Skip to main content

“திமுகவை சீண்டும் அமலாக்கத்துறை; உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் திருப்பம்” - வழக்கறிஞர் சரவணன்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Advocate Saravanan interview

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு குறித்து வழக்கறிஞர் சரவணனை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

செந்தில் பாலாஜி சார்பாக நீதிமன்றத்தில் என்னென்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டன?

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தில் அனைவரின் வாதங்களும் முடிவடைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்துத்தான் வழக்கை விசாரிப்போம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அனைத்து வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

 

குறிப்பாக, 41ஏ என்று சொல்லக்கூடிய சட்டப்பிரிவின்படி 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை கொடுக்கும்பட்சத்தில் கைது செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தோம். எனவே, செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் கொடுக்காத போது அவரை கைது செய்ய முடியாது என்றும் மேலும் ஜாமீனில் அவரை விடுவிக்க வேண்டும் என்ற வாதத்தை எடுத்துரைத்தோம். அது மட்டுமல்லாமல், அவர் சிகிச்சையில் இருந்தபோது நீதிமன்றக் காவலில் வரும் 15 நாட்கள் முடிவடைந்த பிறகு மீண்டும் விசாரிக்க முடியாது என்ற வாதத்தை எடுத்து வைத்தோம். 

 

செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நல்ல விசாரணை அமைப்பாக இருந்தால் அவர் சிகிச்சை முடிந்த பிறகு கைது செய்து கொள்ளலாம் என்று விட்டிருப்பார்கள். ஆனால், இவர்கள் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தாலும் அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறார்கள். அவர்கள் அதை எடுத்துரைத்த போது நீதிமன்றமும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் இருந்து விசாரித்துக் கொள்ளலாம் என்ற தீர்ப்பையும் வழங்குகிறது. இப்போது மீண்டும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்க இன்னும் சில நாட்கள் அவகாசம் கேட்கிறது. இது அப்போதே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டாமா? இந்த அமலாக்கத்துறையின் இரட்டை வேடத்தைத்தான் நீதிமன்றத்தில் முறையிட்டோம்.

 

செந்தில் பாலாஜி மனைவி கொடுத்த ஆட்கொணர்வு மனு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

செந்தில் பாலாஜியின் மனைவி கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதுமட்டுமல்லாமல், இந்த கைது தவறான முறையில் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறோம்.

 

செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சிறிது காலம் தேவைப்படும் என்பதற்காகத்தான் அவருடைய ஓய்வுக்காலத்தை நீட்டித்து இருக்கிறார்களா?

செந்தில் பாலாஜிக்கு செய்திருப்பது பைபாஸ் அறுவை சிகிச்சை. அதனால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து சில நாட்களுக்குள் வரலாம். ஆனால், அவர் முழுவதுமாக குணமடைய சிறிது காலம் அவகாசம் தேவைப்படும். இப்படி அவரது உடல்நிலை மோசமாக இருக்கும் சூழ்நிலையில் அவரை சந்தேகப்படுகின்றனர். செந்தில் பாலாஜி உயிருக்குப் போராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அமலாக்கத்துறை.

 

செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக இருக்கிறாரா?

செந்தில் பாலாஜியின் தம்பியை பற்றி அமலாக்கத்துறையினரிடம் தான் கேட்க வேண்டும். அதைப் பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும்.

 

செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாமல் போனால் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்குவாரா?

இப்போதும் அமலாக்கத்துறையின் பிடியில்தான் இருக்கிறார். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய முடியும். மாறாக ஆளுநரோ அமலாக்கத்துறையோ கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி மிரட்டும் தொனியில் பேசுகிறார் என்று குற்றம் சாட்டி வருகிறார்களே?

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சியினரையும் மிரட்டிக் கொண்டிருப்பதுதான் அமலாக்கத்துறை. இந்த அமலாக்கத்துறை பாஜக கைப்பாவையாக இருந்து கொண்டு யாரையெல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்தால் தெரியும். செந்தில் பாலாஜி, டி.கே.சிவக்குமார், சஞ்சய் ராவத், மணீஷ் சிசோடியா என எதிர்க்கட்சிகளை மட்டுமே தாக்கும் ஏவல் படையாகத்தான் இருக்கிறது அமலாக்கத்துறை.

 

விஜயபாஸ்கர் குட்கா வழக்கில் ரூபாய் 25 கோடிக்கும் மேல் ஊழல் செய்தார். ஆனால், அவர் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தவில்லை. செந்தில் பாலாஜியை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? அதே போல் கர்நாடகாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரை 8 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக காலையில் கைது செய்து மாலையில் விடுவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரை நடந்த ஊழல் என்று சொல்கிறார்கள். 10 வருடங்கள் கழித்து அமலாக்கத்துறையினர் கைது செய்வது என்பது நகைச்சுவை நாடகமாக இருக்கிறது. 

 

செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் அவர் ஆதாரத்தை கலைத்து விடுவார் என்று சொல்கிறார்களே?

10 வருடங்களுக்கு முன்னே நடந்த ஊழலின் ஆதாரத்தை இப்போதுதான் செந்தில் பாலாஜி வெளியே வந்து  கலைத்து விடுவாரா? இதெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை. 

 

செந்தில் பாலாஜியின் வீட்டில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?

அதிமுக ஆட்சியில் 10 வருடங்களுக்கு முன் நடந்த ஊழலுக்கு 2023 ஆம் ஆண்டில் தலைமை செயலகத்தில் சென்று ஆவணங்கள் இருக்கும் எனத் தேடி வந்தனர். இதிலிருந்து, தலைமை செயலகத்திற்குள்ளே எங்களால் வர முடியும் என்பதை காட்டுவதற்கும், திமுகவை சீண்டிப் பார்ப்பதற்கும் தான் இது போன்ற வேலையை செய்து வருகின்றனர். அங்கு தேடியும் ஒரு ஆதாரத்தையும் எடுக்கவில்லை. இதைக் கண்டு அச்சப்படக்கூடிய இயக்கம் திமுக கிடையாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஏன் ஒத்துழைப்பு தரவில்லை?

இந்த கைது முறையே தவறு என்றுதான் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறோம். அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்வது வழக்கமாக அதிகாரிகள் சொல்லும் சொல் தான்.

 

நீதிமன்றக் காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியுமா?

ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். அதன் அடிப்படையில் தான் நீதிமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம்.

 

 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்