நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள கரோனா இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்டவை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், தான் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஆரோக்கியமான உணவுகள், நல்ல தூக்கம், சிறிய உடற்பயிற்சிகள் மூலம் நெருக்கடியான இந்த நேரத்தில் அனைவரும் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.