Skip to main content

70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

chennai egmore baby hospital


கரோனா காலத்தில் தன் உயிரையும் பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை சார்ந்த ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள். அயராமல் பணியாற்றி வரும் இவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு சேவையை இந்தச் சமூகத்திற்குச் செய்து வருகின்றனர்.
 


அந்த வகையில், 70 நாளுக்கும் மேலாக ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் டெக்னீசியன் தம்பிதுரை. 


தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2015-2016 பேட்ஜில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் டெக்னீசியனாகப் பணிக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வரும் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக எழும்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தம்பிதுரை, கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை ஒருநாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. 


'ஒரு நாள் கூட லீவு எடுக்காம... எப்படி சார்?' என நாம் அவரிடம் பேசினோம். 

மனம் திறந்து பேச ஆரம்பித்த அவர், 'என்னுடன் பணியாற்றியவர் சொந்த ஊருக்குச் சென்றபோது அங்கேயே அவர் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் அவரால் திரும்ப இங்கு வரமுடியவில்லை. குழந்தைகளுக்கான சிகிச்சை கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம். நாம லீவு போட்டோம் என்றால் அந்த குழந்தைகளுக்கான சிகிச்சையும் தள்ளிப்போகும். இந்த கரோனா காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நாம் துணையாக இருக்கணும், குழந்தைகளை கரோனா காலத்தில் அலைய வைக்கக்கூடாதுன்னு முடிவு செய்து மருத்துவமனையிலேயே தங்க ஆரம்பித்தேன். இதற்கு மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவர்கள், சக ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைத்தனர். 
 

 

 

dharmapuri thambidurai - dialysis technician  - chennai egmore baby hospital


தொடர்ந்து வேலை செய்யும்போது சோர்வு வரவில்லையா?

கண்டிப்பா வரும். சிகிச்சை அளிக்கும்போது குழந்தைகள் அழும். அதனைப் பாக்கும்போது எனக்கும் அழுகை வரும். கட்டுப்படுத்திக் கொள்வேன். அதற்குப் பிறகு குழந்தைகள் சிரிக்கும். போகும்போது டாடா காட்டும்... அப்ப அந்தக் குழந்தைகள் முகங்களைப் பார்க்கும்போது சோர்வெல்லாம் போய்விடும். இந்த வேலைக்கு வந்ததும் குழந்தைகளுடன் பழக வாய்ப்புக் கிடைச்சுது. என்னைக் கண்டால் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும். அப்படிப் பழகிப்போன குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கணும், தள்ளிப்போடக் கூடாது என்பதற்காகவே லீவு போடல.

உங்க அப்பா, அம்மா என்ன சொல்றாங்க? 

நான் வீட்டுக்கு ஒரே பையன். சென்னையின் நிலைமை குறித்து டி.வி.யில் அவர்கள் பார்க்கிறார்கள். 'வந்துவிடு' என்பார்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை, எவ்வளவு பெரியவனா வளர்ந்தாலும், அவர்களுக்கு நான் குழந்தைதானே. எனக்கு இந்தக் குழந்தைகளை விட்டுப்போக மனசு வரல. போன் பேசும்போதெல்லாம் வந்துவிடு வந்துவிடு என்பார்கள். இதற்காகவே நான் அப்பா, அம்மாக்கிட்ட போன் பேசுறத குறைச்சிக்கிட்டேன். இப்ப அமைச்சர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், மருத்துவமனை இயக்குநர், மருத்துவர்கள் என எல்லோரும் பாராட்டுறத பார்த்து அவுங்க சந்தோஷப்படுறாங்க. 'நீ ஜாக்கரதையா இருப்பா'ன்னு சொல்றாங்க. 


70 நாளுக்கும் மேலாக ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வரும் தம்பிதுரைக்கு சுகாதாரத்துறை அமைச்சர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், மருத்துவமனையின் இயக்குநர் என எல்லோரும் பாராட்டுத் தெரிவித்து வருவதுடன், அவரது உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுமாறும் அன்போடு அறிவுறுத்தியுள்ளனர்.


 

http://onelink.to/nknapp


மருத்துவமனையில் எல்லோரையும் அனுசரித்துபோகும் தம்பிதுரை தற்காலிக பணியாளர்தான். அவரது வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது பிரார்த்தனை என்கிறார் உடனிருந்த நண்பர். பாராட்டுத் தெரிவித்த அரசு, பரிசாக நிரந்தர பணியைத் தரும் என நம்புவோம். 
 

 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.