Skip to main content

அமித்ஷா நினைத்தால் பயங்கரவாதி முத்திரை குத்தமுடியும்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் (உபா) செய்யப்பட்டுள்ள திருத்தத்தை வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் நினைத்தால் எந்த ஒரு தனிநபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிடலாம். அவர் எந்தக் கோர்ட்டுக்கும் அப்பீல் செய்ய முடியாது.
 

AMITS

 

 

இந்தச் சட்டத்தின்படி பாதுகாப்பு நிறுவனங்கள் யாரை பரிந்துரைக்கிறதோ அவரை பயங்கரவாதி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டு கையெழுத்து இட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபர் உள்துறை அமைச்சகத்துக்கு அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் மீது 45 நாட்களில் அமைச்சகம் முடிவு செய்யும்.
 

அதிலும் அவர் மீதான முத்திரை களையப்படாவிட்டால், மத்திய உள்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அல்லது பணியிலிருக்கிற மூன்று நீதிபதிகள் கொண்ட கமிட்டி முன் அப்பீல் செய்யலாமாம்.
 

அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தீர்வு என்ன என்பதோ, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபருக்கு என்ன தண்டனை, எத்தனை ஆண்டு சிறைவாசம் என்பதெல்லாம் முடிவு செய்யப்படாத விஷயங்களாக இருக்கின்றன.
 

பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களின் அடிப்படையில்தான் இந்தச் சட்டதிருத்தம் செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் இந்தியா முறையிட்டபோது, இந்தியாவில் ஏன் அவரை பயங்கரவாதி என்று அறிவிக்காமல் இருக்கிறீர்கள் என்று அதிகாரிகள் கேட்டார்களாம். அதன் விளைவாகத்தான் இந்தச் சட்டத்திருத்தமாம். இந்தச் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் முதலில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படப் போகிறவர்கள் மசூத் அசாரும், லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீதும்தான் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
 

அவர்கள் இப்படிக் கூறினாலும், பாஜகவுக்கு எதிரான சக்தி வாய்ந்த பிரச்சாரகர் யாராக இருந்தாலும் அவர்கள் அச்சுறுத்த அமித் ஷாவும் பாஜகவும் இந்த சட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதே அரசு சொல்ல வரும் சேதி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
 

குஜராத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் போன்றவர்கள் தேசப்பாதுக்காப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதே அமித் ஷா, மோடி ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு உதாரணம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

அமித் ஷாவின் கடந்த கால கிரிமினல் நடவடிக்கைகள், அவர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய அவர் மேற்கொண்ட வழிமுறைகள் ஆகியவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

 

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.