Skip to main content

 "என் அப்பா என்னை எதிர்க்கிறார்...சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்" அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள் கட்சியின் மேல்மட்டத்தில்.

 

admk



டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி பிரபு. இவரது தந்தையார் கள்ளக் குறிச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பல வருடமாக கோலோச்சி வருகிறார். அ.தி. மு.க. கட்சிப் பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தார். அந்த செல்வாக்கில் கார், பங்களா என கோடிகளில் புரண்டு வாழ்பவர். அவருக்கு கிடைக்காத எம்.எல்.ஏ. பதவியை பிரபுவுக்கு சசிகலா கொடுத்தார் என்பதால் திவாகரனுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் விசுவாசமாக இருந்தார். ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ.வான பிரபுவும் அப்பா போல் செல்வாக்கு சேர்ப்பதில் கவனமானவர்.

 

admk



பிரபுவை எடப்பாடி அணிக்கு கொண்டு வர அவரது தந்தையார் மூலம் முயற்சி செய்தனர். அவர், அப்பா பேச்சை கேட்கவில்லை. அதனால் அந்த பொறுப்பை அமைச்சர் வேலுமணியிடம் ஒப்படைத்தார். வேலுமணியின் சிஷ்யரான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் வேலுமணியால் களம் இறக்கப்பட்டார்கள். இம்மூவரும் கள்ளக்குறிச்சி பிரபுவுடன் தோள் மேல் கை போட்டுக் கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நடந்து சென்ற சம்பவம் நக்கீரன் உட்பட பத்திரிகைகளிலும் அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் செய்தியானது.

 

admk



அதன்பிறகு டி.டி.வி.தினகரனை சந்தித்த பிரபு, "என் அப்பா என்னை எதிர்க்கிறார். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கை நடத்த வழக்கறிஞர் கபில்சிபில் லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார். அதை தர முடியவில்லை' என புலம்ப, "சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்' என தினகரன் பெர்மிஷன் தர, எடப்பாடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பிரபு. தனது அணிக்கு வந்த பிரபுவுக்கு வெயிட்டாக ஒரு நன்கொடை தரவேண்டும் என நினைத்த எடப்பாடி, கொடைக்கானலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்காக காலனி ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் பிரபுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தார். கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் சர்வே எண்: 1751/1-ல் உள்ள ஒரு ஹெக்டேர் 57 ஏர்ஸ் நிலத்தில் 10 ஏர்ஸ் 12.0 ள்வ்ன் ஏர்ஸ் அகலமும், 23.0 ஏர்ஸ் நீளமும் கொண்ட நிலத்தை உழ்..கே.கணேஷ் குமார் என்பவரிடமிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி.

 

admk



இதே கணேஷ்குமார் தி.நகர் சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி ஆகியோருக்கும் ஆளுக்கு 25 சென்ட் வீதம் நிலத்தை கொடுத்துள்ளார். பிரபு அந்த பட்டியலில் இடம் பெறும் நான்காவது எம்.எல்.ஏ. என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2019ஆம் ஆண்டு பிரபுவுக்கு இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களுக்கு வில்பட்டி எல்லைக் குட்பட்ட கோவில்பட்டியில் ஆளுக்கு 25 சென்ட் என நிலம் எடப்பாடியால் வழங்கப்பட்டுள்ளது. சிரமமான காலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து அங்கு சொகுசு உல்லாச பங்களாக்கள் கட்டித் தர இந்த ஆட்சி முடி வதற்குள் ஏற்பாடு செய்யப்படும் என எடப்பாடி உத்திரவாதம் அளித்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கின்றது.

 

admk



இந்த வேலைகளை செய்யும் அமைச்சர் வேலுமணியின் தொண்டரான தி.நகர் சத்யா சென்னை நகரம் முழுவதும் சீட்டாட்ட க்ளப்கள், மசாஜ் விடுதிகள் நடத்திக்கொள்ள காவல்துறை உதவியுடன் அமைச்சர் வேலுமணி அனுமதித்துள்ளார். சென்னை கொளத்தூர் அருகே உள்ள சூதாட்ட விடுதியில் ஒரு நபர் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். அந்த விவரம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுகுறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிரபல ரவுடியான சி.டி.மணி சத்யாவுக்காக கட்ட பஞ்சாயத்துகள் பேசுகிறார் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால் சி.டி.மணியை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாம் அமைச்சர் வேலுமணியும் சத்யாவும் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.


இதற்கிடையே சில எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு பக்கத்தில் நிலம் வேண்டுமென்று கேட்க, அவர்களுக்கு தி.நகர் சத்யா கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலோடு சேருமிடத்தில் வைத்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட ரிசார்ட்டில் சொகுசு வீடு கட்ட எடப்பாடி நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கும் தனது ரிசார்ட் நிலத்தை விற்று வருகிறார் தி.நகர் சத்யா. மாநகராட்சி அதிகாரிகள் சத்யா சொல்லும் விலையில்தான் நிலத்தை வாங்க வேண்டும் என நிர்பந்தமும் தரப்படுகிறது என நொந்து போயுள்ளனர் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களும்.

இவையெல்லாம் தனியார் நில விற்பனைகள். இதைப் பற்றி வருமான வரித்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்காக எடப்பாடி கட்டிக் கொடுக்கும் சொகுசு விடுதிகள் பற்றி வருமானவரித்துறை ஒன்றும் செய்யாது என எம்.எல்.ஏ.க்கள் தெம்பாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவரங்கள் லீக் ஆகிவிட்டன. இந்த விவரங்களை வைத்து சமூக ஆர்வலர்கள் "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள்' என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் போடுவார்கள் என்கிற பயம் மட்டும் இருக்கிறது. அப்படி ஒரு வழக்கு வந்தாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திலேயே ஆதாரம் இல்லை என தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையால் புஸ்வாணமாக்கப்பட்டது. அதுபோல செய்யலாம் என அ.தி.மு.க. தலைமை எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இதுபற்றி தி.நகர் சத்யா, கள்ளக்குறிச்சி பிரபு, விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோரை கேட்டோம். "எல்லாம் பொய். எடப்பாடி சொகுசு விடுதிகள் கட்டித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கவில்லை. அதற்காக எந்த நிலத்தையும் நாங்கள் வாங்கவில்லை'' என மறுக்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பிலோ புது கிஃப்ட் உற்சாகம் தெரிகிறது.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.