Skip to main content

தமிழக அரசு மீது திருப்தியில்லாத மத்திய அரசு... சென்னையில் கரோனா பரவல் பற்றி மோடியிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

admk

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் கனமான கோப்புகளை கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. அதனடிப்படையில், எடப்பாடி அரசுக்கு மோடி கொடுத்த டோஸ்தான், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுக்கவைத்துள்ளது என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறையினர்.

 

கரோனா தடுப்பு மருத்துவவல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சரவை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியபோது எடப்பாடி மிகவும் சோர்வாகத் தான் இருந்திருக்கிறார். சுகாதாரத் துறையினர் நம்மிடம், "சென்னையில் பரவும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், அமைக்கப்பட்ட குழுக்கள் எதிலும் திருப்தி இல்லாத மத்திய சுகாதாரத்துறை, சென்னையை டெல்லியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நேரிடும் என தலைமைச்செயலாளர் சண்முகம் வழியாக எடப்பாடிக்குத் தகவல் தந்துள்ளது. அதுதான் அவரது சோர்வுக்குக் காரணம்'' என்கின்றனர்.

 

இதனால், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையில் இளம் வயதினரின் மரணங்கள், அறிகுறியே இல்லாதவர்களின் மரணங்கள், பாசிட்டிவ்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டதா உள்ளிட்ட நடப்புச் சிக்கல்களையும் மத்திய அரசின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நிறைய விசயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ஆரோக்கியமற்ற இளம் வயதினரின் மரணங்கள் தவிர்க்க முடியாதவை. அறிகுறியே இல்லாதவர்களின் இறப்புக்கு சைலண்ட் ஹேபாக்சியா தாக்குதல்தான் காரணம். டெஸ்டுகளின் எண்ணிக்கையும், அதன் ரிசல்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருப்பதால் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இதனை க்ளஸ்டர் என சொல்லலாமே தவிர சமூகப்பரவலாக கணிக்கத்தேவையில்லை.

 

கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். 6 மாதங்களுக்குப் பிறகே தொற்றுக் கட்டுக்குள் வரும் என்பதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியிருக்கிறோம். அதனால் செப்டம்பர், அக்டோபர் வரை பாதிப்புகள் அதிகரித்து அதன்பிறகே அடங்கும் என மருத்துவக்குழு விவரித்துள்ளது. இதனைத்தொடர்ந்தே, முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுத்தார் எடப்பாடி என்கிறார்கள். இந்த ஆலோசனையில் காணொளிக் காட்சி வழியாகக் கலந்துகொண்ட ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரப்தீப்கவூரை பேச அனுமதிக்காததுடன், பேட்டி தரக்கூடாது எனவும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டதாம்.
 

dr

 

இளம்வயது மரணங்கள், சைலண்ட் ஹேபாக்ஸியா அட்டாக் குறித்து சென்னை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமாரிடம் பேசியபோது, "கரோனாவால் இளம் வயது மரணங்கள் அதிகரித்திருப்பதாகச் சொல்வது தவறு. இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள் மரணமடைகின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களைத் தொற்று தாக்கினாலும் அவர்களுக்குத் தெரியாமலே ஓடிவிடுகிறது. 7 நாள் கழித்து, ஆன்டிபாடி பரிசோதனையில், ஐ.ஜி.எம்.ஆன்டிபாடி பாசிட்டிவ் என வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை கரோனா தாக்காது. இளம் வயதினர் உடல் நலத்தில் அக்கறைகாட்ட வேண்டும். கரோனாவைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை.

 

அதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. ஆனால், 60 வயதைக் கடந்துள்ள டாக்டர்கள் அப்படி இருக்க முடியாது. போர் முனையில் உள்ள ராணுவ வீரர்கள் போல கரோனாவை எதிர்த்து டாக்டர்கள் போராடுகிறோம். கரோனாவை எதிர்த்து லண்டனில் போராடும் டாக்டர்களில் 50 பேர்தான் இறந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ரிட்டையர்டு ஆன டாக்டர்களெல்லாம் மருத்துவப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததால் கரோனா அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை. ஆனா, போராடுகிற எங்களுக்கு சிப்பாய்கள்தான் கிடைப்பதில்லை. அதாவது, இளம்வயது டாக்டர்கள், செவிலியர்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்கப்படாததால் ரிசைன் பண்ணிட்டு ஓடிவிடுவதுதான் எல்லா மருத்துவமனைகளும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை.

 

http://onelink.to/nknapp

 

சமூகப் பரவலாக சென்னை மாறியிருக்கிறதா என்பதற்கு ஐ.ஜி.எம். மற்றும் ஆன்டி ஜெ.எம்.டெஸ்ட் செய்து பார்த்தால்தால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆன்டிஜெ.எம். இப்போதுதான் நாம் ஆரம்பிச்சிருக்கோம். ஆண்டிஜென் கிட் இப்போதுதான் வரத் துவங்கியிருக்கிறது. 100 பேருக்கு ஐ.ஜி.எம். டெஸ்ட் எடுத்து அதில் 50 பேருக்கு பாசிட்டிவ்னு வந்ததுன்னா சமூகப் பரவல் இல்லைன்னு சொல்லலாம். இத்தகைய டெஸ்டில் ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.எம். என 2 வகை இருக்கு. ஐ.ஜி.ஜி. பாசிட்டிவ்வாக இருந்தால் நோய்க் குணமடையவில்லைன்னு அர்த்தம். அதுவே ஐ.ஜி.ஜி. நெகட்டிவ்வாகவும், ஐ.ஜி.எம். பாசிட்டிவ்வாகவும் இருந்தால் குணமடைந்து விட்டார்கள்னு பொருள். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிட்டது எனச் சொல்லலாம். இவைகளைச் செய்து பார்க்காமல் சமூகப் பரவலைக் கணக்கிட முடியாது. அதேபோல, ஹேபாக்ஸியா தாக்கம் என்பதெல்லாம் மிக அபூர்வம். லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்கும். அதனால், எல்லா வியாதிகளையும்போல கரோனாவும் ஒரு வியாதிதான். ஆனா, மருந்து கண்டுபிடிக்கப்படாத வியாதி. அதனால் அதனை எதிர் கொள்ளணுமே தவிர பயப்படத் தேவையில்லை. இன்றைய நிலையில், ஆக்ஸ் போர்ட் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ள மருந்து ஒரு வரப்பிரசாதம்! பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார் மிக இயல்பாக.


 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.