Skip to main content

டாக்டர் சைமனின் உடல் தோண்டப்படுமா? -கராத்தே தியாகராஜன் பேட்டி

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மறைந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட சர்ச்சைகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை, கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் டாக்டர் சைமனின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வேலாங்காடு மயானத்தில் முறையான பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது அவரது உடல்!


  karate thiagarajan


இந்த நிலையில், "என் கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட வேண்டும். இது, என் கணவரின் கடைசி ஆசை" என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சைமனின் மனைவி வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதனால், டாக்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் புதைக்கப்படுமா? என்கிற கேள்வி அரசு மருத்துவத்துறை வட்டாரங்களில் எதிரொலிக்கச் செய்கிறது. 
 

 nakkheeran app



அதேசமயம், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு மயானத்தில் முறைப்படி புதைக்கப்பட்ட ஒரு உடலை மீண்டும் தோண்டி எடுப்பதில் மாநகராட்சியின் சட்ட விதிகளில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜனிடம் பேசிய போது, ‘’கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தனது கணவரின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என டாக்டர் சைமனின் மனைவி தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் நிர்வாகமும், சைமனின் உடலை அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு தருவோம் என தற்போது சொல்லியிருக்கிறது.

அதனால் காலதாமதம் இல்லாமல் சைமனின் உடலை அவர் ஆசைப்பட்டபடி, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு உடலை தோண்டி எடுக்க மாநகராட்சி விதிகளில் இடம் இருக்கிறது. அதாவது, சென்னை மாநகராட்சி விதி எண் 325(சி) பிரிவின் படி, மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சைமனின் உடலை தோண்டி எடுக்கலாம். அதனால் சைமனின் உடலை தோண்டி எடுப்பதில் எந்த சட்டச் சிக்கலும் கிடையாது.

தமிழகத்தை சுனாமி தாக்கியதில் எண்ணற்றவர்கள் உயிரிழந்தனர். அப்போது, சுனாமியால் தாக்கப்பட்ட மாவட்டத்தின் கலெக்டர்களுக்கும், மாநகராட்சி ஆணையருக்கும்  அன்றைய தலைமை செயலாளர் அவசர அனுமதி வழங்கினார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் உடற்கூறு ஆய்வு (போஸ்ட்மார்ட்டம்) செய்யப்படாமலே புதைக்கப்பட்டன. அதனால், எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை. அந்தவகையில், மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் டாக்டர் சைமனின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் பரிசீலிக்க வேண்டும். 

சென்னையில் பல்வேறு மயானங்களின் பராமரிப்பு மற்றும் இறந்த உடல்களை எரித்தல், புதைத்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது எம்.எம்.வி. நேசக்கரம் என்கிற அறக்கட்டளை. இதன் தலைவர் வேலுவை தொடர்புகொண்டு நான் பேசிய போது, ’எங்களிடம் அமரர் ஊர்தி, அடக்கம் செய்வதற்கான பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறது. எவ்வித நோய் தொற்றும் பரவாமல் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம். மாநகராட்சி அனுமதித்தால் இதனை இலவசமாகவே செய்கிறோம்’ என சொல்கிறார். அதனால், டாக்டர் சைமனின் மனைவி வைத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய தமிழக முதல்வர் அனுமதியளிப்பது மருத்துவ உலகத்துக்குச் செய்யும் சேவை!‘’ என்று கூறினார்.


 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.