Skip to main content

பாஜக போட்ட ஸ்கெட்ச்; காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த மூத்த தலைவர்

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

Congress veteran Mohan Singh Rathwa quits party joins BJP

 

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  வரும் 12 ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்திலும், அடுத்த மாதம் 1 ஆம் மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பொதுவாக, இந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே இருமுனைப் போட்டி நடந்து வந்த நிலையில், ஆம் ஆத்மியின் வருகையால் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

 

இந்த இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் இழந்த தங்களது அதிகாரத்தை மீட்டெடுக்கக் கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.  இமாச்சலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உட்பட முக்கிய நிர்வாகிகள் 26 பேர் பாஜகவில் இணைந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஜராத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

 

Congress veteran Mohan Singh Rathwa quits party joins BJP

 

குஜராத்தில் உதய்ப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 10 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த தலைவர் மோகன் சிங் ரத்வா (78) தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ள அவர், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார். 

 

பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் சிங் ரத்வா, எனது ஆதரவாளர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்றும், பழங்குடியின மக்களுக்கு பாஜக அரசும், பிரதமர் மோடியும் செய்யும் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பாஜக விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இப்படி கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் அடுத்தடுத்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய, தினந்தோறும் புதுப்புது வகையில் சரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், பாஜகவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.