Skip to main content

அடிமேல் அடி... அமித்ஷா?

Published on 23/12/2019 | Edited on 24/12/2019

2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையில் பாஜக வெற்றி பெறுவதற்கு முன் சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஷாவை பாஜகவின் தலைவராக கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். பாஜக தலைவராக பொறுப்பேற்ற அமித் ஷா, இந்தியாவிலிருந்தே காங்கிரஸை துடைத்தெறியப் போவதாக சவால் விடுத்தார். அப்படிச் சொன்னதை நிரூபிக்கும் வகையில் பாஜக வேர்பிடிக்க முடியாத மாநிலங்களில் கூட அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளை சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கொண்டு மிரட்டி, பாஜகவுடன் கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்.

 

amit shah



பணம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு அமித் ஷா பல மாநிலங்களில் கூட்டணி அரசு அமைத்தார். இவற்றில் சில மாநிலங்களில் பாஜக ஓரிரண்டு சீட்டுகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த மாநிலங்களில் முதல்வர் பதவி இல்லாவிட்டாலும், பாஜக கூட்டணி அரசு என்றே ஊடகங்களில் கூறப்பட்டது. பாஜக இல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்கியாவது பாஜகவை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட அமித் ஷாவின் சாதனைகள் தொடர்ந்து ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தமுள்ள இந்திய நிலப்பரப்பில் 71 சதவீதம் அளவுக்கு பாஜகவின் நேரடி மற்றும் கூட்டணி ஆட்சியின் கீழ் வந்தது.


கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேரை ராஜினாமா செய்ய வைத்த கொடுமையும் நடந்தேறியது. இந்த நடவடிக்கையையும் அமித் ஷாவின் அற்புதம் என்று பெரிதாக்கினர். இந்நிலையில்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மிஜோரம் ஆகிய 4 மாநிங்களில் பாஜக தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை மறைக்க காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பை பெரிதாக்கியது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போதே பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வட மாநிலங்களில் பாஜக கூடுதல் இடங்களை கைப்பற்றியது. மோடி மீண்டும் பிரதமரானார்.
 

 

amit shah and modi



2019 தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற தொகுதிகள் அனைத்திலும் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருப்பதாக தேர்தல் ஆணையமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில்தான், பொருளாதார சீர்குலைவு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாத மோடி அரசு, மக்கள் கவனத்தை திசைதிருப்ப மீண்டும் மதவெறியையும் தேசிய வெறியையும் கிளறிவிட முடிவு செய்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்தம், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே இடத்தை கொடுக்கும் தீர்ப்பு, காஷ்மீரை மூன்றாக பிரிக்கும் சட்டம் என்று அடுத்தடுத்து இஸ்லாமியர்களை பாதிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார் அமித் ஷா. இந்நிலையில்தான் மகாராஸ்டிரா, ஹரியானா மாநிலத் தேர்தல்களிலும் பாஜக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள மகாராஸ்டிரா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்த சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.


ஜார்கண்ட் மாநிலத்தை எப்படியும் கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் தேர்தலை அறிவித்த பாஜக அரசு, அந்த மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தை அறிவிக்கச் செய்தது. மோடியும் அமித் ஷாவும் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் இப்போது அந்த மாநிலத்திலும் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜார்கண்ட் தோல்வியைத் தொடர்ந்து, இந்தியாவில் பாஜக ஆளும் நிலப்பரப்பு வெறும் 35 சதவீதமாக குறைந்துள்ளது. இப்போது பாஜகவிடம் உள்ள முக்கியமான மாநிலங்களில் கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத் மட்டுமே குறிப்பிடத்தகுந்தவை. அமித்ஷாவின் நடவடிக்கைகளுக்கு மக்கள் கொடுக்கும் இந்த அடிமேல் அடி பாஜகவை பதறவைத்திருக்கிறது.

 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.