Skip to main content

மதுரையிலும் ஒரு பொள்ளாச்சியா? வாட்ஸ் அப் பரபரப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
girl


இளம்பெண்களைப் பாலியல் வலையில் சிக்கவைத்து, வன்கொடூரத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி சம்பவமாகட்டும், சமீபத்தில் வெளியாகி இருக்கும் கன்னியாகுமரி காசியின் காம லீலைகளாகட்டும், ஆளுந்தரப்பின் ஆதரவுடன் நடைபெற்று வரும் இத்தகைய கொடூரங்கள் தமிழகத்தைத் தொடர்ந்து அதிர வைக்கின்றன. மதுரையில் இருந்தும் இப்போது ஒரு கொடூரச் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.


வாட்ஸ்அப்பில் வைரலாகும் அந்தச் செய்தியில், “மதுரையின் மையப்பகுதியான நரிமேடு பகுதியில், மிகப்பிரபலமான கல்லூரிக்கும், மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கும் மிக அருகில் செல்போன் கடை, ரெஸ்டாரண்ட் கடை நடத்திவருகிறார்கள் சதாம், ஷேக் மற்றும் கவுதம் ஆகிய மூன்றுபேர். இவர்கள், தங்கள் கடையில் ரீசார்ஜ் செய்யவரும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் செல்போன் நம்பரைக் குறித்து வைத்துக் கொண்டு, ஆசைவார்த்தைக் கூறி பழகுவார்கள்.

அதேபோல், ரெஸ்டாரண்டில் காம்போ ஆஃபர் சலுகைகள் என சமூகவலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவார்கள். அதை நம்பிவரும் மாணவிகளிடம் ஆசையாகப் பேசி, காதல் வலையில் வீழ்த்துவார்கள். பின்னர் அவர்களுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவார்கள். கடைக்கு அருகிலிருக்கும் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு மதுபாட்டில்கள் சப்ளை செய்வதும் இவர்களுக்கு வாடிக்கை’’ என்று இந்த மூன்று இளைஞர்களின் செல்போன் நம்பர்களையும் சேர்த்தே பரப்பப்பட்டிருந்தது.

இதற்கு அடுத்தநாளே, “இந்த மூவரின் வலையில் சிக்காத மாணவி ஒருவர் புகார் கொடுத்துவிட்டார். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் மூன்றுபேரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்’’ என்று மீண்டும் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வந்து பரபரப்பைக் கூட்டியது. உடனடியாக இதன் பின்னணியை அறிய விசாரணையில் இறங்கினோம்.
 


தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமியைத் தொடர்புகொண்டோம். “அந்த மூன்றுபேரும் அவர்களாகவே முன்வந்து, தொழிற்போட்டி காரணமாக எங்கள்மீது அவதூறு பரப்புகிறார்கள். இப்படிச் செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்கள். இதுதொடர்பாக சைபர் கிரைமில் விசாரணை தொடங்கி இருக்கிறது. இன்னும் சில நாட்களில், உண்மை தெரிந்துவிடும். அதன்பிறகுதான் எதுவும் சொல்லமுடியும். மேலும், பாதிக்கப்பட்டதாக யாரும் இதுவரை எங்களிடம் புகாரளிக்கவில்லை’’ என்று முடித்துக் கொண்டார்
வாட்ஸ்அப் செய்தியில் இடம்பெற்றிருக்கும் சதாம், ஷேக் மற்றும் கவுதம் ஆகியோரை நாம் தொடர்புகொண்டோம். சுவிட்ச்-ஆஃப் ஆகியிருந்தது. அவர்களின் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. இதற்கிடையே, இந்த மூன்று இளைஞர்களும் கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்தது. உடனடியாக நாம் அங்கு விரைந்தோம். கமிஷனர் அலுவலகத்திற்கு இளைஞர்களின் பெற்றோர் வந்திருந்தனர்.

அவர்களிடம் நாம் பேசியபோது, மிகுந்த தயக்கத்துடன்தான் சம்மதித்தனர். சதாமின் தந்தை சலீம், “சார் இவ்வளவு கொடுமையான செயலில் ஈடுபடுகிற அளவுக்கு நாங்க பிள்ளை வளர்க்கலை. தொழில் போட்டியில் இப்படியெல்லாம் அவதூறு பரப்பிட்டு இருக்காங்க. மூணு பசங்களோட செல்போனையும் போலீஸ்கிட்ட கொடுத்துட்டோம். அதுல இருக்கிற ஒரு பொண்ணோட நம்பருக்கு போலீசார் அழைச்சி விசாரிச்சப்ப, அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வாட்ஸ்அப்பில் வந்தது பொய்ன்னு அந்தப் பொண்ணு சொல்லிடுச்சி. அதையும் ரொம்பப் பெரிசா பரப்பிட்டு இருக்காங்க’’ என்றார்.

கவுதமின் தந்தையோ, “எங்க பசங்க ஒண்ணாத்தான் காலேஜில் படிச்சாங்க. இப்போ சேர்ந்து தொழில் பண்றாங்க. ஆன்லைனில் விளம்பரம் செய்து, அதன்மூலமா ஏரியாவில் நல்ல வியாபாரம் கிடைச்சது. அதைப் பொறுத்துக்காம இப்படிப் பரப்பிட்டு இருக்காங்க. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். உண்மை என்னன்னு உலகத்துக்கு தெரியட்டும்’’ என்று ஆதங்கம் தெறிக்க பேசினார்.

 


ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா தலைமையில் இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கி இருக்கிறது. கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, “தனிப்படை ஒண்ணு அமைச்சிருக்காங்க. பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராக இருந்தாலும் தைரியமா முன்வந்து சொல்லலாம். அவங்களோட விவரங்கள் பாதுகாக்கப்படும்ன்னு மூணு செல்போன் நம்பர்கள் கொடுத்திருக்காங்க சார். அந்தக் காலேஜுக்கும் தகவல் சொல்லி இருக்கிறோம். காலேஜ் முதல்வரும், எங்கள் மீது அவதூறு பரப்புறாங்கன்னு புகார் கொடுத்திருக்காங்க’’ என்றனர்.

இத்தனை களேபரத்துக்கு மத்தியில், “மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரின் பேரனும், இந்த மூன்று இளைஞர்களும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல், அவர்களின் செல்போனில் அடிக்கடி தொடர்புகொண்ட கால் லிஸ்ட் மூலம் தெரியவந்துள்ளது. அமைச்சரின் பேரனுடன் கொடைக்கானலில் இவர்கள் போட்ட கும்மாளம் வேற லெவல்’’ என மீண்டுமொரு செய்தி வாட்ஸ்அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

 

http://onelink.to/nknapp


வாட்ஸ்ஆப்பில் பரப்பும் நபரைப் பிடித்தால் உண்மை தெரிந்துவிடும். அவரை நெருங்கி விட்டோம் என்கிறது காவல்துறை. மதுரை மக்கள் தங்கள் மாநகரிலும் ஒரு பொள்ளாச்சியா என்ற பதற்றத்தில் உள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.