Skip to main content

“சனாதனத்தை ஒழிக்க முன்வரவில்லையென்றால், முன்னோக்கி செல்ல முடியாது - கவிதா கஜேந்திரன்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Kavitha Gajendran interview about sanatanadharma

 

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்திய அளவில் சர்ச்சையான நிலையில், இது குறித்து நாம் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் கவிதா கஜேந்திரனை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டதை இங்கு தொகுத்துள்ளோம்...

 

“கடந்த செப்டம்பர் 2ம் தேதி த.மு.எ.ச.க சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அதில், அமைச்சர் உதயநிதி உட்பட நிறைய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். அதிலும், உதயநிதி ஸ்டாலின், " இதனை எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல்.... நல்லவேலை ஒழிப்பு என வைத்துள்ளீர்கள்" என பேச்சைத் தொடங்கினார். இதற்கு, அமெரிக்க கருப்பின புரட்சியாளர் ஏஞ்சலா டேவிஸ், "ஒரு ஒடுக்குமுறையை கண்டுபிடிப்பது மட்டும் நமது வேலை இல்லை. அதன் வேரை கண்டறிந்து பிடுங்கிப் போடுவது இடதுசாரிகளின் கடமை" என கூறியிருக்கிறார். 

 

இதுபோன்ற ஒடுக்குமுறைகள் நமக்கு இந்தியா மாதிரியான நாட்டில் நிகழும் போது. இதுவரை இந்தியாவை பற்றி வெளிநாட்டவர்கள் உட்பட நினைப்பது, இது ஒரு ஆன்மிக நாடு என்றும் பாரம்பரியம் மிக்கது எனவும் பிம்பம் உள்ளது. ஆனால், இந்தியா சாதி, மதம் என்ற கட்டமைப்பில் இருக்கிறது. மேலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கிறது. தொடர்ந்து மதமும் சாதியின் அடிப்படையில் இருந்து வருகிறது. எனவே, இவைகள் எல்லாம் பிணைந்து நம் தினசரி வாழ்வை இயக்குகிறது. இதன்மூலம், இதன் வேர் என்னவென்று பார்த்தால் சனாதனம், மனுநீதி, வர்ணாஸ்ரமம் போன்றவை இருக்கிறது. மனுநீதி தான் இவர்களின் விதியாகவும் உள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக மக்களின் சிந்தனையை நாம் பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லை. மாறாக, பார்ப்பனியம் அனைத்து இடங்களிலும் ஊடுருவிவிட்டது என்று தான் சொல்கிறோம். இன்றைக்கு நாம் நவீன பார்ப்பனர்கள் என சில மக்களை அழைக்கக் காரணம், அவர்களின் சிந்தனையும் அதே போன்று இருப்பதால். இவை அனைத்தையும் இந்து மதம், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் சேர்த்து நம்மீது சாதியையும்  திணித்துள்ளனர். 

 

தொடர்ந்து, சனாதனத்தின் கொள்கைகள், முறைகள் என்னவென்று ஆராய்ந்தால். இது முழுக்க முழுக்க ஒரு சமூகத்தின் மீதும் ஒரு பாலினத்தின் மீதும் எவ்வாறெல்லாம் ஒடுக்குமுறையை ஏவ முடியும் என்றும், மேலும், பிறப்பால் சாதியை வைத்து அடையாளம் காணும், உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத முறை உள்ளது. இந்த முறைகளை தெரிவிக்கும் வழிகளை சனாதனம் சார்ந்த மனுநீதி நூல் வரிகளில் இருந்து தானே அவர்கள் எடுக்கிறார்கள். இதனால், இன்றைக்கும் பெண்கள் கோவில் கருவறையினுள் நுழைய முடியவில்லை. பெண்களின் பிரசவத்திற்கு முந்தைய மாதவிடாய் காலத்தைக் கூட தீட்டு என்று பெண்களையும் தீட்டு என அணுகும் செயல் எங்கிருந்து வருகிறது? சபரி மலைக்கு செல்லும் பொழுது இந்த பெண்களை பார்க்கக் கூடாது. கோவில் உள்ளே போகக் கூடாது. இது தீட்டு இதனை தொடக் கூடாது. மூன்று நாட்கள் தனியாக உட்கார வேண்டும். கணவர் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறவேண்டும் என சொல்லியதும் சனாதனம் தானே. 

 

பிறப்பால் ஒருவரை தலித், சூத்திரர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கு கீழானவர்கள் எனவும் அவர்களே கடவுளுக்கு சமமானவர்கள் என்று சொல்வது மனுநீதி, சனாதனம் தானே. இவர்கள் தான் இந்த முறைகளை முன்வைத்தார்கள். இவ்வளவு ஆண்டுகாலமாக நாம் இந்த கோட்பாடுகளுக்குள் வாழ்ந்து வந்தோம். ஆனால், சில நூறாண்டுகளுக்கு முன் வள்ளலார் தொடங்கி பெரியார் வரை நமக்கு அறிவுறுத்தி சென்றுள்ளனர். மனுநீதி தான் நம்மை அடிமைப்படுத்துகிறது என பல தலைவர்கள் சொல்லிய பிறகு அதன் வேரை கண்டடைகிறோம். பின்னர், இது தான் சீழ் என உணர்ந்து அழிக்க முன்வருகிறோம். சமீபத்தில், நாங்குநேரியில், நன்றாக படிக்கும் தலித் சிறுவன் மீது தாக்கும் துணிவு ஏன் எழுகிறது. ஆக, இதற்கெல்லாம் காரணம் சாதி என்பதால் தான் உதயநிதி, கி.வீரமணி போன்றோர் பேசுகிறார்கள். எனவே, இந்த சனாதனத்தை ஒழிக்க முன்வரவில்லை என்றால் நாம் முன்னோக்கி செல்ல முடியாது என்ற பார்வையை உதயநிதி முன்வைத்துள்ளார். இதனடிப்படையில், இந்த கருத்தை நாம் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

 

 

 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Arvind Kejriwal, Kavita extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Arvind Kejriwal, Kavita extended court custody

முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.