Skip to main content

திமுகவின் 4 எம்.பி., 8 மா.செ., 10 எம்.எல்.ஏ.க்களை ஸ்கெட்ச் போட்டு பிடியில் வைத்துள்ள பா.ஜ.க.? தடுப்பு வியூகத்தில் ஸ்டாலின்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
mks

 

 

மாநிலத்தில் வலிமையாக உள்ள கட்சிகளை பதம் பார்க்கும் படலத்தில் தமிழகத்தில் தன் ஆட்டத்தை அடித்து ஆட துவங்கியிருக்கிறது பாஜக. தி.மு.க எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் டெல்லி பயணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.

 

சென்னை மேற்கு மா.செ.வாக இருந்த ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து அந்த பதவியைப் பிடிக்க கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் உட்பட மாவட்டத்திலுள்ள மூத்த பகுதி செயலாளர்கள் பலரும் முயற்சித்தனர். ஆனால், சீனியர்கள் யாரையும் நியமிக்காமல் இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவை உதயநிதியின் வற்புறுத்தலில் நியமித்தார் மு.க.ஸ்டாலின். இது அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதை ஸ்டாலினின் கவனத்துக்கு மூத்த தலைவர்கள் கொண்டு சென்ற நிலையிலும் அதனை சரிசெய்ய அக்கறை காட்டப்படவில்லை. சிற்றரசு கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தை கு.க.செல்வம் உட்பட பலரும் புறக்கணித்திருந்தனர்.

 

இந்த நிலையில்தான், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம் டெல்லியில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பாஜக துணைத்தலைவர் ராஜா சகிதம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். 40 நிமிடத்துக்கும் அதிகமாக நீடித்த சந்திப்புக்குப் பின் மீடியாக்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிஃப்ட் வேண்டும் என்ற கோரிக்கைக்காக வந்தேன் என்றார்.

 

செல்வத்தின் டெல்லி பயண விவகாரம் தி.மு.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், ஸ்டாலின் மீதான விமர்சனத்தையும் உருவாக்கியது. இதனையடுத்து, கட்சியின் உயர்நிலை நிர்வாக குழுவிலுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலருடனும் ஸ்டாலின் விவாதிக்க, செல்வத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தினர். இதனையடுத்து, கட்சி பொறுப்புகளிலிருந்து செல்வத்தை நீக்கி, விளக்க நோட்டீஸ் அனுப்பினார் மு.க.ஸ்டாலின்.

 

selvam

 

 

இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் உள்வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜகவில் இணைவதற்காக தான் டெல்லிக்கு சென்றார் செல்வம். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து நட்டாவுக்கு சில உத்தரவுகள் போனதால் கடைசி நேரத்தில் செல்வம் ஜகா வாங்க வேண்டியதாயிற்று. தி.மு.க.வில் சிலரின் மிதமிஞ்சிய ஆதிக்கத்தால் அப்செட்டில் இருப்பவர்களில் 2 மூத்த தலைவர்கள், 4 எம்.பி.க்கள், 8 மா.செ.க்கள், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டு, பா.ஜ.க. தன் பிடியில் வைத்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில் டெல்லியின் இலக்கு நிறைவேற்றப்பட விருக்கிறது'' என்கிறார்கள்.

 

sekar babu

 

இதுகுறித்து சென்னை கிழக்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான சேகர்பாபுவிடம் பேசியபோது, "செல்வம் போன்றவர்களால் கட்சிக்கு சிறிய சிராய்ப்புக்கூட ஏற்படாது. அதிகார அழுத்தத்தினால் தி.மு.க.வை பலகீனப்படுத்தலாம் என பா.ஜ.க. நினைக்குமானால், முன்பைவிட வீறுகொண்டு தி.மு.க. எழும். நெருக்கடிநிலை காலத்திலிருந்தே இதுதான் வரலாறு. கலைஞர் மறைவுக்கு பிறகு, தி.மு.க.வின் கம்பீரம் எங்கள் தலைவர் ஸ்டாலின். அவரை, பா.ஜ.க. உள்ளிட்ட எந்த அதிகார மையமும் மிரட்டி பணிய வைத்துவிட முடியாது'' என்கிறார் மிக ஆவேசமாக.

 

டெல்லிக்கு செல்வம் பறந்த பின்னணி குறித்து விசாரித்தபோது, "பாஜகவில் இணைந்து சமீபத்தில் மாநில பொறுப்பு வாங்கிய ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் நபருக்கும், கு.க. செல்வத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சென்னையிலுள்ள முக்கியமான மருத்துவமனை விற்பனைக்கு வருவதை அந்த பா.ஜ.க. பிரமுகரிடம் தெரிவித்த செல்வம், இதனை வாங்கும் சக்தி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைவர்களுக்குத்தான் இருக்கிறது என சொல்ல, இதனை முருகனிடம் தெரிவிக்கிறார் அந்த பிரமுகர். மூவரும் அடிக்கடி சந்திக்க, மருத்துவமனை விற்பனை விவகாரத்தை நட்டாவின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார் முருகன். நேரம் வரும்போது அழைத்து வாருங்கள் என டெல்லி தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில்தான், மா.செ. பதவி கிடைக்காத அதிருப்தியை செல்வம் பகிர்ந்துகொள்ள, மாற்று கட்சியினரை வளைக்கும் அசைன்மெண்டில் இருக்கும் முருகன், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வை தூக்கினால் நமக்கு மரியாதை உயரும் என்கிற ரீதியில் தகவல் தெரிவித்து, டெல்லி ப்ரோக்ராம் முடிவு செய்யப்படுகிறது.

 

Nakkheeran AD

 

முரளிதரராவ், முருகன், செல்வம் ஆகியோர் நட்டாவின் வீட்டில் அவரை சந்தித்து விவாதிக்கின்றனர். பரபரப்பான இந்த விவகாரத்தை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் அமித்ஷாவின் சிஷ்யரான தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ். தனக்கு தெரியாத மூவால் அதிர்ச்சியடைந்துள்ளார் மோடி. அயோத்தி பயணம் இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் சரியல்ல என சந்தோஷ் மூலம் நட்டாவுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார் மோடி.

 

அதாவது, எந்த சூழலிலும் பா.ஜ.க.வில் அவர் இணைந்ததாக செய்தி வரக்கூடாது. இணைவதெல்லாம் சென்னையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தரவு அது. இதன்பிறகே, பல்டி அடித்தார் செல்வம். அப்செட் மூடில் இருந்த நட்டாவும் மற்றவர்களும் பிஸ்னெஸ் விசயங்களை விவாதித்துவிட்டு செல்வத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்'' என்று பின்னணிகளை விவரிக்கின்றனர் மத்திய உளவுத்துறையினர்.

 

சீனியர்களின் அதிருப்தியை சரிசெய்யும் தடுப்பு வியூகத்தில் உள்ள மு.க.ஸ்டாலினிடம், உதயநிதியின் தலையீடுகள் பற்றியும் சீனியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில் முறையே துரைமுருகன், கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் திட்டமிடுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது