Skip to main content

அறிவாலயத்துக்கு அல்வா! சேலம் திமுகவில் சலசலப்பு!!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

salem district

 

உள்ளாட்சித் தேர்தலின்போது, ஆளுங்கட்சிக்கு முரட்டு விசுவாசம் காட்டியதாக எழுந்த புகாரின்பேரில் கட்டம் கட்டப்பட்ட ஏற்காடு ஒன்றியச் செயலாளர் ஏ.டி.பாலு மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த டிசம்பரில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்றாலும் கூட, சேலம் மாவட்டத்தில் 65 சதவீத ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளைத் தி.மு.க. கைப்பற்றி கெத்து காட்டியது. அதேநேரம், 20 ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிகளை மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணி வாரிச்சுருட்டியது. 


இவற்றில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் தலைவர் பதவியைத் தி.மு.க. கைப்பற்றி விடும் நிலை இருந்தும் கூட, உடன்பிறப்புகளின் உள்ளடிகளால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சியின் குதிரை பேரத்தில், தி.மு.க.வில் யாரெல்லாம் ட்ரம்ப் கார்டாக இருந்தார்களோ அவர்கள் எல்லோருமே விலை போனார்கள். அந்தளவுக்கு கச்சிதமாக காய் நகர்த்தி இருந்தார், சேலத்தின் நிழல் முதல்வரான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்.


உடன்பிறப்புகளின் உள்ளடி வேலைகள் குறித்த புகார்கள் தலைமைக்கு பறந்ததால், உடனடியாகக் களையெடுப்பில் இறங்கினார் மு.க.ஸ்டாலின். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவை உடனடியாக அப்பதவியில் இருந்து தூக்கினார். அதுவரை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் பணிக்குழுவில் இருந்த டி.எம்.செல்வகணபதி, மேற்கு மாவட்ட பொறுப்பாளரானார்.


ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.டி.பாலு, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக முரட்டு விசுவாசத்துடன் நடந்து கொண்ட புகாரின்பேரில் கடந்த 21.1.2020ஆம் தேதி அதிரடியாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை ஜூலை 8ஆம் தேதி முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்வார் என்றும், அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் கட்சித் தலைமை அறிவித்து இருப்பது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

sss

 

இது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினர்.


''உள்ளாட்சித் தேர்தலில் ஏற்காடு ஒன்றியக்குழுவில் மொத்தமுள்ள 6 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் தலா 3 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். தி.மு.க. தரப்பில் கோகிலா சித்தேஸ்வரன், சின்னவெள்ளை, சேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை அ.தி.மு.க. பக்கம் இழுக்க பெரிய அளவில் குதிரை பேரம் நடந்தது. அப்போது ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.டி.பாலு, ஆளுங்கட்சியினரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக ஓட்டுப்போடுமாறு வற்புறுத்தினார். இதற்காக கோகிலா சித்தேஸ்வரனுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த பேரங்களில் தி.மு.க. தரப்பில் வெற்றி பெற்ற சேகரை துணைத்தலைவராக்கிவிட்டு அ.தி.மு.க.வுக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டனர்.


கவுன்சிலர்கள் கோகிலா சித்தேஸ்வரன், சின்னவெள்ளை மற்றும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ஏ.டி.பாலுவும், அப்போதைய கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவும் உள்ளாட்சித் தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வேலை செய்த விவரங்களை எல்லாம் அறிவாலயத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். ஏ.டி.பாலு, அ.தி.மு.க.வை ஆதரிக்கச் சொல்லி தனக்குக் கொடுத்த 5 லட்சம் ரூபாயையும் தளபதியிடம் ஒப்படைத்தார், கோகிலா.


அதற்கு அடுத்த நாள் விளக்கம் அளிப்பதற்காக ஏ.டி.பாலு அறிவாலயம் சென்றபோது அவரை நேரில் சந்திப்பதையே தளபதி தவிர்த்து விட்டார். உடனடியாக அவரை கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்து முரசொலியில் கட்டம் கட்டி அறிவிப்பும் வெளியானது. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும்கூட, ஏற்காடு ஒன்றியத்தில் கடைகள் ஏலம் விட்டபோது தி.மு.க. பெயரைச் சொல்லி ஆளுங்கட்சிக்காரர்களிடம் ஏ.டி.பாலு 'கட்டிங்' வாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சித்ரா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். கட்சிக்கு விசுவாசமில்லாத ஏ.டி.பாலுவை சில நாள்களுக்கு முன்பு மீண்டும் கட்சியில் சேர்த்திருப்பது, எங்களுக்கு எல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.


என்ன தப்பு செய்தாலும் கட்சி நம்மீது நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துவிட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஏ.டி.பாலுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர, அவரிடம் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆஸ்.சிவலிங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கைமாற்றப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை எல்லாம் அறிவாலயத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் மூன்று பேர் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. தளபதிக்கு தெரிந்து இதுபோன்ற தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரையே ஏமாற்றித்தான் ஏ.டி.பாலுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்,'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.


ஏ.டி.பாலுவிடம் இருந்து கிழக்கு மாவட்டத்திற்கு பணம் வசூலித்துக் கொடுக்கும் தரகு வேலையை எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு நெருக்கமான கட்சிக்காரர் ஒருவர் செய்து கொடுத்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. மேலும், கரூர் மாவட்ட தி.மு.க.வை முன்னுதாரணமாக வைத்து, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து ஒன்றியங்களையும் அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கவும் மாவட்டத் தலைமை யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதுவும் கட்சிக்குள் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

salem district


இது தொடர்பாக நாம் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் கேட்டோம்.

 

''ஏற்காடு ஒன்றியத்தில் ஏ.டி.பாலு கட்சியின் அடிப்படை உறுப்பினராகத்தான் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போதும் சொல்கிறேன், அவர் ஒருநாளும் ஒன்றிய பொறுப்புக்கு வரமாட்டார். கட்சித் தலைமைக்கு அவர் தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததன் பேரில், கட்சித் தலைமைதான் அவரை மீண்டும் உறுப்பினராகச் சேர்த்து இருக்கிறது. இதில் என் பரிந்துரை எதுவும் இல்லை.


யாராவது அடிப்படை உறுப்பினராகச் சேர்வதற்காக 5 லட்சம் ரூபாய் கொடுப்பார்களா?. அந்தளவுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு ஏ.டி.பாலு ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது. என் மீதான காழ்ப்புணர்வு காரணமாக கட்சிக்காரர்கள் சிலர் இவ்வாறான புகார்களைச் சொல்கிறார்கள். அதேபோல்தான், ஒன்றியங்களைப் பிரிக்கும் திட்டமும் என்னிடம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தே நிர்வாகம் செய்யும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. அப்படியே செய்தாலும் அதெல்லாம் கட்சித் தலைமைதான் தீர்மானிக்கும்.


இரண்டுமுறை எம்.எல்.ஏ. ஆக இருந்தும்கூட நானெல்லாம் பரம்பரைச் சொத்துகளை விற்று கட்சிக்காக வேலை செய்பவன். இப்போதுகூட வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சில பேர், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்த இப்படியெல்லாம் புகார்களைச் சொல்கிறார்கள்,'' என்றார் எஸ்.ஆர்.சிவலிங்கம்.

 

dddd

 

ஏற்காடு முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.டி.பாலுவிடம் கேட்டபோது, ''உள்ளாட்சித் தேர்தலில், ஏற்காடு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற கோகிலா சித்தேஸ்வரன் அ.தி.மு.க.விடம் பேரம் பேசி வந்தார். அவரை தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டுப்போடத்தான் 5 லட்சம் ரூபாயை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் கொடுத்திருந்தார். அவர் அ.தி.மு.க. அணிக்கு போய்விடக்கூடாது என்பதற்காக, அவர் உள்பட தி.மு.க. .கவுன்சிலர்களை அப்போது டாப்சிலிப்பில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்திருந்தேன். 

 

அந்தப் பணத்தைதான் நான் கொடுத்ததாக அவர் கட்சித் தலைமையிடம் கொடுத்தார். அந்தப் பணத்தையும் கட்சித் தலைமை கோகிலாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது. நான் ஒருபோதும் அ.தி.மு.க.விடம் பணம் பெறவில்லை. லாக் டவுனுக்கு முன்பே, என் தரப்பு விளக்கத்தை கட்சித் தலைமையிடம் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தேன். கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளரும் என் மீது தவறு இல்லை என்று தளபதியிடம் கூறினார். அதையடுத்துதான் நான் மீண்டும் கழகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளேன்,'' என்றார்.

 

http://onelink.to/nknapp


உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர்தான் ஏ.டி.பாலு. அப்போது எதிராகச் செயல்பட்டவர், மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது ஆளுங்கட்சியிடம் சோரம் போகமாட்டாரா? என பதிலுக்கு கேள்வி எழுப்புகின்றனர் கழக உடன்பிறப்புகள். நியாயமான கேள்வி; தலைமைக்குப் புரிந்தால் சரிதான்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.