
கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு கடும் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆத்தூர் வட்டம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த அக்னிஹாசன் (வயது 53), பாண்டி துரை (வயது 34), மற்றும் புலியராஜகாபட்டி பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 54), ஆகிய 3 பேரைத் திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்புப் போதைப் பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன், நீதிமன்ற தலைமைக் காவலர் வீரையா மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய பாண்டியன் ஆகியோர் இந்த வழக்கில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று (16.05.2025) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நீதிபதி குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.