Skip to main content

 எடப்பாடிக்கே சேலஞ்ச்  விட்ட அமைச்சர்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த ரிப்போர்ட். அதனால் 19-ந்தேதி நடக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என எடப்பாடி அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார்.

 

eps



அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க. வேகமாக களம் காண்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி. "மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் எனக்கு மந்திரி பதவி வேண்டும்' என கண்டிஷன் போட்டுக்கொண்டிருக்கும் தம்பிதுரையிடம், "நீங்கள் கரூர் பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தால் மட்டும் போதாது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது கட்சி வெற்றிபெற்றால்தான் மத்திய மந்திரி பதவி'' என எதிர் கண்டிஷன் போட்டிருக்கிறார் எடப்பாடி.

 

senthilbalaji



அவருடன் சீனியர் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், போக்குவரத்து விஜயபாஸ்கர் ஆகியோரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக்கியுள்ளார். இவர்களுடன் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கே.சி.கருப்பணன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் திருச்சி, கரூர், நாமக்கல் பகுதி மா.செ.க்கள், ஒன்றிய செயலாளர்கள் என பெரிய படையே களமிறங்கியுள்ளது. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது எடப்பாடி பேசியிருக்கிறார். 

 

admk



"செந்தில் பாலாஜி கவுண்டர். அ.தி.மு.க. மேற்கு மாவட்டத்தில்  கவுண்டர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பதற்கு ஒரே காரணம் தி.மு.க.வில் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த வலிமையான தலைவர்கள் இல்லை. அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிட்டால், மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வை வளர்த்துவிடுவார். எனவே அவரைத் தோற்கடிக்க வேண்டும்'' என உருக்கமாக அரவக்குறிச்சி தேர்தல் பணியில் உள்ள சாதாரண அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.
 

admk



"திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, துரைக்கண்ணு, ராஜலட்சுமி ஆகிய அமைச்சர்களோடு கட்சியின் மற்றொரு சீனியர் தலைவரான வைத்தியலிங்கத்தை, தம்பிதுரைக்கு அட்வைஸ் செய்து அனுப்பியது போல அனுப்பியிருக்கிறார் எடப்பாடி. அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு சீனியர் அமைச்சரான சி.வி.சண்முகம், காமராஜ் ஆகியோருடன் சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் மற்றும் பக்கத்து மாவட்ட அமைச்சரான ராஜலட்சுமியைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். ஒட்டப்பிடாரத்திற்கு கட்சியின் சீனியர் தலைவரான ஓ.எஸ்.மணியனை மற்ற இரண்டு தொகுதிகளில் சீனியர்களை களமிறக்கியது போலவே களமிறக்கியிருக்கிறார். ஆனால் சூலூர் தொகுதியில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக திருப்பூர் மாவட்ட அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன் கூட தொகுதிப் பக்கம் போகவில்லை. முழுக்க முழுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பொறுப்பில்தான் தேர்தல் வேலைகளை எடப்பாடி ஒப்படைத்துள்ளார்.

 

eps



இந்த அமைச்சர் பட்டாளத்திற்கு என்ன வேலை என எடப்பாடி வேலை பிரிவினை ஒன்றையும் தந்துள்ளார். ஒவ்வொரு அமைச்சரும் 14,000 வாக்குகளுக்கு பொறுப்பாளர். அவர்கள் 14,000 வாக்குகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். நான்கு தொகுதிகளில் சூலூரில்தான் அதிகபட்ச தொகையாக ஓட்டுக்கு 4,000 ரூபாய் கொடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அரவக்குறிச்சியில் அது ஓட்டுக்கு 3,000 ஆக குறைந்துள்ளது. ஒட்டப்பிடாரத்தில் 2,000 என ஓட்டுக்கு தர முடிவு செய்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு 2,000 இப்போதே முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 

"இதில் அதிக வருமானம் இல்லாத அமைச்சர்களின் சுமையை வருமானம் அதிகம் பார்க்கும் துறையை வைத்துள்ள அமைச்சர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விநியோகத்தை மாநில உளவுத்துறை போலீசாரும் சி.பி.சி.ஐ.டி. தலைவரான ஜாபர்சேட்டும் கண்காணிப்பார்கள் என எடப்பாடி ஒரு வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

இந்த வேலைத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது... அதில் உள்ள சங்கடங்கள், இந்த பண விநியோகத்தை எதிர்க்கட்சியான தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எப்படி எதிர்கொள்கின்றன என அ.தி.மு.க.வினரிடம் கேட்டோம். "அரவக்குறிச்சியில் அ.தி.மு.க., ஓட்டுக்கு 3,000 ரூபாய் பணம் கொடுத்தால் அதைவிட அதிகமாக 4,000 ரூபாய் பணம் கொடுக்க செந்தில்பாலாஜி ஏற்பாடு  செய்துவிட்டார். அதனால் அரவக்குறிச்சியில் பண விநியோகத்தில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் காமராஜ், "நான் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தவன். கலைஞரின் தொகுதியிலேயே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயிக்கும் அளவிற்கு பணத்தை அள்ளி வீசினேன். ஒட்டப்பிடாரத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைப்பேன்' என எடப்பாடிக்கே சேலஞ்ச் விட்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக சி.வி.சண்முகமும் பண விநியோகத்தில் வேகம் காட்டுகிறார். இவர்களோடு சீனியர் தலைவரான வைத்தியலிங்கமும் பண விநியோகத்தில் முனைப்பு காட்டுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அரவக்குறிச்சி தேர்தல் களத்தில் இருக்கும் சுகாதாரம் விஜயபாஸ்கர் மூலம் பணத்தை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. சூலூர் தொகுதியில் ஒன்மேன் ஷோவாக ஒட்டுமொத்த பண விநியோகத்தையும் எஸ்.பி.வேலுமணி மேற்கொள்கிறார். இந்த பண விநியோகத்தைத்தான் அ.தி.மு.க. தனது பலமாகப் பார்க்கிறது. இதன்மூலம்தான் சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்கும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கடும் போட்டியை ஏற்படுத்துவோம் என்கிற அ.தி.மு.க.வினர், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை வீழ்த்த, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வும் கைகோர்த்திருக்கிறது'' என்கிறார்கள்.
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.