Skip to main content

உரக்கிடங்காக உருமாறி வரும் மாநகராட்சி பள்ளிக்கூடம்! குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அபாயம்!!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

சேலம் மாநகராட்சியில் ஊருக்கு நடுவே நுண்ணுயிரி உரக்கிடங்கு திறக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இப்போது பள்ளிக்கூடத்தை மூடி உரக்கிடங்கைத் திறக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சம் கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே செட்டிச்சாவடியில், 100 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் கொட்டவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காகவும் இடம் ஒதுக்கப்பட்டது. 
 

salem corporation schools and childrens fertilizer plant peoples



ஆனால், 2014ம் ஆண்டில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கு செயல்பட்டு வந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு சாம்பலானது. இந்த தீவிபத்தே கூட ஆளும் அதிமுக தரப்பினரே கமிஷனுக்காக செய்த சதி திட்டம்தான் என்ற பேச்சும் அப்போது எழுந்து அடங்கியது.


இந்த நிலையில்தான், சேலம் மாநகராட்சி பொலிவுறு நகரமாகும் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் இணைக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, நாள்தோறும் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, காய்கறிக் கழிவுகள், இலைதழைகள் போன்ற மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 


உண்மையில், நுண்ணுயிரி உரத்தயாரிப்புத் திட்டம் வரவேற்கக்கூடியதுதான். என்றாலும், இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இடங்களுமே கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. டிவிஎஸ் சுடுகாடு சாலையிலும், ஜான்சன்பேட்டையிலும் ஊருக்கு நடுவே அமைக்கப்பட்ட உரத்தயாரிப்பு கூடத்தால் ஈக்கள், கொசுக்கள் மற்றும் துர்நாற்றத்தால் தொற்றுநோய்கள் பரவுவதாகவும், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் கெட்டுப்போவதாகவும் புகார்கள் எழுந்தன. இவற்றை எதிர்த்து மக்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை மறியலும் நடத்தினர்.
 

salem corporation schools and childrens fertilizer plant peoples



முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், வழக்கம்போல் காவல்துறையினரைக் கொண்டு, மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிவிட்டனர். ஆனாலும், மாநகராட்சி உரக்கிடங்குகளுக்கு இப்போது வரை எதிர்ப்பு வலுத்து வருகிறது.


இது ஒருபுறம் இருக்க, 15வது கோட்டத்திற்கு உட்பட்ட ராம் நகரில், முன்பு மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பள்ளியில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்ததால், இப்போது அந்தப்பள்ளிக்கூட கட்டடத்தை இடித்துவிட்டு, நுண்ணுயிரி உரத்தயாரிப்புக் கூடம் கட்டும் வேலைகளில் சேலம் மாநகராட்சி இறங்கி உள்ளது. இதுவும் ராம் நகர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

salem corporation schools and childrens fertilizer plant peoples



இதே வளாகத்தில்தான் குப்பை லாரிகள், பழுந்தடைந்த கனரக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருவது ஆகப்பெரும் வேடிக்கை.


குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறியதாலும், உரக்கிடங்கு வருவதாலும், இந்த வளாகத்திற்கு அருகில் இயங்கி வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அடியோடு சரிந்து விட்டது. நடப்பு ஆண்டில், கடந்த ஆகஸ்ட் வரை 15 குழந்தைகள் படித்து வந்த நிலையில், சுகாதாரச் சீர்கேடு காரணமாக 5 குழந்தைகள் இப்பள்ளியை விட்டு பாதியிலேயே வெளியேறியுள்ளனர். 


இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலரும், பாஜகவின் முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவராமன் நம்மிடம் பேசினார்.
 

salem corporation schools and childrens fertilizer plant peoples


''நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் கிடங்குகளை ஊருக்கு வெளியிலோ அல்லது சுடுகாட்டுப் பகுதியிலோதான் அமைக்க வேண்டும். இப்படி ஊருக்கு நடுவே அமைப்பதால் துர்நாற்றம் வீசுவது ஒருபக்கம் இருந்தாலும், கொசுக்கள், ஈக்களால் குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.


இப்படி எல்லாம் செயல்பட சேலம் மாநகராட்சிக்கு யார் யோசனை சொல்கிறார்களோ தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் இதை தட்டிக்கேட்காமல் மவுனம் சாதி க்கின்றன. இந்த வளாகத்திற்கு வெளியே செயல்படும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பத்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். இதுபோன்ற சுகாதாரமற்ற சூழல் காரணமாக பெற்றோர்கள், இந்தப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முன்வருவதில்லை. இந்தப்பள்ளியில் முதல் மற்றும் 3ம் வகுப்பில் தலா ஒரு குழந்தையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் தலா 2 குழந்தைகளும், இரண்டாம் வகுப்பில் மட்டும் அதிகபட்சமாக 4 குழந்தைகளும் என மொத்தமே 10 குழந்தைகள்தான் படிக்கின்றனர்.


இதேநிலை நீடித்தால், அடுத்த ஆண்டில் இந்தப்பள்ளியையும் மூடி, அங்கேயும் உரத்தொழிற்சாலை கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 15வது கோட்டத்திற்கென்று, மாநகராட்சி சார்பில் இந்த ஒரு பள்ளி மட்டுமே செயல்படுகிறது. 1896ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியும் குப்பை வண்டிகள், உரக்கிடங்கால் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது. இதையும் மூடிவிட்டால் அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதே கனவாகி விடும். உடனடியாக ராம் நகரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் உரக்கிடங்கு அமைக்கப்படுவதை கைவிட வேண்டும். இங்குள்ள குப்பை வண்டிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்,'' என்றார்.

salem corporation schools and childrens fertilizer plant peoples


குப்பை வண்டிகள் நிறுத்தப்படுவதாலும், வளாகம் முழுவதும் புதர்ச்செடிகள் மண்டிக்கிடப்பதாலும் அடிக்கடி பாம்பு, தேள் உள்ளிட்ட ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழைந்து விடுவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகுதான், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தனது தொகுதி நிதியில் இருந்து ராம் நகர் துவக்கப்பள்ளிக்கு பாதுகாப்பு சுவர் கட்டிக்கொடுத்துள்ளார். அதில் தனது முயற்சியும் அடங்கி இருப்பதாகச் சொன்னார் தாதை சிவராமன்.


ராம்நகரைச் சேர்ந்த குடும்பத்தலைவி சத்யா, ''என் கணவர் தையல் வேலைக்குச் செல்கிறார். நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். என் வசதிக்கு இந்த மாநகராட்சி துவக்கப்பள்ளியில்தான் என் குழந்தையைப் படிக்க வைக்க முடியும். ஆனால், இப்போது பக்கத்து வளாகத்தில் உரக்கிடங்கு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே குப்பை வண்டிகளால் துர்நாற்றம் வீசுகிறது. 


அதனால்தான் பலர் இங்கிருந்து குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க அழைத்துச் சென்றுவிட்டனர். இன்னும் உரக்கிடங்கெல்லாம் வந்தால் இந்தப்பள்ளியில் இப்போதுள்ள பத்து குழந்தைகள்கூட படிக்க வர மாட்டார்கள். இங்கு உரக்கிடங்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என்றார். 


சேலம் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''பரந்து விரிந்து கிடக்கும் செட்டிச்சாவடி அருகே உரக்கிடங்கு தயாரிக்கலாம் என்ற திட்டமும் பரிந்துரை செய்தோம். ஆளுங்கட்சியினர் எங்கே விடுகிறார்கள்? அவர்கள் எடுக்கும் முடிவுப்படிதான் எல்லாம் நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களை மீறி அதிகாரிகளால் என்ன செய்துவிட முடியும்? மேற்கொண்டு இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை,'' என்று பட்டும் படாமலும் முடித்துக்கொண்டார்.


இருப்பதையாவது காப்பாற்ற வேண்டாமா என்ற பரிதவிப்பில் சாமானியர்களும், யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன... நம் கடன் கல்லா கட்டுவதே என்ற சர்வாதிகாரப் போக்கில் ஆளும் அதிமுகவும், சேலம் மாநகராட்சியும் கைகோத்து செயல்பட்டு வருகிறது. 


 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.