Skip to main content

அண்ணாமலையால் கண்டிப்பாக முடியாது - ராம சுப்ரமணியன் திட்டவட்டம் 

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

 Ramasubramanian Interview

 

ராகுல் காந்தி மற்றும் மோடியின் அமெரிக்கப் பயணம், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராம சுப்பிரமணியன் நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அறிவார்ந்த பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என்று அனைவரும் அவரைப் பாராட்டினர். கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியாக அவர் பதிலளித்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு மோடி வந்தார். மோடிக்கு அங்கு பெரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. சீனாவின் அசுர வளர்ச்சி அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ஆசியாவில் சீனாவை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பது இந்தியா தான். அதனால் இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டியது அவர்களுக்கான கட்டாயம்.

 

மோடிக்கு அமெரிக்காவில் கிடைத்த மரியாதை மோடிக்கானது அல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த அங்கீகாரம். நாடாளுமன்ற கூட்டத்தில் 'மோடி மோடி' என்று ஆதரவாளர்கள் கூச்சலிட்டதை அமெரிக்கா ரசிக்கவில்லை. அமெரிக்காவில் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் மோடியின் வருகைக்கு எதிர்ப்பும் இருந்தது. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குக் கூட டெலிப்ராம்ப்டர் மூலம் தான் மோடி பதிலளித்தார். அதில் வருவதை அப்படியே பார்த்து அவர் படித்தார். 

 

மோடியை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பாஜகவினர் கடுமையாக சமூக வலைத்தளங்களில் தாக்கினர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. சமீபத்தில் அண்ணாமலை லண்டன் சென்றார். அங்கு House of Lords-ல் அவர் பேசியதை பெரிய சாதனை போல் இங்குள்ள துதிபாடிகள் பேசுகின்றனர். ஆனால் யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பேசலாம் என்பது தான் உண்மை. இந்தியா வளர்ந்து வருகிறது என்பது உண்மை. ஆனால் 2011 காலகட்டத்திலேயே நாம் வளர்ந்திருந்தோம். 

 

இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று இவர்கள் கூறுவது தவறு. கச்சத்தீவை மீட்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். கண்டிப்பாக அவரால் முடியாது. கச்சத்தீவை இனி யாராலும் மீட்க முடியாது என்பதுதான் உண்மை. இலங்கை குறித்து இவர்கள் பேசும் விஷயங்களை அங்குள்ள தமிழர்களும் ரசிக்கவில்லை, சிங்களர்களும் ரசிக்கவில்லை. அண்ணாமலையின் பேச்சுக்கள் இன்னும் தீய விளைவுகளை ஏற்படுத்துவது போல் தான் இருக்கின்றன. பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.