருஷமா நாங்க இங்க செட்டிலாகிட்டோம். இதை கண்ல பார்த்ததே பெரிய விஷயம். இளந்தவடை என்று ஒரு தின்பண்டம் இருக்கிறதென்பதே என் பொண்ணுக்கு தெரியாம போயிடுமோன்னு நெனச்சேன். உங்க மூலமா எங்க பொண்ணு அதை சுவைச்சுட்டா'ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா பேசுனாங்க. இப்படி பல அனுபவங்கள்" என்று ஸ்வீட்க்கொரு செண்டிமெண்ட் சைட் இருப்பதை நமக்கு உணர்த்தினார் பாஸ்கரன்.

 

native sweets

 

பேசப்பேச நமக்கு நாவூறியது. 'நேட்டிவ் ஸ்பெஷல்.காம்'மின் டாப் - 5 உணவுப்பண்டங்கள் என்னவென்று கேட்டோம். "திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா இரண்டும் எப்போதும் டாப். கருப்பட்டி மைசூர்பாக்ன்னு ஒரு ஐட்டம் எமது முயற்சியில் நமது பாரம்பரிய கருப்பட்டியினைக் கொண்டு ஒரிஜினலாக கொண்டு வந்தோம், எல்லோருக்குமே பிடித்த ஐட்டம் இது. சின்ன வெங்காய முறுக்கு... பீட்பேக், விற்பனை இரண்டிலும் டாப். இவை தவிர அவ்வப்போது ஒவ்வொரு பண்டம் முன்னிலையில் இருக்கும்" என்று பெஸ்ட் செல்லர் லிஸ்ட் சொன்னார்.

 

கடைசியாக ஒரு கேள்வி மனதில் இருந்தது. ஐடி வேலையை விட்டுட்டு பிசினஸ் பண்றேன், விவசாயம் பண்றேன் என்பது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிவிட்டது. உண்மையில் எப்படி உணர்கிறார்கள் இவர்கள்? கேட்டுவிட்டோம்... "எமது ஐடி நண்பர்களில் எம்மை விட அதிகம் சம்பாரிப்பவர்களும் இருக்காங்க, இன்னும் இந்த அளவுக்கு வராதவங்களும் இருக்காங்க. ஆனால், ஒரு விஷயம். எங்கள் நண்பர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் பேசும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கூறாக கேள்விப்படுகிறோம். ஆனால், எங்களுக்கு அந்த வார்த்தை பொருந்தாது. ஞாயிற்றுக்கிழமையிலும் கூட அலுவலகம் வந்துவிடுவோம். வருமானம் குறைவுதான் என்றாலும் நம் சமூகம் சார்ந்த நலன் பயக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுகிறோம்" என்றனர் திருப்தியுடன். எல்லோரும் இப்படி முயற்சியில் ஈடுபட முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையும் வெவ்வேறு. நாம என்ன செய்யலாம்? 'நேட்டிவ் ஸ்பெஷல்.காம்'மில் (www.nativespecial.com) ஆடர் செய்து 'ஸ்வீட் சாப்பிடுவோம், ஸ்ட்ரெஸ்ஸை மறப்போம்'. நம்மிடம் மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்த ’நேட்டிவ் ஸ்பெஷல்’ இயக்குனர்கள் பார்த்திபன், பாஸ்கரன் மற்றும் செல்வகுமார் ஆகியோரை வாழ்த்துவோம். 

 

   

Next Story

சாம்பிராணினா சும்மா இல்ல! 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை!

Published on 28/09/2020 | Edited on 06/11/2020
srimathi sambrani jk muthu

ஆரம்பம்...

 

"ஒரு நாள் எங்க வாத்தியார் ஒருத்தர் கூப்பிட்டுக் கேட்டார், 'தம்பி டேய்... நீ பிசினஸ் பண்றியாடா?'ன்னு. அப்போதான் தோனுச்சு, 'ஓஹோ... நாம பண்றதுக்கு பேர்தான் பிசினஸ்ஸா'ன்னு" என்று சொல்லி மனம் விட்டு சிரிக்கிறார் ஜே.கே.முத்து. பிசினஸ் என்ற வார்த்தை தெரியும் முன்பே, தான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொழில் செய்யத் தொடங்கி, இன்று தனது தயாரிப்பை  இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். வடஇந்தியாவில் இவரது ப்ராண்ட்தான் முன்னணியில் இருக்கிறது. இவரது பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களையும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள்.

 

srimathy stall

 

 

அப்படி என்ன தயாரிக்கிறார்கள்? சாம்பிராணி! நாம் சாதாரணமாக நினைக்கும் சாம்பிராணியின் உலக அளவிலான வர்த்தகம் மிகப்பெரியது. அதில் பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கெல்லாம் 'டஃப்' கொடுக்கிறார்கள் இரண்டு தமிழர்கள். ஜே.கே.முத்து  - சம்பத்குமார் ஆகிய இரு மதுரை நண்பர்கள்தான் தங்களது 'கமலம் க்ரூப் - டோன் டீலிங்ஸ் ப்ரைவேட் லிமிட்டட்' நிறுவனத்தின் தயாரிப்பான 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வடஇந்தியாவையும் மணக்கச் செய்கிறார்கள். இவர்களது தயாரிப்புகளுக்கு வடஇந்தியாவில் நல்ல வரவேற்பு. பல மாநிலங்களின் முக்கிய பிரமுகர்கள் இவர்களை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார்களாம். “நாங்க எங்களோட வெப்சைட்ல நேரடியா எங்க மொபைல் நம்பரை கொடுத்திருப்பதால, எங்க கஸ்டமர்ஸ் அடிக்கடி கூப்பிட்டு பேசுவாங்க, பாராட்டுவாங்க. ஒரு முறை சீரடி சாய்பாபா கோவிலின் தலைமை அர்ச்சகரே நேரடியா எனக்கு ஃபோன் பண்ணி, உங்க தயாரிப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினார். எம்.பி., எம்.எல்.ஏ, பெரிய அதிகாரிகள் இப்படி பலர் பேசிருக்காங்க. இப்படி வந்த ஃபோன்களில் என்னால் இன்னும் நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி தந்த விசயம், சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி எங்க தயாரிப்புகளை ரொம்ப விரும்பிக் கேட்டு வாங்குவாங்கன்னு எங்க டீலர் சொன்னது. அவர் சொல்லும்போது, முதலில் அஞ்சலின்னா யாருன்னு தெரியாம, சரி சரின்னு பேசிட்டு இருந்தேன். அவர்தான் ‘சச்சின் மனைவிய்யா’ என்று குறிப்பிட்டு சொன்னார். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது" என்கிறார்கள் நண்பர்கள்.

 

jkmuthu sampath old pic

ஜே.கே.முத்து  - சம்பத்குமார் (அப்போது)

 

jk muthu sampathkumar

ஜே.கே.முத்து  - சம்பத்குமார் (இப்போது)

 

இப்படி, தங்கள் தரத்தாலும் சரியான வியாபார வியூகத்தாலும் வெற்றியைப் பெற்று, பலருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து, தங்கள் பயணத்தின் 23 ஆண்டுகளை கடந்திருக்கிறார்கள் இவர்கள். இந்த பிசினஸ் பயணத்தை தனது பதினாறாம் வயதிலேயே, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, 1990ஆம் ஆண்டில் தொடங்கிவிட்டார் முத்து. 'டோன் மியூஸிக்கல்ஸ்' என்ற பெயரில் ஆடியோ கேசட் விற்பனை செய்திருக்கிறார். அப்போதுதான் இவரது ஆசிரியர் ஒருவர் இவரிடம் 'நீ பிசினஸ் பண்றியா தம்பி?' என்று கேட்க, 'பிசினஸ்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. இவரது ஆர்வத்தாலும், அவர் நடத்தி வந்த ஆடியோ கேசட் வியாபாரத்தாலும் ஈர்க்கப்பட்ட இவரது நண்பர் சம்பத்குமார், 1992ஆம் வருடம் இவருடன் இணைகிறார். இருவரும் இணைந்து, 'டோன் ட்ரானிக்ஸ்' என்ற எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனத்தை தொடங்குகின்றனர். பொருட்களை வாங்கி விற்கும் ஏஜென்சியாக பல வியாபாரங்களை செய்து 2000ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில் சாம்பிராணி வியாபாரத்தில் இறங்குகின்றனர். தரமான சாம்பிராணியை நாமே தயாரித்து விற்கலாம் என்ற எண்ணம் ஏற்பட, உருவானதுதான் 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' என்ற ப்ராண்ட்.

 

"நம்ம வீட்டுக்கு ஒரு பொருளை செஞ்சா எப்படி செய்வோமோ அப்படி செஞ்சு தரணும்னுதான் இந்தத் தயாரிப்பை தொடங்கினோம். அப்படி தரமா செஞ்சா வரவேற்பு இருக்கும்னு நம்புனோம். அதே மாதிரி இருந்தது. ஆரம்பத்துல ரொம்ப கடினமா இருந்தது. தொடர் முயற்சிகள் மற்றும் மெல்ல வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டது மூலமா இப்போ ஸ்ரீமதி மட்டுமல்லாமல் பாஞ்சஜன்யா, வாசம் உள்ளிட்ட பிராண்ட்களில் எங்கள் தயாரிப்புகள் வருகின்றன. வடஇந்தியாவில் பல மாநிலங்களில் எங்க சாம்பிராணி, ஊதுபத்திதான் நம்பர் 1" என்று பெருமையுடனும் பக்குவத்துடனும் தங்கள் பயணத்தை பகிர்கிறார் ஜே.கே.முத்து.

 

ஒவ்வொரு நாளும் இவர்களது நிறுவனத்தில் பணிபுரிவோர், தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும் முன் ஒரு உறுதிமொழியை ஏற்கின்றனர். "நம்ம வீட்டுல மனைவியோ அம்மாவோ சமைக்கும்போது சுவை முன்ன பின்ன இருக்கலாம், ஆனால் தரம் குறையாது... வீட்ல சாப்பிட்டு ஒருத்தருக்கு உடம்பு கெட்டுப்போறது பொதுவா நடக்குறதில்ல. அதுக்குக் காரணம், அவுங்க ஆத்மார்த்தமா செய்றாங்க. இந்த கான்செப்ட்டை நாங்க எங்க நிறுவனத்தில் கொண்டு வரணும்னு நினைச்சோம். அதே ஆத்மார்த்தமான உணர்வு நம் தொழிலாளர்களுக்கும் வரணும்னுதான் இந்த உறுதிமொழியை ஏற்கிறோம். இதுக்கு பெரிய எஃபக்ட் இருக்கு..." என்கிறார் முத்து. "எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவோர் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் செழிப்பாக வாழ வேண்டுமென்று ஆத்மார்த்தமான வேண்டுதலுடன் நான் தயாரிக்கும் என்னிடமிருந்து வெளியாகும் ஒவ்வொரு பொருளும் தரமாகவும் தூய்மையாகவும் இருக்குமென்று உறுதி கூர்கிறேன்" - இதுதான் அவர்கள் ஏற்கும் உறுதிமொழி. வாடிக்கையாளர்கள் மீது இவ்வளவு அக்கறை என்றால், தொழிலாளர்கள் மீதும் அதே அக்கறை காட்டுகிறார்கள். கரோனா காரணமாக லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் விடுமுறை கொடுத்து ஊதியமும் வழங்கியுள்ளனர். அது தங்களுக்கு ஆத்மதிருப்தியளித்ததாகக் கூறுகிறார் முத்து.

 

 

 
சாம்பிராணி, பழைய விஷயம்தான். ஆனால் அதில் புதுமையை புகுத்தியிருக்கிறார்கள் இவர்கள். கப் சாம்பிராணி என்ற புதிய வகை சாம்பிராணியை பல ஆய்வுகளுக்கும், முயற்சிகளுக்கும் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். மதுரையில் நடந்த கண்காட்சிகளில் மக்களுக்கு இலவசமாக விநியோகித்திருக்கிறார்கள். ஆனாலும் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லையாம். இருந்தாலும் தொடர்ந்து முயன்றதில் வடஇந்தியாவிலும் ஏற்றுமதி சந்தையிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் கண்டுபிடித்த இந்த 'கப் சாம்பிராணி' வகையை பலரும் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்ததால், அப்படி தயாரிப்பவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி தடுத்திருக்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் 'இந்தத் தொழிலை செய்பவர்கள் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகத்தான் செய்கிறார்கள். அவர்கள் தொழிலை தடுத்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?' என்ற கேள்வி தோன்ற, அந்த நடவடிக்கைகளை கைவிட்டிருக்கிறார்கள்.

 

    
இவர்களின் மனிதாபிமானத்தை பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன. இதே வகை சாம்பிராணிகளை அவர்களும் தயாரித்து விற்கிறார்கள். ஆனால், முத்து - சம்பத் இருவரும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிச் சென்றனர். அது, தங்கள் 'பிராண்டை' வலிமைப்படுத்துவது. எத்தனை கப் சாம்பிராணிகள் இருந்தாலும் 'ஸ்ரீமதி சாம்பிராணி', ’ஸ்ரீமதி அகர்பத்தி' வேண்டும் என்று மக்கள் கேட்டு வாங்குமாறு செய்யவேண்டும் என்று அதை நோக்கி உழைத்தனர். அதை சாதிக்கவும் செய்தனர். இவர்கள் அறிமுகம் செய்த கப் சாம்பிராணியால் இன்சென்ஸ் இண்டஸ்ட்ரி என்றழைக்கப்படும் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருள்களின் மொத்த சந்தை மதிப்பில் சாம்பிராணியின் பங்கு அதிகரித்திருக்கிறது. வர்த்தக உலகில் இது மிகப்பெரிய தாக்கம். அவர்கள் செயல்படுத்திய யுக்திகள் எல்லாம் உலகத்தரமான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படித்த, பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பிசினஸ் வல்லுனர்கள் செய்வது. புதிய தொழில்முனைவோருக்குப் பாடங்கள்... அப்படி என்ன யுக்திகள்? அடுத்த பகுதியில் பார்ப்போம்... 

கட்டுரையின் தொடர்ச்சி...

இந்தியாக்காரங்களே இப்படித்தான்னு சொன்னாங்க... கோபம் வந்தது! - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை! #2