Skip to main content

“மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல” - பேரரசு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
perarasu speech in bhai movie press meet

கமலநாதன் புவன் குமார் இயக்கத்தில் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா, தீரஜ் கெர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாய்’. கே.ஆர்.எஸ். ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜித்தின் கே ரோஷன் இசையமைத்துள்ளார். பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் ட்ரைலர் விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 

கே. ராஜன் பேசும்போது, “பாய் என்றால் சகோதரன் என்ற பொருள். நாம் அனைவருமே சகோதரர்கள். இந்தப் படமும் சகோதரத்துவத்தைத்தான் பேசுகிறது .இந்த உலகத்தில் சகோதரத்துவம் வளர வேண்டும். மனிதநேயம் வளர வேண்டும். இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர். அதாவது  கொடுப்பவன் பெரியவன். கொடுக்காதவன் கீழ்குலத்தோன் இவ்வளவுதான். வேறு எந்தப் பிரிவும் கிடையாது. இது மாதிரி மேடைகளில் பேசும்போது எங்களுக்கு ஒளிவு மறைவு கிடையாது. வெளிப்படையாகத்தான் பேசுவோம். ஆனால் வாழ்த்த அழைக்கும்போது சுமாராக உள்ள படத்தைக் கூட வாழ்த்தி விட்டுத்தான் வருவோம். ஆனால் இதன் ட்ரெய்லர் நன்றாக உள்ளது. உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தி ஸ்ரீநியாதான் இங்கே தயாரிப்பாளராக வந்துள்ளார். அவர் ஆங்கிலம் கலந்து பேசினார். தமிழையும் மறக்கக்கூடாது.

ஒரு முறை எம்ஜிஆரிடம்  நீங்கள் வாரி வாரி வழங்குகிறீர்களே என்று கேட்டபோது, அவர் அதற்குக் காரணம் என் குருநாதர் என்எஸ்கேதான் என்றார். ஏனென்றால் என்.எஸ்.கே நாடகக் குழுவில் எம்ஜிஆர் மாத சம்பளத்தில் நடித்தவர். எம்ஜிஆரே போற்றக்கூடிய அளவுக்கு வாரி வழங்கியவர் என்.எஸ்.கே. அவர் கடைசிவரை கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்தளவுக்கு மனிதநேயம் கொண்டவர். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இதை உலகத்தில் யாருமே இதைச் சொல்லவில்லை. ஒருவனை பழிவாங்க அவனுக்கு நல்லதுதான் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர்தான் கூறினார். அப்படி மனிதநேயத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார். 

இயக்குநர் பேரரசு பேசும்போது, "முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது. அதற்காகப் பாராட்டுகிறேன். இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத்தான் இருக்கும். இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம். எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார். எங்கோ ஏதோ ஒரு இடத்தில் மதப் பிரச்சினை வந்தால் அதை அரசியலாக்கி விடுகிறார்கள். ஆனால் நாம் அப்படி  நினைப்பதில்லை. படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம். மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை. 

ஒரு குண்டு வைத்து 100 பேரைக் கொல்கிறான் என்றால் அவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது. இந்துவாக இருக்க முடியாது. வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க முடியாது. அன்னை தெரசா கருணையின் உருவம். அவரை யாராவது ஒரு கிறிஸ்தவப் பெண்மணியாக பார்க்கிறோமா? அப்துல் கலாமை யாராவது இஸ்லாமியராகப் பார்க்கிறோமா? அவரை மனிதநேயம் உள்ள இந்தியனாகத்தான் பார்க்கிறோம். கர்மவீரர் காமராஜர் இந்துவாக பிறந்தவர்தான். ஆனால் அவரை யாராவது இந்துவாகப் பார்க்கிறோமா? மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராகத்தான் பார்க்கிறோம். மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை. ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா? வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம்தான். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம்தான். அப்படிப் பார்க்கும்போது பாய் மிகச் சிறந்த படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள். இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன. நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து கொண்டாட வேண்டும்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை” - பேரரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
perarasu about vijay in Ninaivellam Neeyada Audio Launch

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  ‘நினைவெல்லாம் நீயடா’. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். ‘அப்பா’  படம் மூலம் கவனம் ஈர்த்த யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. 

இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம். ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார். 

Next Story

“இனிமேல் அப்படி இருக்கக் கூடாது” - விஜய்க்கு ராஜன் வழங்கிய அறிவுரை

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
krajan advice to vijay for his politival entry

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நினைவெல்லாம் நீயடா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அவர் பேசுகையில், “அதிக சம்பளம் வாங்கும் விஜய் தற்போது புதிதாக தலைவர் ஆகியிருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் அல்லது முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்தால், அதற்கென சில வழிகள் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போனதை பார்க்கிறோம்.  

ஆனால் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகி விட்டார் என்றால், அவரது அடிச்சுவரை கூட தொடுவதற்கு இன்று யாரும் இல்லை. அவர் காங்கிரஸில் முதலில் இருந்து, திமுக வந்தார். அங்கு உழைத்தார், மக்களை சந்தித்தார். கிராமம் முழுவதும் இறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்தார். தன்னுடைய வருவாயை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தார். காரணம் அவர் சிறு வயதிலே சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டார்.  அந்த கஷ்டம் ஏழைகள் படக்கூடாது என பாடுபட்டார்.  தம்பி விஜய்க்கு சொல்கிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர் செய்ததில் 15 அல்லது 20 சதவீதம் தொண்டு செய்ய வேண்டும். இறங்கி வந்து மக்களோடு பழகுங்கள். மேடையில் இருந்து கொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை வெளியிட சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் நீங்கள் அப்படி இருக்கக் கூடாது.  

நீங்கள் என்ன கொள்கை வகுக்கப் போகிறீர்கள், அதை எப்படி மக்களிடம் சேர்க்க போகிறீர்கள் என்பதை வைத்து மக்கள் ஆதரவு கிடைத்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். யாரையும் நம்பிடாதீர்கள், நேரடியாக வாருங்கள். காமராஜ், அம்பேத்கர், பெரியாரை படி என்று சொன்னீர்கள். இன்னொன்றும் சொல்கிறேன், அண்ணா, கலைஞரை, எம்.ஜி.ஆரைப் படியுங்கள். சிறந்த தலைவராக வரலாம்” என்றார்.