Skip to main content

பிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்?

Published on 04/04/2020 | Edited on 06/04/2020

கரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்தினை கண்டுபிடிப்பதில் ஆங்கில மருத்துவ உலகம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை மருத்துவமான சித்தா, மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவத்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து அந்தந்த மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்களிடமும், நிபுணர்களிடமும் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இதில் பங்கேற்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியாளரும், நிபுணருமான டாக்டர் சிவராமன் நம்மிடம் அது பற்றி விளக்கினார். பிரதமரின் காணொலியில் மத்திய அரசின் ஆயுஷ் துறையைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் 12 பேர் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் 4 நிமிடங்கள் பேச வேண்டும் என பிரதமர் அலுவலகம் சொல்லியிருந்தது.

 

bjp

 


மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் கனகவல்லி, மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரியும் பேராசிரியருமான டாக்டர் பிச்சையா குமாருடன், முக்கிய சித்த மருத்துவ பயிற்சியாளர் எனும் அடிப்படையில், எனக்கும் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது கலந்துரையாடலுக்குப் பிறகு நாங்கள் முன்வைத்த விஷயங்களை சித்த மருத்துவத்தின் மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயாணன் பிரதமரிடம் எடுத்துச் சொல்லி நேரடியாக விவாதித்தார்.

பிரதமரிடம் அவர் பேசும்போது, "கரோனாவைத் தடுக்கும் மருந்துகள் சித்தாவில் உண்டு. பல்வேறு மூலிகைகளை வைத்து உருவாக்கப்படும் கபசுரக் குடிநீரை கரோனாவில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா தாக்குதலை தடுக்க முடியும். அதனை மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு பரிந்துரைப்பது அவசியம். மேலும், நவீன மருத்துவத்துடன் கூட்டாக, இந்நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்' என கேட்டுக் கொண்டார். முந்தைய காலங்களில் நவீன மருத்துவத்துடன் இணைந்து நிலவேம்பைச் சிறப்பாக கையாண்டு தமிழகம் முழுவதும் டெங்குவை எதிர்கொண்டதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். பிரதமரும் அதைக் குறித்துக்கொண்டார்.

டெல்லி, கோவை, பெங்களூர், ஹரித்துவார் உள்ளிட்ட நகரங்களிலுள்ள சித்தா-ஆயுர்வேதா பேராசிரியர்கள் பலரின் கருத்துகளையும் குறிப்பெடுத்துக்கொண்ட பிரதமர், நெருக்கடியான இந்த நேரத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி துறைகளின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், ஆதாரப்பூர்வமான கண்டுப்பிடிப்பும் ஆராய்ச்சியும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக விவரித்தார் என்கிறார் டாக்டர் சிவராமன்.

 

 

doctor



இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து அவரிடம் பேசியபோது, "உலகம் முழுவதும் இதன் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நோய் பரவுதல் மற்றும் அதன் பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் பிரிவின் ஆய்வுத் துறை (சி.டி.டி.இ.பி.) பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த துறையின் வல்லுநர்கள் பல எச்சரிக்கைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளனர். அதில் மிக முக்கியமானது தற்போதிருக்கும் 21 நாள் ஊரடங்கு முக்கியமென்றாலும் அதோடு இந்த வைரஸ் நின்று விடாது'' எனச் சொல்கின்றனர்.

மக்களிடம் அலட்சியம் இருக்கக்கூடாது. ஊரடங்கு முடியும் ஏப்ரல் 14-க்கு பிறகு சில ஆபத்துகள் உருவாக வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு சொல்கிறது. சமூக பரவலின் வீரியம் அதிகமாகும்போது எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும், தீவிர மருத்துவம் தேவைப்படும். அத்தனைப் பேருக்கும் அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு கூறுகிறது. அதனால், ஏப்ரல் துவக்கத்திலிருந்து எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க, நாம் வீட்டுக்குள்ளே சுய பாதுகாப்பில் இருப்பது மட்டுமே ஒரே வழி!

அதேசமயம், தட்ப வெட்பத்திற்கும் காற்றின் நீர்த்துவத்துக்கும் வைரஸ் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வின் முடிவுகள் சின்னதாக ஒரு ஆறுதலை தருகிறது. மெசஷுட்ஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், 6 டிகிரி முதல் 18 டிகிரி வரை தட்பவெட்பமுள்ள பகுதியிலும், காற்றில் குறை நீர்மமுள்ள பகுதியிலும்தான் கரோனா வைரஸின் உச்சக்கட்ட உக்கிர தாக்குதல் மற்றும் உயிரிழப்பு அதிகம் நிகழ்கிறது என்பதை கணக்கிட்டுள்ளனர். அதேசமயம், இந்தியாவில் நடக்கும் அனுபவத்தை வைத்துத்தான் முடிவுக்கு வர முடியும் என்கிறது ஆய்வு.

கோடையில் இத்தொற்று குறையும் என்கிற கருத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்காத நிலையில், 25 முதல் 35 டிகிரி வெப்பமுள்ள தமிழகத்தில் வைரஸின் பரவுதல் குறையக்கூடும் என்கிற நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி இருப்பினும் ஏப்ரல் 14 வரை தனித்திருப்பதும் வீட்டுக்குள் சுய பாதுகாப்புடன் இருப்பதும்தான் இப்போதைக்கு சரியான தீர்வு. பிரதமர் மோடியின் வலியுறுத்தலும் அதுவாகத்தான் இருக்கிறது. அதனால் வீதியில் நடமாடாதீர்கள், நீங்கள் போகும் பாதையில் காவலர்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால், கரோனா என்கிற காலன் இருக்கக்கூடும்'' என எச்சரிக்கிறார் டாக்டர் சிவராமன்.


 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.