Skip to main content

“ஆடியோ விழாவில் பங்கேற்ற பிறகுதான் முழு சம்பளம் கொடுக்கணும்” - பேரரசு யோசனை

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
perarasu latest speech

'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இப்படம் 2கே கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேரரசு பேசுகையில், ''இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.

இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இதுபோன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து இங்கு வருகை தந்திருக்கிறேன். இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது.

இன்றைக்கு விவாகரத்து அதிகரித்துவிட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன் - மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகத் தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் 'சிக்லெட்ஸ்' போன்ற படங்கள் வெளிவருவது அவசியம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை” - பேரரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
perarasu about vijay in Ninaivellam Neeyada Audio Launch

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  ‘நினைவெல்லாம் நீயடா’. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். ‘அப்பா’  படம் மூலம் கவனம் ஈர்த்த யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. 

இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம். ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார். 

Next Story

“எம்.ஜி.ஆரை போன்று விஜயகாந்த்தும் மக்களை நேசித்தார்...” - இயக்குநர் பேரரசு

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Director perarasu condoled the demise of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் இயக்குநர் பேரரசு விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் அவரிடம் தொடர்புகொண்டபோது, “கேப்டன் விஜயகாந்த்தை ஒரு நடிகராக, அரசியல் கட்சி தலைவராக பார்த்ததை விட அவரை ஒரு மிகசிறந்த மனிதராக பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை நாம் இன்று இழந்திருக்கிறோம். இது திரைத்துறைக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்கே மிகபெரிய இழப்பு. சினிமாவில் நடித்து பேர் புகழ் பெற்றுவிட்டோம் என்று ஒதுங்காமல், அவரால் என்னவெல்லாம் தமிழ் திரையுலகிற்கு செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார். நடிகர் சங்க தலைவராக அவர் இருக்கும் போது,  நடிகர் சங்க கடனில் முழ்கும் நிலையில் இருந்தது. அப்போது ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் நடிகைகளை ஒன்றாக சேர்த்து நிக்ழ்ச்சி நடத்தி அதில் வந்த வருமானத்தை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து மீட்டார். தற்போது நடிகர்கள் சங்கத்திற்கான கட்டடம் உருவாவதற்கும் கூட அவரின் அந்த முயற்சிதான் காரணம். அப்போது அவரின் ஆளுமை வெளிப்பட்டது. 

விஜயகாந்த், 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களை இயக்குநராக அறிமுகப்படுத்தியுள்ளார். புது புது இயக்குநர்கள், புது புது தயாரிப்பாளர்கள் என சினிமா துறையில் பலபேருக்கு வழிகாட்டியுள்ளார். குறிப்பாக சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்திய முக்கியமானவர் விஜயகாந்த். அவருக்கு முன்னால் யாரும் திரைப்பட கல்லூரி மாண்வர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பளித்த பிறகுதான், திரைப்பட கல்லூரி பிரமலமானது என்று கூட கூறலாம். அப்படி விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பின் மூலம் வந்தவர்கள்தான் ஆர்.கே.செல்வமணி, அரவிந்த் உள்ளிட்ட பலர். இப்போது பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரையும் விஜயகாந்த் தான் வாய்ப்பு கொடுத்து உருவாக்கினார். இயக்குநர்களை மிகவும் மதிக்க கூடையவர். 

நான் அவரை வைத்து தர்மபுரி என்ற படதை இயக்கினேன்; அப்போது எந்தவிதமான தலையீடும் இருக்காது. ஒரு கதை அவருக்கு பிடித்துவிட்டது என்றால், அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்வார். படப்பிடிப்பின் போது தாமதமாக வரவேமாட்டார். தர்மபுரி படத்தின் போது ஒரு நாள் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போனது; அதிகாலை 3 மணிக்குத்தான் படப்பிடிப்பு முடிந்தது. விஜயகாந்த சாரை அனுப்பி வைத்தேன். அப்போது அவரிடம், நாளை காலை 9 மணிக்கு ஷூட்டிங் வந்துருங்க சார்ன்னு சொன்ன சரின்னு சொல்லிட்டு, நீங்க காலையில் எத்தனை மணிக்கு படப்பிடிப்பு தொடங்குவிங்க என்று கேட்டார். 7 மணிக்கு தொடங்குவேன் என்றதும், நீங்க மட்டும் 7 மணிக்கே வரீங்க என்ன மட்டும் 9 மணிக்கு வர சொல்றீங்க என்று கேட்டுவிட்டு நானும் 7 மணிக்கே வந்துவிடுகிறேன் என்று கூறி 6.30 மணிக்கே வந்துவிட்டார். அப்படி படப்பிடிப்புக்கு ஒருநாள் கூட தமதமாக வந்ததேயில்லை. அவருடன் பணியாற்றிய இயக்குநர்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள். எல்லாரிடமும் கேட்டு பாருங்கள் யாரும் எந்த குறையும் சொல்லமாட்டர்கள்.

திரையுலகம் போன்று மக்களுக்கும் நன்மைகளை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் போன்று விஜயகாந்த்தும் மக்களை நேசித்தார். அதனால் தான் அவரை மக்களும் அரசியலில் வெற்றிபெற வைத்தனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு திரைத்துறையில் இருந்து வந்து அரசியலில் சாதித்தவர் விஜயகாந்த் மட்டுமே. அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அரசியலில் இன்னும் நல்ல நிலைமைக்கு வந்திருப்பார். ஆனால், தற்போது அவரின் இழப்பு அதிர்ச்சியை தருகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், ரசிகர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.