
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது.
இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ஜூலை 4ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கின், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டர். நிகழ்வில் மாரி செல்வராஜ் பேசுகையில், “பறந்து போ படம் எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று போய் பார்க்க முடியாதது எனக்கு வருத்தம். காமெடி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை பலமுறை பார்த்து நினைவில் வைத்து பேசி மகிழ்ந்திருக்கிறோம்.
எங்கள் வாழ்க்கையை மாற்றிய தருணம் ஈழப்பிரச்சினை தான். அதில் இருந்துதான் படத்திலும் தீவிரமாக பேச ஆரம்பித்தோம். இல்லை என்றால் நான் 'களவாணி' போன்ற கமர்ஷியல் கிராமத்துப் படங்களைக் கொடுத்திருப்போம். சின்ன வயதில் நான் வாழாத வாழ்க்கையை இந்த படம் சொல்லி இருக்கிறது. தான் உருவாக்கும் கதாபாத்திரங்களில் பொய் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் ராம். இந்தப் படம் எங்கள் குடும்பத்தின் திருவிழா. 'வாழை' படத்தைக் கொண்டாடியது போலவே ரசிகர்கள் நிச்சயம் 'பறந்து போ' படத்தையும் கொண்டாடுவார்கள்” என்றார்.