Skip to main content

"திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்" - திமுக எம்.பி தடாலடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் கவனிக்கப்பட்டவை வாரணாசி, அமேதி, வயநாடு போன்ற தொகுதிகள் என்றால் தமிழக அளவில் கவனிக்கப்பட்ட முக்கிய தொகுதிகளில் ஒன்றாக தருமபுரி இருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மற்ற எல்லா தொகுதிகளிலும் மாஸ் காட்டிய அதிமுகவை தூக்கியெறிந்து 75 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியே மீண்டும் தருமபுரியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு தோல்விதான் என்று பாமக தரப்பினர் கூறிவந்த நிலையில், திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவரிடம் பேசுவோம்...

 

dr.senthil



தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளீர்கள். இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த வெற்றி கடந்த 5 ஆண்டுகளாக என்னை கடுமையாக தயார் செய்ததால் கிடைத்த ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு நல்ல வேட்பாளர் திமுகவில் இருந்து போட்டியிட்டால் நிச்சயம் இங்கு வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்காகவே கடந்த  சில ஆண்டுகளாக தீவிரமான தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அந்த உழைப்புக்கான வெற்றியாகவே இதனை கருதுகிறேன்.

கருத்துக்கணிப்புகளில் கூட பாமக வெற்றிபெரும் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுக சார்பாக போட்டியிட்ட நீங்கள் வெற்றிபெற்றுள்ளீர்கள். அன்புமணிதான் உங்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்று நீங்களே விரும்பினீர்கள் என்றும் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். அவரே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேர்தல் களம் கடுமையாக இருந்ததாக உணர்கிறீர்களா?

நிச்சயமாக... எதிர்த்துப் போட்டியிடுபவர் பலமாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்தேன். கிட்டதட்ட 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று எதிர்பார்த்த நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். அன்புமணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். கடந்த முறை அன்புமணி கிட்டத்தட்ட 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். கடந்த தேர்தலில் அனைத்து சமுதாயம் vs ஒரு குறிப்பிட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் அந்தத் தேர்தலை தருமபுரி மக்கள் பார்த்தார்கள். அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவு எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. பாமகவும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தருமபுரி மக்களவை தொகுதி பாமகவின் கோட்டை என்று கூறுகிறார்கள்... அதை எப்படி பார்க்கிறீர்கள்?

இல்லை... தருமபுரி தொகுதி பாமகவின் கோட்டை என்ற தகவல் தவறானது. ஏனெனில், கடந்த 25 ஆண்டுளில் 20 ஆண்டுகள் மற்ற கட்சியினரே அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அதனால் பாமகவின் கோட்டை என்பது தவறான புரிதல். தருமபுரி திமுகவின் கோட்டைதான். தலைவரிடம் வாய்ப்பு கேட்டபோதே நான் அதை அவரிடம் தெரிவித்தேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், தருமபுரி திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று கூறினேன். அவ்வாறே வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றியை வரும் தேர்தலிலும் தொடர்வோம்.

பல இடங்களில் நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது இடையூறு ஏற்பட்டதாகவும், அதனால் நீங்கள் பிரச்சாரம் செய்யாமல் பாதியில் சென்றதாகவும் தகவல்கள் வெளியானதே?

அப்படி எந்த இடத்திலும் பிரச்சாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் எப்படி எங்களின் பயணத்திட்டங்களை வரையறுத்து வைத்திருந்தோமோ அந்த இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தோம். ஒரு இடத்தில் மட்டும் இளைஞர் ஒருவர் வாகனத்தை குறுக்கே போட்டார். அவரிடமும் பேசி, குறிப்பிட்ட அந்த இடத்திலும் பிரச்சாரம் செய்தோம்.

 

 

dr.senthil with thirumavalavan



சில இடங்களில் நானும் அதே சமூகத்தை சேர்ந்தவன்தான் என்று பேசியிருக்கீங்களே..?

அது பாமகவுக்காக சொல்லப்பட்ட ஒன்று. அதையும் தாண்டி வாக்கு அரசியல் என்பது முற்றிலும் வேறான ஒன்று. தேர்தல் வெற்றிக்கு வாக்கு அரசியல் மிக முக்கியமான ஒன்று. அன்புமணி தரப்பு அதனை கடுமையாக செய்ததால் அதனை நாங்கள் செய்யவேண்டிய நிலைக்கு ஆளானோம். அதுவும் சில இடங்களில்தான். நான் என்னுடைய பிரச்சாரத்தில் கேட்டதெல்லாம் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், சிறப்பாக செய்ல்படுவேன் என்றுதான். அதற்கு மக்கள் அங்கீகாரம் தந்துள்ளார்கள்.

இந்த வெற்றி பாமகவுக்கான பதிலடினு சொல்லியிருந்தீங்க.. மேலும் அன்புமணி ராஜ்யசபாவுக்கு வர வேண்டும் என்றும் கூறியிருந்தீர்களே?

பதிலடினு நான் சொல்லவில்லை. அதிமுக அன்புமணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரும் வரட்டும். இணைந்தே மக்களுக்கு நன்மை செய்வோம். அது கொள்கை அடிப்படையில் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக இணைந்ததாக இருக்கும். எனக்கு இணைந்து செயல்படுவதில் எந்த ஈகோவும் இல்லை.


ஏன்... கொள்கை அடிப்படையில் என்றால் பதற்றமடைகிறீர்கள்... பல தேர்தல்களில் பாமகவுடன் திமுக கூட்டணியில் வைத்துள்ளீர்களே?

அவங்க கொள்கை வேறு... இந்த தேர்தல்ல கூட அவங்க திமுக கூட்டணிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. என்னை தலைவர் நம்பினார். அவரின் நம்பிக்கையை நான் காப்பிற்றியுள்ளேன்.

வெற்றிக்குப் பிறகு நீங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நீங்கள் சந்தித்து பேசியிருந்தாலும், திருமாவளவனுடனான சந்திப்பு பரபரப்பானதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம். நானும் அந்தப் புகைப்படத்தை பார்த்தேன். நான் இயற்கையாகவே கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்கும்போது கட்டிப்பிடித்துதான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். மற்ற கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது, நான் இவ்வாறே செய்தேன். திருமாவளவனை சந்தித்த புகைப்படம் மட்டும் வைரலானது எதிர்பாராதது.

அப்படி என்றால் அன்புமணியை சந்தித்தால் இதே போன்று கட்டியணைப்பீர்களா?

நிச்சயமாக... அவரின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவரை சந்திக்க எனக்கு அனுமதி கிடைத்தால் அவரை நிச்சயம் கட்டியணைப்பேன்.
 

 

அடுத்த பகுதி:

வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி
 

 

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.