Skip to main content

பா.ஜ.க. உத்தரவு போட்டும் சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்த ஓ.பி.எஸ்... முதல்வருக்கு எதிராக அ.தி.மு.க. அமைச்சர்கள்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

admk


ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள் என பா.ஜ.க. தடுத்தது. அருண்ஜெட்லி மூலம் பா.ஜ.க. சொன்ன அந்த உத்தரவை மீறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து சசிகலா முதல்வராகத் தனது பதவியை ராஜினாமா செய்து விசுவாசத்தை வெளிப்படுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். கோர்ட் தீர்ப்பால் சசிகலா முதல்வராக முடியாத நிலையில், எடப்பாடியை முதல்வராக்கினார். இதில் ஓ.பி.எஸ் அப்செட். அதன்பின் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள்.
 


"சசிகலா ரீலிசாகவுள்ள நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கி அதை அவசர சட்டமாக்கி, கவர்னர் மூலம் காய் நகர்த்தி சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகிய மூவரையும் மறுபடியும் ஒரு அரசியல் சதுரங்க காய் நகர்த்தலில் சிக்க வைத்திருக்கிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களை அறிந்த தலைவர்கள்.
 

jakki


போயஸ் கார்டன் இல்லம் என்பது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி குன்காவால் அரசுக்குச் சொந்தமான சொத்தாக அறிவிக்கப்பட்ட சொத்தாகும். கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தினாலே போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைத்ராபாத் திராட்சைத் தோட்டம் ஆகியவை அரசு சொத்தாகிவிடும். அப்படியிருக்க அதனை எப்படி அரசு சொத்தாக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சசிகலாவின் வழக்கறிஞர்கள். '36 ஏ, போயஸ் கார்டன்' என்கிற முகவரியை சசிகலா மீண்டும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக எடப்பாடியும், பா.ஜ.க.வும் சேர்ந்து இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சசிகலா முதல்வராக்கிவிட்டு சென்ற பிறகு கடந்த நான்கு வருடத்தில் எடப்பாடி வேறு விதமாக வளர்ந்துவிட்டார்.

திரிவேணி எர்த் மூவர்ஸ் என்கிற கவுண்டர் கம்பெனி மூலமும், ஜக்கி வாசுதேவ் மூலமும், பி.ஜே.பி.க்கு நெருக்கமான தொழில் அதிபரான அதானிக்கு நெருக்கமாகி, தமிழக அரசு ஒப்பந்தங்கள், திட்டங்கள் அனைத்திலும் அதானியின் பணத்தைத் தனக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக முதலீடு செய்து பெரிய பண வருவாயை வளர்த்திருக்கிறார் எடப்பாடி. அதானியும் அவரது பார்ட்னர்களான கொங்கு தொழில் அதிபர்களும் அதிகாரம் சசிகலாவிற்கு செல்வதை விரும்பவில்லை.
 


அதனால் சசிகலா எதிர்ப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி. இதில் முன்னணியில் இருப்பது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், சாமியார் ஜக்கிவாசுதேவ் ஆகியோர். இந்த எதிர்ப்பில் முழு உடன்பாடு காட்டாத முக்குலத்து சமூகத்தவரான ஓ.பி.எஸ்ஸை எடப்பாடியுடன் இணைத்துக் கொண்டுவரும் பணியை ஜக்கிவாசுதேவ் ஒருங்கிணைக்கிறார். ஒருவேளை, எடப்பாடி பழைய விசுவவாசத்தை சசிகலாவுக்கு காட்டினால், வேலுமணியை முதல்வராக்கலாம் என பா.ஜ.க.வுக்கு யோசனை தந்திருக்கிறாராம் ஜக்கி.

இதை அறிந்து, தன் விசுவாசத்தை டெல்லிக்கு காட்டும் வகையில், சசிக்கு எதிராக, போயஸ் கார்டனை அரசு இல்லமாக்க அவசர சட்டம் போட்டிருக்கிறார் எடப்பாடி. இந்தப் பின்னணியை அறிந்து கொண்ட சசிகலா அதே போயஸ் கார்டன் பகுதியில் குடியேறத் திட்டமிட்டுள்ளார். ஜெ.வின் வீட்டிற்கு எதிரே சொத்துக் குவிப்பு வழக்கில் வராத காலி இடம் ஒன்று ஜெ.வுடைய பாதுகாப்பு வாகனங்கள் நிற்பதற்காக வாங்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் புதிய வீடு ஒன்றைக் கட்டுவற்கு சசிகலா தயாராகிவிட்டார். சிறையிலிருந்து வருவதற்கு முன் விரைந்து பணி முடித்து குடியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கு எடப்பாடி எடுத்த முயற்சிகளுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பைச் சிறையிலிருந்தபடியே கிளப்பி விட்டிருக்கிறார் சசி. தென் சென்னை மா.செ.வான தி.நகர் சத்யாவை மாற்றி ஆதிராஜாராமை நியமிக்க எடப்பாடி எடுத்த முயற்சிகளுக்கு செங்கோட்டையனும், திருச்சி மா.செ. குமாரை மாற்றுவதற்கு சி.வி.சண்முகமும் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்கள். இப்படி பல அமைச்சர்களே காட்டிய எதிர்ப்பை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் எதிர்பார்க்கவில்லை. மா.செ.க்கள் மாற்ற முயற்சியை எடப்பாடி கைவிட்டுவிட்டார் என்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம், தான்தான் பொதுச் செயலாளர் என்கிற கையெழுத்து இயக்கத்தையும் தொடங்க உத்தரவிட்டுள்ளார். அதில் மந்திரிகள், மா.செ.க்கள் என சசி ஆதரவு மூலம் பதவி பெற்றவர்களின் கையெழுத்தைப் பெற திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக சில முக்கியமான சிறைச் சந்திப்புக்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
 

http://onelink.to/nknapp


பா.ஜ.க. மேலிடத்திடம், உங்களை எதிர்க்க மாட்டேன் என தூதுவிட்டுள்ள சசிகலா, தன்னை எதிர்ப்பதை அ.தி.மு.க. முன்னிலைப்படுத்தினால், 89 இல் ஏற்பட்டதுபோல வரும் தேர்தலில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். தோல்விக்குப்பிறகே அ.தி.மு.க ஒன்றிணையும், அத்தகைய நிலைமை மறுபடியும் தேவையா என டெக்னிக்கலாக ஒரு கேள்வியையும் பா.ஜ.க.விடம் எழுப்பியிருக்கிறார். சசிகலா எதிர்ப்பினால் அ.தி.மு.க. உடையுமா? என்பதுதான் தமிழக அரசியலில் அ.தி.மு.க. சந்திக்கப்போகும் சவால் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.